தொடரும் தோழர்கள்

வியாழன், ஜனவரி 27, 2011

இன்னும் மறக்கவில்லை!

சாந்தோம் கடற்கரையின்
சாயங்கால நெருக்கங்கள்
இன்னும் மறக்கவில்லை!

கபாலி கோவில் பிரகாரத்தின்
கண்பேசும் பாஷைகள்
இன்னும் மறக்கவில்லை!

புளூ டயமண்ட் குளிர் இருட்டின்
உன் உஷ்ண ஸ்பரிசங்கள்
இன்னும் மறக்கவில்லை!

எல்பின்ஸ்டன் ஜஃபார்கோவின்
உன் எச்சில் பீச்மெல்பா
இன்னும் மறக்கவில்லை!

ஆனால்,

நிச்சயமாய் மறந்தது ஒன்று உண்டு—

இரக்கமே இல்லாமல் நீ எறிந்த வார்த்தைகள்
“என்னை மறந்து விடுங்கள்”

அதை மறந்ததனால்தான் உன்னை
இன்னும் மறக்கவில்லை,இன்னும் மறக்கவில்லை!

இன்று--
சாந்தோம் கடற்கரை மறைந்து விட்டது;
புளூ டயமண்ட் தியேட்டர் தொலைந்து விட்டது;
எல்பின்ஸ்டன் டாக்கீஸ் இடிந்து விட்டது!.
ஆனால்?
அவற்றுடன் கலந்த உன் நினைவுகள்?..

சிறு குறிப்பு:-1)சாந்தோம் கடற்கரை-சிறிய,கூட்டமில்லாத இனிய கடற்கரை.படகு மறைவுகளும் உண்டு.இன்று அங்கு ஏதோ குப்பம் வந்து விட்டது.
2)புளூ டயமண்ட் தியேட்டர்-சஃபைர்,எமரால்டுடன் சேர்ந்த மூன்றாவது தியேட்டர்.நாள் முழுவதும் படம் ஓடும்.எப்போது வேண்டுமானாலும் உள்ளே போகலாம்;எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்.இதை விட வேறென்ன வேண்டும்!
3)நியூ எல்ஃபின்ஸ்டன்- அண்ணா சாலையில் இருந்தது;ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும்.இங்கிருந்த ஜஃபார்கோ ஐஸ்க்ரீம் பார்லரில் பீச் மெல்பா அலாதி சுவை!அதுவும், ”பணிமொழிவாலெயிறு ஊறிய நீருடன்” சேர்ந்தால்?!

(பி.கு.நண்பர் கக்கு மாணிக்கம் அவர்கள் சென்னை பித்தனை மாற்றி சென்னை காதலனாக்கி விட்டார்.சென்னையின் காதலனாக மட்டும் இல்லாமல் அக்காலச் சென்னையில் ஒரு காதலனாகவும் இருதிருந்தால்?இன்றில்லாமல் போய்விட்ட சில இடங்களையும் என்றுமே இல்லாத காதலியையும் இணைத்துப் பார்க்கிறது இக்கவிதை.)

28 கருத்துகள்:

  1. இதெல்லாம் இருக்கட்டும். இந்த மறக்கவில்லை பற்றி உங்கள் தங்கமணிக்கு தெரியுமா ??

    பதிலளிநீக்கு
  2. எல் கே கூறியது...

    // இதெல்லாம் இருக்கட்டும். இந்த மறக்கவில்லை பற்றி உங்கள் தங்கமணிக்கு தெரியுமா ??//
    ஹி,ஹி!இதை,இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
  3. சுடச் சுடக் கருத்துத் தந்ததற்கு நன்றி எல் கே!

    பதிலளிநீக்கு
  4. நினைவுகள் அழகுதான். முத்தாய்பாக நீங்கள் முடித்த விதம் சிரிப்பை வர வழைத்தது.அது என்ன? ...
    // இன்றில்லாமல் போய்விட்ட சில இடங்களையும் என்றுமே இல்லாத காதலியையும் இணைத்துப் பார்க்கிறது இக்கவிதை.//

    // உன் எச்சில் பீச்மெல்பா
    இன்னும் மறக்கவில்லை!//

    என்றுமே இல்லாத காதலி என்று டகால்டி வேலைகள் செய்வானேன்? நீங்கள் உண்மையிலேயே சென்னையில் காதலித்தவர்தான். :)))

    பதிலளிநீக்கு
  5. மலரும் நினைவுகள் அருமைங்க

    பதிலளிநீக்கு
  6. கவிதை அருமை, சென்னைபித்தன் அய்யாவுக்கு இளமை திரும்பி விட்டது போல.....கவிதை அவ்வளவு இளமை இனிமை புதுமை

    பதிலளிநீக்கு
  7. கக்கு - மாணிக்கம் கூறியது...
    //என்றுமே இல்லாத காதலி என்று டகால்டி வேலைகள் செய்வானேன்?//
    :-Dஉண்மையைச் சொன்னா உலகம் ஏத்துக்கிறதே இல்லை!அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்!
    எப்படியோ பித்தனைக் காதலனாக நிலை நாட்டி விட்டீர்கள்;ஆனால் காதலர்கள் எல்லோருமே பித்தர்கள்தானே!

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,மாணிக்கம்!

    பதிலளிநீக்கு
  9. VELU.G கூறியது...

    //மலரும் நினைவுகள் அருமைங்க//
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வேலு!

    பதிலளிநீக்கு
  10. ரஹீம் கஸாலி கூறியது...

    //கவிதை அருமை, சென்னைபித்தன் அய்யாவுக்கு இளமை திரும்பி விட்டது போல.....கவிதை அவ்வளவு இளமை இனிமை புதுமை//
    கஸாலி அவர்களே,வயது கூடுவது என் உடலுக்குத்தான்; மனதுக்கு அல்ல!
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  11. அமைதியான கடலில் மலரும் கவிதை வடிவ நினைவலைகள்

    பதிலளிநீக்கு
  12. ஏதோ புதிய முயற்சி போன்று தோன்றுகிறது. இருப்பினும் சென்னை, காதலி இரண்டையும் இணைத்த விதம் அருமை. இனி இந்த வகை தொடருமா

    பதிலளிநீக்கு
  13. பாரத்... பாரதி... கூறியது...

    //அமைதியான கடலில் மலரும் கவிதை வடிவ நினைவலைகள்//
    நன்றி பாரதி!

    //ஏதோ புதிய முயற்சி போன்று தோன்றுகிறது. இருப்பினும் சென்னை, காதலி இரண்டையும் இணைத்த விதம் அருமை. இனி இந்த வகை தொடருமா//

    முயல்வேன்!வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. "இரக்கமே இல்லாமல் நீ எறிந்த வார்த்தைகள்
    “என்னை மறந்து விடுங்கள்”

    அதை மறந்ததனால்தான் உன்னை
    இன்னும் மறக்கவில்லை,இன்னும் மறக்கவில்லை!"

    ஏதோ படத்தில் கேட்ட வசனம் நினைவிற்கு வந்தது.
    காதலில் தோற்றவர்களில் அதிகம் பாதிக்கபடுவது ஆண்கள் தான். பெண்ணோ இன்னொருவனை மணந்து கொண்டு பிள்ளைகள் பெற்றுக்கொண்டு பழைய நினைவுகளை அறவே மறந்து போவார்கள். உங்களை மணந்தால் நீங்கள் தான் கடவுள் ... இன்னொருவனை மணந்தால் அவன்தான் கடவுள் !
    ஆக பெண்ணிற்கு யார் வேண்டுமானாலும் கடவுள் ஆகலாம்!
    நிற்க , என்னை மறந்து போ என்று சொன்னதுடன் விட்டாளே ; அண்ணா என்று அழைக்காமல் !
    எங்கோ பாதிக்கப்பட்டது தெரிகிறது .. ஆனால் பதிவுலகத்திற்கு ஓர் கவிஞன் கிடைத்து விட்டானே !
    வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  15. ஆகா.. அருமை.
    எத்தனை நினைவுகளைத் தோண்டியெடுத்தேன் என்று கணக்கு பார்கக் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  16. பித்தத்தில் தான் எத்தனை வகை.. ?

    அலசுங்கள் படிப்போம்..

    பதிலளிநீக்கு
  17. Vasu கூறியது...
    //பழைய நினைவுகளை அறவே மறந்து போவார்கள். //
    நமக்கென்ன தெரியும் வாசு?அவர்களும் நினைவுகளைப் புதைத்து வைத்துக் காலம் முழுதும் ஊமைச்சோகத்தில் தவிக்கலாம்!
    //ஆனால் பதிவுலகத்திற்கு ஓர் கவிஞன் கிடைத்து விட்டானே !//
    என்னையும் ஒரு கவிஞனாக அங்கீகரித்தமைக்கு நன்றி!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. அப்பாதுரை கூறியது...

    //ஆகா.. அருமை.
    எத்தனை நினைவுகளைத் தோண்டியெடுத்தேன் என்று கணக்கு பார்கக் வேண்டும்.//
    கணக்கில் அடங்காதோ!?
    வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  19. @பயணமும் எண்ணங்களும்.
    எம்பெருமானே ஒரு பித்தன்தானே!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாந்தி அவர்களே!

    பதிலளிநீக்கு
  20. கவிதை அருமை...
    கண்டிப்பாக நான் மறக்க மாட்டேன்..
    இதையும் கொஞ்சம் படிங்க
    http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  21. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாட்டு ரசிகரே!

    பதிலளிநீக்கு
  22. எனக்குத்தெரியும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காதலி உருவகக்காதலி என்று.

    ஆனால் நீங்கள் பனைமரத்தின் கீழிருந்து கொண்டல்லவா பாலைக்குடித்து கொண்டிருக்கிறீர்கள்!!!

    அருமையான புதுக்கவிதை!. கவிதைமூலம் தொலைந்து போன இடங்களையும், சிலரது கலைந்து போன கனவுகளையும் கண் எதிரே கொண்டுவந்ததற்கு, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. வே.நடனசபாபதி கூறியது...

    //எனக்குத்தெரியும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காதலி உருவகக்காதலி என்று.

    ஆனால் நீங்கள் பனைமரத்தின் கீழிருந்து கொண்டல்லவா பாலைக்குடித்து கொண்டிருக்கிறீர்கள்!!!//
    அருமையாக்ச் சொன்னீர்கள்! என்னை நம்புவதற்கு ஒருவராவது இருக்கிறாரே! மகிழ்ச்சிதான்.
    வருகைக்கும் பராட்டுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  24. ஒளிவுமறைவான இடங்களைப்பற்றி சொன்னீர்கள் ஆனால் எல்லாம் எப்படிசார் கண்டுபிடிச்சீங்க. வாழ்ந்திருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  25. இதெல்லாம் தெரியாம ஒரு கல்லூரி மாணவன் மெட்ராஸில்(சென்னை அல்ல) இருக்க முடியுமா,என்னதான் சாமியார் கல்லூரியாக இருந்தாலும்!?
    வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  26. அன்பின் பித்தன் - கக்கு மாணிக்கத்தின் வேலையா இது ... சரி ... இல்லாத காதலியினை நினைத்து எழுதப்பட்ட கவிதையா இது .... - காதலிக்க நேரமில்லை - காதலிப்பார் யாருமில்லை - வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை .... அதனால் தோன்றிய கற்பனைக் காதலியும் மறைந்து விட்ட இடங்களும் கவிதை எழுதத் தூண்டியதா ? கவிதை நன்று - இரசித்தேன்..... வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  27. @சீனா.
    ஆம்.கக்குதான் culprit!
    இல்லாததை இருந்ததாகக் கற்பனை செய்வது ஒரு மகிழ்ச்சிதானே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  28. இதையும் இப்போது படித்தேன் ஐயா. நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு