தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 29, 2013

அருகில் அமர அனுமதி கேட்ட பெண்!



சென்னையின் பொத்திக் காக்கும் கலாசாரத்தில் பேருந்தில் தெரியாத ஒரு பெண்ணின் அருகில் ஆண் அமர முடியாதுஅவ்வாறு அமர்பவர் ஒரு முதியவராகவே இருப்பினும் அப் பெண் முகத்தைச் சுளித்துக் கொள்வாள்.

ஆனால் நேற்று ஒரு வித்தியாசமான அனுபவம். 

பேருந்தில் செல்லும்போது என் அருகில் அமர்ந் திருந்தவர் இறங்கி விட இருக்கை காலி. 
அப்போது ஒரு பெண் அருகில் வந்து இங்கு அமரலாமா என என் அனுமதி கேட்டாள். 

எனக்குப் புரியவில்லை,ஏன் அந்தக் கேள்வி என.ஒரு பெண்ணின் அருகில் அமர ஆண் அனுமதி கேட்டால் அது இங்கு நியாயம்.ஆனால் ஓர் ஆணின் அருகில் அமர ஒரு பெண் அனுமதி கேட்பது எனக்குப் புதுமையாகப் பட்டது. 

என்னைப் பார்த்தால் பெண்களை வெறுப்பவன் போல் தோன்றியதா?அல்லது பெண்களுக்
காக ஒதுக்கப்பட்டாத இருக்கை என்பதால்   கேட்டாளா? ஒரு வேளை அக்கேள்வியின் விளைவாக என் முகத்தில் தோன்றும் மாறுதல்களைப் பார்த்து விட்டு அமரலாம் என்று கேட்டாளா?தெரியவில்லை.

ஒரு கேள்வியையே என் பதிலாக்கினேன்…”ஏன் கூடாது?”

அவள் சிரித்தவாறு அமர்ந்து கொண்டாள்.

22 ஆண்டுகளுக்கு முன்

அப்போது நான் அரியானாவில் வங்கி ஆய்வுப் பணியில் இருந்தேன்.

ஃபரிதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சுற்றியுள்ள ஊர்களில் உள்ள கிளைகளுக்கு ஆய்வுக்குச்  சென்று வர வேண்டும்.

பேருந்தில்தான் செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்கையில் ஒரு பெண்,.டி.ஐயில் படிப்பவள் எனத் தெரிந்தது,அருகில் இருந்த இருக்கை காலியானது.

சென்னைக்குப் பழகிப்போனநான் ,அருகில் நின்றிருந்தபோதும் அதில் அமரவில்லை.

அப்போது அப்பெண் என்னைப் பார்த்துச் சொன்னாள்,”சீக்கிரம் உட்காருங்கள்

நான் உடனே அமர்ந்து கொண்டு அவளை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தேன்.

அவள் சொன்னாள்நீங்கள் உட்காரவில்லையெனில் அதோ நிற்கிறான் பாருங்கள் (ஒரு இளைஞனைக்காட்டி) அவன் அமர்ந்து விடுவான்.அவன் சரியில்லை.எனவேதான் உங்களை சீக்கிரமாக அமரச் சொன்னேன்.”

எந்த ஊராயிருந்தாலும், சில்மிஷம் சில ஆண்கள் இருக்கத்தான் செய்வார்கள்.அவர்களை எப்படிக் கையாள்வது என்பதற்கான ஒரு பாடம் அந்தப் பெண்ணின் செய்கை.ஒரு வேளை அவன் அவள் அருகில் அமர நேர்ந்திருந்தாலும்,அவனது விஷமத்தைக் காட்ட அவள் வாய்ப்புக் கொடுத்திருக்க மாட்டாள்.தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியை வேறொருவன் உற்று நோக்கவே அதன் காரணமாகத் தலைவன் திரும்பி வரும் வரைத் தன் முகத்தைக் குரங்கு முகமாக்கிகொண்டு வாழும் காலமல்ல இது.

வள்ளுவர் அழகாகச் சொல்கிறார்....

“சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
 நிறைகாக்குங் காப்பே தலை”(57)

இன்றைய பெண்கள் பாரதியின் புதுமைப் பெண்கள்.

தற்காத்துக் கொள்ளத் தெரிந்தவர்கள்.

பெண்மையைப் போற்றுவோம்!மதிப்போம்!


34 கருத்துகள்:

  1. வித்தியாசமான குறள் விளக்கம்... நீங்களும் அழகாக சொல்லி விட்டீர்கள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. எளிய அனுபவத்தோடு குறள் விளக்கம். அருமை ஐயா!

    பதிலளிநீக்கு
  3. பெண்மையைப் போற்றி எழுதிய சிறப்பான பகிர்விற்கு
    என் மனமுவந்த பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் ஐயா .பிரயாணம் தொடரட்டும் .

    பதிலளிநீக்கு
  4. ஒரு பதிவிலே ....

    நீங்கள் சென்ற வீட்டிலே பேய் வந்துவிட்டதோ ... என ஐயம் கொண்டு இருந்தீர்கள்.

    இந்த பதிவிலே....

    அதே... ஐ பக்கத்தில் அமர....


    சும்மா சொன்னேன்.
    in lighter vein and humour
    சண்டைக்கு வந்து விடாதீர்கள்.
    நீங்க வர மாட்டீங்க...ஆனா அது வந்திடுச்சுன்னா சிரமம்.

    நான் எப்பவுமே பயந்த சுபாவம்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  5. எனக்கும், முதன் முதல் 1967 இல் தில்லி சென்றபோது, இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டது. ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்த இருக்கை அருகே இடம் காலியாக இருந்தும் நான் நின்றுகொண்டிருந்தேன். அவள் என்னைப் பார்த்து இந்தியில் ‘அமருங்கள்’ என்று சொல்லியும், நம் ஊர் பழக்கத்தால் நான் அமரவில்லை.அவள் என்னை வினோதமாகப் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

    தாங்கள் தந்துள்ள குறளோடு இந்த குறளையும் தரலாம்.

    “பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்.” (54)

    பதிலளிநீக்கு
  6. நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். இதுவும் உண்மை. (இன்னொரு உண்மைக்கு வெங்கட் நாகராஜ் பக்கத்துக்குச் செல்லவும்!) :)))

    பதிலளிநீக்கு
  7. . அந்தப் பெண் பாராட்டுக்குரியவர். எழுப்பி விட்டு வேறு இடத்தில் அமர சொல்பவர்களும் உண்டு

    பதிலளிநீக்கு
  8. இன்னும் இளமைத் தோற்றத்துடன்
    இருப்பதால் வந்த பிரச்சனை இது
    என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. பெண்மையைப் போற்றுவோம்!மதிப்போம்!\\\\\\\\

    அருமை

    என்னைப் பார்த்தால் பெண்களை வெறுப்பவன் போல் தோன்றியதா?\\\\\\\\

    ஹி ஹி

    பதிலளிநீக்கு
  10. நான் எழுபதுகளில் சென்னையிலிருந்து முதல் முறையாக மும்பை மாற்றலாகிச் சென்ற போதும் எனக்கு இத்தகைய தயக்கங்கள் ஏற்பட்டதுண்டு. ஒரு இருக்கைக்கு இரண்டு மூன்று பெண்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அமர்வதில் நம்மை பொருட்படுத்தவே மாட்டார்கள். அவர்களிடம் இடி படுவது நமக்குத்தான் சங்கடமாக இருக்கும். சுமார் முப்பது வருடங்கள் கழித்து இன்றும் சென்னையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இருக்கைகள் என்பதை காணும்போது...... வேடிக்கையாகத்தான் படுகிறது. இதுதான் நம்முடைய so called தமிழர் கலாச்சாரம் போலிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  11. அருமை,ஐயா!இப்போதெல்லாம் பெண்கள் தற்காப்பில் அதீத கவனம்.வேண்டியது தான்!

    பதிலளிநீக்கு
  12. குறளோடு சம்பவத்தை பொருத்தி ஒரு சுவையான பகிர்வு! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. தில்லியில் இது போன்ற பல அனுபவங்கள்..... எனக்கு நடந்த அனுபவத்தினை தனிப்பதிவாக எழுதுகிறேன்! தில்லி வந்த புதிதில் நடந்த அந்த விஷயத்தினை இப்பதிவு நினைவுக்குக் கொண்டு வந்தது!

    பதிலளிநீக்கு
  14. வித்தியாசமான குறள் விளக்கம்...
    பெண்மையைப் போற்றுவோம்...

    பதிலளிநீக்கு
  15. என் நினைவுகள் இங்கே பதிவாக.....

    http://venkatnagaraj.blogspot.com/2013/12/blog-post_4624.html

    பதிலளிநீக்கு
  16. நல்ல குறள். நல்ல விளக்கம். நல்ல சான்று.
    பெண்மை வாழ்க! போற்றும் ஆண்மை வாழ்க!

    பெண்ணினம் சொல்கிறது ‘நன்றி’

    பதிலளிநீக்கு
  17. குறளோடு, பெண்மை போற்றி நீங்கள் கொடுத்த குரலும் அருமை !

    பதிலளிநீக்கு
  18. குறளோடு, பெண்மை போற்றி நீங்கள் கொடுத்த குரலும் அருமை !

    பதிலளிநீக்கு
  19. சென்னையில் இன்னமுமா பெண்கள் ஆண்கள் இருக்கையிலோ, அல்லது ஆண்கள் அருகேயோ அமர அனுமதி கேட்கிறார்கள்? ஆச்சரியம்தான். பல பேருந்துப் பயணத்திலும் நானே அமர்ந்து வந்திருக்கிறேன். :))))

    பதிலளிநீக்கு