தொடரும் தோழர்கள்

செவ்வாய், பிப்ரவரி 15, 2011

சென்னைக்காதல்-3.


சென்னையின் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பற்றி இதுவரை நான் எழுதவில்லை.அதுவும் இன்றில்லாத ஓரிடம்தான்.

எத்தனை புத்தகங்கள் அங்கே தேடித்தேடிஎடுத்திருப்பேன்?.அதற்காக எத்தனை மணி நேரம் செலவிட்டிருப்பேன்?எத்தனை விதமான பொருள்களை பேரம் பேசி வாங்கியிருப்பேன்?எத்தனை நாட்கள் சும்மா சுற்றியிருப்பேன்?மறக்க முடியுமா?இன்றைய மால்களின் முன்னோடியான அந்த இடத்தை மறக்க முடியுமா?
சென்னையின் மிகப் பெரிய இழப்பாக நான் நினைக்கும் அந்த இடம்—

”மூர்மார்க்கெட்”

அங்கு ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் உங்களுக்குக் கண்டிப்பாக நன்கு பேரம் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.இல்லயெனில் ஏமாற வேண்டியதுதான்.
எனக்கு பேரம் பேசக் கற்றுத்தந்ததே மூர் மார்க்கெட்தான்.புத்தகம் வாங்க ,எப்பொருள் வேண்டுமாயினும் வாங்க,பொழுதுபோக்காகச் சுற்றி வர என மனிதர்கள் கூடிய இடம்!

இப்படி எத்தனையோ இடங்கள்!எத்தனையோ நினைவுகள்!
இதற்கு மேல் என்ன இருக்கிறது என் காதலியைப் பற்றிச் சொல்ல?

ஆனால் அவள் என்னை மாற்றினாள்!

சென்னை வரும் முன் அப்பாவியாக,நண்பர்கள் தவிரப் புதியவர்களிடம் பேசிப் பழகக் கூச்சப் படுவனாக,வீட்டுப் பெண்களைத்தவிர மற்றப் பெண்களிடம் பேசப் பயப்படும்,அவர்களாகப் பேசினால் கால் நடுங்கும், பதில் சொல்ல நாக் குழறும் ஒருவனாக இருந்த என்னை இரண்டே ஆண்டுகளில் முழுதுமாக மாற்றியது சென்னை.

பேசத் தெரிந்தவனானேன்.

பெண்களிடம் பேசப் பயந்த நிலை மாறியது.இரு சம்பவங்களை விவரிப்பதின் மூலம் இந்த மாற்றத்தைப் புரிய வைக்க முடியும் என நினைக்கிறேன்.

மதராஸ் வந்த புதிதில் பட்டமளிப்பு விழாவில் நேரில் கலந்து கொள்ளத் தீர்மானித்தேன்.அன்று காலை வெளியில் சென்று வந்தபோது ஹாஸ்டல் அலுவலகத்தில் அழைத்தார்கள்.நான் இல்லாதபோது எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததாகச் சொன்னார்கள்.மதுரை ஃபாத்திமா கல்லூரியில் பணி புரிந்து வந்த என் சித்தி, மாணவிகளுடன் வந்து மாநிலக்கல்லூரி மகளிர் விடுதியில் தங்கியிருப்பதாகவும், என்னைப் பார்க்க விரும்புவதாகவும் சொன்னார்கள்! அன்று மாலை பட்டமளிப்பு விழா முடிந்தபின் அங்கிருந்தே சென்று பார்த்து வரலாம் எனத் தீர்மானித்தேன்.விழா முடிந்ததும், விசாரித்துக்கொண்டு பேருந்தில் ஏறினேன்.நடத்துனரிடம் சொன்னேன்’மாநிலக் கல்லூரி மகளிர் விடுதியில் இறங்க வேண்டும்.இடம் வந்ததும் சொல்லுங்கள்” என்று.

இடம் வந்ததும்,நடத்துனர் உரத்த குரலில் சொன்னார்”யாருப்பா,மாநில மகளிர் விடுதி, இறங்கு!”நான் இறங்கும்போது பஸ்ஸில் இருந்த அனைவரும் என்னையே பார்ப்பது போன்ற ஓர் உணர்வு!

விடுதி காம்பவுண்டுக்குள் நுழைந்தேன்.வாசலிலிருந்து சிறிது தூரம் தள்ளி விடுதிக் கட்டிடம்.கேட்டிலிருந்து நீண்ட நடை பாதை.பாதையின் இரு புறமும் மரம்,செடி. புல்தரை நிறைந்த தோட்டம்!ஆங்காங்கே,கொத்துக் கொத்தாய் பெண்கள்!வித விதமான உடைகள்;அலங்காரங்கள்.ஆனால் நேரில் பார்க்கப் பயம்.கட்டிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.கழுத்தில் டை,கையில் மடித்துப் போட்ட பட்டமளிப்பு கவுன்,சுருட்டிப் பிடித்த பட்டம்,இந்தத் தோற்றத்தில் சென்று கொண்டிருந்த என்னை அப்பெண்கள் எல்லாரும் உற்றுப் பார்க்க ஆரம்பிப்பதாக உணர்ந்தேன்.கால்கள் பின்ன ஆரம்பித்தன. கழுத்திலிருந்து வேர்வை ஊற்றெடுத்து ஓட ஆரம்பித்தது-கழுத்து,முதுகு,கால்கள் என்று.ஒரு வழியாகக் கட்டிடத்தை அடைந்தேன், விசாரித்தேன்.சித்தி வெளியே சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.நான் வந்தவுடன் சொல்லுங்கள் என்று என் பெயரைச் சொன்னேன்.

திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.முன்பை விடப் பார்வைகள் தீவிரமாக இருப்பதாக உணர்ந்தேன்.யாரோ ஒரு பெண் என் பெயரைச் சொல்லி விட்டுச் சிரித்தாள்.கால் நடுக்கம் அதிகமானது!பாதை நீ..…..ண்டது.கடைசியாக கேட்டை அடைந்தேன்.

ஓராண்டுக்குப் பின்!
மூர் மார்க்கெட்!
முக்கியமான புத்தகங்களைத்தேடி வாங்கத் தனியாகச் சென்றேன்.கடையை விட்டு வரும்போது அப்பெண்ணைப் பார்த்தேன்.அழகும்,கம்பீரமும் கலந்த ஒரு தோற்றம். தோற்றத்தில் தன் அழகின் மீது செருக்குக் கொண்ட பெண்ணாகத் தோன்றவில்லை.ஒரு தோழி மட்டும் உடன். அவளுடன் பேச வேண்டும்;அவள் அழகைப் புகழ வேண்டும் எனத்தீர்மானித்தேன்.

இரண்டு மூன்று கடைகளில் சில பரிசுப் பொருள் பற்றி விசாரித்தேன், அவளைப் பார்வையால் பின் தொடர்ந்தவாறே! பின் அவளை நெருங்கினேன்.
“மன்னிக்கவும்.உங்களால் எனக்கு உதவ இயலுமா?” கேட்டேன்.
”சொல்லுங்கள்”
“தவறாக நினைக்காதீர்கள்.ஒரு பரிசுப் பொருள் வாங்க வேண்டும்.தேடித்தேடிப் பார்த்துவிட்டேன்.என்ன வாங்குவதென்று தெரியவில்லை.”
”யாருக்கு”
என் முகத்தில் வரவழைத்துக் கொண்ட ஒரு வெட்கம்.தயங்கிச் சொன்னேன்”என் நண்பிக்குப் பிறந்த நாள்.பரிசு அளவில் சிறியதாக இருக்க வேண்டும்;பெண்களுக்குப் பிடித்த பொருளாக இருக்க வேண்டும். எனவேதான் உங்கள் உதவி நாடினேன்.”

அவள் என்னை உற்றுப் பார்த்தாள்.என் முகத்தில் தப்பாக எதுவும் தெரியாத நிலையில் சொன்னாள்”அவளுக்கு ஏதாவது ஃபிலிக்ரி நகைகள் வாங்கிக் கொடுங்களேன். நிச்சயம் பிடிக்கும்—நான் அணிந்திருப்பது மாதிரி.”
“வாவ்!அழகாக இருக்கின்றன.அழகான பொருட்கள், இருக்கும் இடத்தைப் பொறுத்து மேலும் அழகாகின்றன.இங்கு கிடைக்குமா?”
என் பாராட்டை ஒரு தலையசைப்பால் ஏற்றுக் கொண்ட அவள் சொன்னாள் ”இல்லை.மவுண்ட் ரோடில்”கலிங்கா ஃபிலிக்ரியில் கிடைக்கும்”
“நன்றி” அவளை விட்டு விலகத்தயாரானேன்.
”ஒரு நிமிடம் ”அவள் அழைத்தாள்.முகத்தில் லேசான குறும்போ!
”அவளுக்குப் பிடித்ததா என்று என்னிடம் சொல்லுங்கள்.பெரும்பாலும் விடுமுறை நாட்களில் இங்கு இருப்பேன்!”
நான் திகைத்தேன். அவள் அகன்றாள்!
இந்தத் தைரியத்தை,மாற்றத்தை என்னில் ஏற்படுத்திய சென்னையைக் காதலிக்காமல் இருக்க முடியுமா?
சென்னைக்காதல் (பதிவு) முடிந்தது!
(இப் பதிவுத்தொடரை எழுதக் காரணமான அமீரகப் பதிவர் நண்பர் கக்கு-மாணிக்கம் அவர்களுக்கு நன்றி)

26 கருத்துகள்:

  1. அட, இது என்ன? நீண்ட எக்ஸ்பிரஸ் வண்டி தொடராக வருகிறது என்று பார்த்தால் மாயவரம் - திருச்சி பாசஞ்சர் போல நாலே நாலு பெட்டிகளுடன் வந்தது அதுவும்,சென்றுவிட்டதே?!
    ஹீம்.....பீச்சி மெல்பாவில் முளைத்து,காசினோவில்எழுந்து நின்று.... மூர் மார்கெட் வரை வந்து அப்புறம் காணாமல் தான் போக வேண்டுமா??

    பதிலளிநீக்கு
  2. ஆண்பிள்ளைகள் தனியாக வந்தால் "கலாய்க்கும்" குணம் பெண்களுக்கு அந்த நாளிலும் உண்டு போலும்!

    பதிலளிநீக்கு
  3. அருமையாய் எழுதி முடிச்சிருக்கீங்க மக்கா சூப்பர்....

    பதிலளிநீக்கு
  4. கக்கு - மாணிக்கம் கூறியது..
    //ஹீம்.....பீச்சி மெல்பாவில் முளைத்து,காசினோவில்எழுந்து நின்று.... மூர் மார்கெட் வரை வந்து அப்புறம் காணாமல் தான் போக வேண்டுமா??//
    அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு!
    //ஆண்பிள்ளைகள் தனியாக வந்தால் "கலாய்க்கும்" குணம் பெண்களுக்கு அந்த நாளிலும் உண்டு போலும்!//
    அன்றும்,இன்றும் என்றும்!
    நன்றி மாணிக்கம்

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி #கவிதை வீதி# சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  6. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அருமையாய் எழுதி முடிச்சிருக்கீங்க மக்கா சூப்பர்....//
    மிக்க நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  7. //”என் நண்பிக்குப் பிறந்த நாள்.பரிசு அளவில் சிறியதாக இருக்க வேண்டும்;பெண்களுக்குப் பிடித்த பொருளாக இருக்க வேண்டும். எனவேதான் உங்கள் உதவி நாடினேன்.”//

    //”அவளுக்குப் பிடித்ததா என்று என்னிடம் சொல்லுங்கள்.பெரும்பாலும் விடுமுறை நாட்களில் இங்கு இருப்பேன்!”//

    படிக்க சுவையாக இருந்தது. ஆனால் நாவலின் கடைசி பக்கத்தை கிழித்துவிட்டு கொடுத்தமாதிரி, உங்களுக்கு உண்மையில் நண்பி இருந்தார்களா? அல்லது கற்பனைப்பாத்திரமா? என்பதையும் உங்களுக்கு உதவிய பெண்ணை திரும்பவும் பார்த்தீர்களா என்பதையும் எங்களது கற்பனைக்கு விட்டுவிட்டு , சொல்லாமல் விட்டுவிட்டீர்களே!!

    பதிலளிநீக்கு
  8. வே.நடனசபாபதி கூறியது...
    //ஆனால் நாவலின் கடைசி பக்கத்தை கிழித்துவிட்டு கொடுத்தமாதிரி, உங்களுக்கு உண்மையில் நண்பி இருந்தார்களா? அல்லது கற்பனைப்பாத்திரமா? என்பதையும் உங்களுக்கு உதவிய பெண்ணை திரும்பவும் பார்த்தீர்களா என்பதையும் எங்களது கற்பனைக்கு விட்டுவிட்டு , சொல்லாமல் விட்டுவிட்டீர்களே!!//
    ஹி,ஹி!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. அவளுக்குப் பிடித்ததா என்று என்னிடம் சொல்லுங்கள்.பெரும்பாலும் விடுமுறை நாட்களில் இங்கு இருப்பேன்!” //

    அதுக்கு பிறகு நிறைய மேட்டர் இருக்கும் போல இருக்கே சொல்லலையே, அதை தெரிஞ்சுக்கலேன்னா மனசு உறுத்துமே.

    பதிலளிநீக்கு
  10. ur post reminded me of my visits to moore market during my college days in late 60s.quite true of what u said about moore market. tks for this nice post. keep it up..

    பதிலளிநீக்கு
  11. அதற்குள்ள முடித்து விட்டீர்களா? உங்கள் எழுத்து நடை நல்லா இருக்குதுங்க... விரைவில், வேறு தொடர் - சென்னை குறித்து ஆரம்பிக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. கே. ஆர்.விஜயன் சொன்னது…

    //அதுக்கு பிறகு நிறைய மேட்டர் இருக்கும் போல இருக்கே சொல்ல லையே,அதை தெரிஞ்சுக்கலேன்னா மனசு உறுத்துமே.//
    இது எனது சென்னை மீதான காதல் பற்றிய பதிவு!மற்றதை விவரிக்க இடமில்லை!மன்னியுங்கள்!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜயன்!

    பதிலளிநீக்கு
  13. அன்புடன் மலிக்கா கூறியது...

    //சென்னைக்காதல் சொன்னக்கதை
    சூப்பர்//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புடன் மலிக்கா!

    பதிலளிநீக்கு
  14. Shankar கூறியது...

    //ur post reminded me of my visits to moore market during my college days in late 60s.quite true of what u said about moore market. tks for this nice post. keep it up..//
    the period of my narration is almost the same-1964-66.
    thanks for your visit and comments,shankar.

    பதிலளிநீக்கு
  15. Chitra கூறியது...

    //அதற்குள்ள முடித்து விட்டீர்களா? உங்கள் எழுத்து நடை நல்லா இருக்குதுங்க... விரைவில், வேறு தொடர் - சென்னை குறித்து ஆரம்பிக்க வாழ்த்துக்கள்!//
    வேறு தொடர்?சென்னை குறித்து?முயன்று பார்க்கிறேன்.உங்கள் வாழ்த்தின் பலத்துடன்,இயல வேண்டும்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,சித்ரா!

    பதிலளிநீக்கு
  16. இந்த இடுகையைப் படித்துவிட்டு இதன் முந்தைய பகுதிகளையும் படித்தேன்...நல்ல இருக்குங்க அய்யா...அனுபவம் புதுமை...

    பதிலளிநீக்கு
  17. புகைப்படம் பார்த்ததும் உடனே படித்தேன் - அடடா, முடிந்து விட்டதா?

    மூர்மார்கெட் என்ன ஆச்சு? எங்கேயோ இடம் மாத்தினதா சொன்னாங்களே?

    பழைய சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை, நந்தனம், பாண்டிபஜார் எல்லாம் எழுதலாமே? பழைய எல்டாம்ஸ் ரோடில் நிறைய சுவாரசியமான விஷயங்கள் உண்டே?

    பதிலளிநீக்கு
  18. டக்கால்டி கூறியது...
    //இந்த இடுகையைப் படித்துவிட்டு இதன் முந்தைய பகுதிகளையும் படித்தேன்...நல்ல இருக்குங்க அய்யா...அனுபவம் புதுமை...//
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  19. அப்பாதுரை அவர்களே!
    முடிப்பதில் எனக்கே சிறிது மனமில்லைதான்!பழைய நினைவுகளில் மூழ்குவதே ஒரு சுகம்தானே!ஆனால் நீளம் அதிகமானால் சுவை குறையுமோ என்ற பயம்தான்!’முடிந்து விட்டதா’ என்று சொன்ன நீங்களே ’முடியாதா’ என்று கேட்டு விடக் கூடாதே!
    நீங்கள் குறிப்பிட்ட இடங்களில், எல்டாம்ஸ் ரோடு,பாண்டிபஜார், ராயப்பேடை பற்றி எழுதச் செய்திகள் என்னிடமுண்டு!பின்னால் பார்க்கலாம்!
    மூர்மார்க்கெட்,ரயில்வே காம்ப்ளெக்ஸ் ஆகி விட்டது. அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
  20. முடிந்த போது எழுதுங்கள். எல்டாம்ஸ் ரோடு சுவாரசியம் உங்களுக்கும் தெரியுமா? ஒருவேளை அங்கே சந்தித்திருப்போமோ?

    பதிலளிநீக்கு
  21. அப்பாதுரை கூறியது...

    //முடிந்த போது எழுதுங்கள். எல்டாம்ஸ் ரோடு சுவாரசியம் உங்களுக்கும் தெரியுமா? ஒருவேளை அங்கே சந்தித்திருப்போமோ?//
    என் சரித்திர காலம் 1964-66. நீங்கள் குறிப்பிடும் காலம் ஒத்து வருமா?
    நன்றி!

    பதிலளிநீக்கு
  22. அருமையாய் எழுதி முடிச்சிருக்கீங்க ...

    பதிலளிநீக்கு
  23. வேடந்தாங்கல் - கருன் கூறியது...
    //அருமையாய் எழுதி முடிச்சிருக்கீங்க ...//
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  24. இல்லை சார், பதினஞ்சு வருசம் தள்ளிப் போடணும்.

    பதிலளிநீக்கு