தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 31, 2010

புத்தாண்டு வாழ்த்துகள்



2011
-----
அனைத்துப் பதிவர்களுக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்
திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!

அன்பன்
சென்னைபித்தன்

செவ்வாய், டிசம்பர் 28, 2010

பரல்கள்

பண்டித நேரு ஒரு முறை சொன்னார்.”இந்திய தொழில் நுட்பக் கழகங்கள் கல்வியின் கோவில்கள்; நாட்டை முன்னேறச் செய்வதற்கான சிறந்த திறமைகளை உருவாக்குகின்றன” என்று.ஆனால் அவர் சொல்லவில்ல எந்த நாட்டை என்று.ஏனென்றால்,அமெரிக்காவில் படிக்கும்,பணிபுரியும் இ.தொ.க. பட்டதாரிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது,நேரு, நாடு என்று சொன்னது இந்தியாவை அல்ல அமெரிக்காவை என்றே எண்ணத்தோன்றுகிறது! இவ்வாறு சொன்னவர்,சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தின் இயக்குனர் திரு.MS அனந்த் அவர்கள் ! சுடும் உண்மை!
நன்றி:இந்தியாவின் நேரங்கள்(டைம்ஸ் ஆஃப் இந்தியா!)
------------------------

நேற்று மாலை நாரதகானசபா செல்வதற்காகப் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன்.மந்தைவெளியில் ஒரு கோவிலைப் பேருந்து கடக்கும்போது, ஒரு கோவில் வாசலில் ஒருகாட்சி!ஒரு புது வண்டி-ஸ்கார்ப்பியோ என்று நினைக்கிறேன்.அதற்குப் பூசை போடப்பட்டுக் கொண்டிருந்தது.சந்தனம் ,குங்குமம் இடப்பட்டு, பூச்சூட்டப்பட்டு, மங்களகரமாய் நின்று கொண்டிருந்தது வண்டி.சுற்றிலும் சிலர் நிற்கக் கற்பூர ஆரத்தி எடுக்கப்பட்டது.

எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது-அதன் பானெட்டில்
ஒளி வீசிக் கொண்டிருந்த ஒரு கொடி! திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருப்பு சிவப்புக் கொடி.கட்சிக்காரர் யாரோ ஒருவர் தன் காருக்குப் பய பக்தியுடன் பூசை போட்டிருக்கிறார்!

இதை அவர்கள் தலைவர் பார்த்திருந்தால்,முரசொலியில் உடன் பிறப்பே என்று விளித்து ஒரு கடிதம் எழுதி,பக்தியுள்ள இந்துக்களின் மனதை வழக்கம் போல் புண்படுத்தியிருப்பார்.

எழுதட்டும்!எழுதட்டும்!
ஆனால் எதுவும் மாறாது! இந்த நாட்டில் மட்டுமல்ல!
அவர் வீட்டிலும்தான்.!

--------------------
குசேலர்.எம்.பி.ஏ.!
---------------
குசேலர்!
பெற்றது இருபத்தேழு
கற்றது எம்.பி.ஏ.மார்க்கெட்டிங்கா?
விற்றது என்னவோ ஒரு பிடி அவல்தான்-விலையாய்ப்
பெற்றதோ பெருஞ்செல்வம்!

திங்கள், டிசம்பர் 27, 2010

இசைவிழா

யாருமே எதிர்பாராத ஒரு கச்சேரிக்கு இன்று விமரிசனம் எழுதுகிறேன்.உடல்நிலை சிறிது சரியில்லாத காரணத்தால் கடந்த இரு நாட்களாகக் கச்சேரிக்குச் செல்ல முடியவில்லை.தவற விட்டவை-ரஞ்சனி,காயத்ரி & பிரியா சகோதரிகள்.

இன்று மாலை 4.15க்கு நான் நாரதகானசபா வளாகத்துள் நுழையும்போது கூட்டமே இல்லை.சில நாட்களுக்குமுன் அருணா சாயிராம் கச்சேரியின்போது கேட் வரை வரிசை நின்றது நினைவுக்கு வந்தது.அரங்கினுள் நுழைந்தேன்.1200 பேர் அமரக் கூடிய அரங்கில் ஒரு நூறு பேருக்கு மேல் இல்லை!எனக்கே ஏமாற்றம் என்றால் பாடுபவர்களுக்கு எப்படியிருக்கும்?

சரியாக 4.30க்குத் திரை தூக்கப்பட்டுக் கச்சேரி ஆரம்பமாயிற்று. முதலில் பேகடா ராக வர்ணம்-இந்தசல.நல்ல ஆரம்பம். விறுவிறுப்பான தொடக்கம்.தொடர்ந்து பங்காள ராகத்தில் கிரிராஜ சுதா தனய,கலாவதியில் ஒக பாரி ஜூடக.compact.
அடுத்து வந்தது கமாஸில் ’சீதாபதே நாமனஸு”ஸ்வரப் பிரஸ்தாரத்திலிருவரும் மாற்றி மாற்றிப் பாடும் போது நல்ல விறுவிறுப்பு.ஒவ்வொரு ஸ்வரக்கோவை முடியும்போதும் அந்த ‘பநிதபத’ பிரயோகம் அருமை.இதைத்தொடர்ந்து மதுரை மணி பிரபலமாக்கிய மார்க்க ஹிந்தோளக் கீர்த்தனை-சலமேலர.-சுகம்.
அடுத்து கீரவாணி-ஆலாபனையில்,சேஷாச்சாரி அவர்கள்,சந்தேகமே இல்லாத கீரவாணியைக் கொண்டு வந்து உலவ விட்டார்.வரமுலொசகி கீர்த்தனை ஏமாற்றவில்லை.முடிந்ததும் ஒரு குட்டித் தனி ஆவர்த்தனம்.

அடுத்தது.piece-de resistance of the concert-பூர்விகல்யாணி-ராகம்,தானம், பல்லவி.ஆலாபனையில் ராகத்தின் முழு அழகும் வெளி வந்தது.குழப்பம் இல்லாத ராக லட்சண வெளிப்பாடு.(சில நாட்களுக்கு முன் என் முன்னால் இருந்த இருவர்,பந்துவராளியா,பூர்விகல்யாணியா என்ற சர்ச்சையில் இருந்தனர்! ஆனால் பாடகரைக் குறை கூற முடியாது! ).கச்சிதமான தானம் முடிந்ததும், பல்லவி-சங்கரன்கருள் மீனாட்சி-ராகமாலிகை.பூர்விகல்யாணியைத்தொடர்ந்து.பிலஹரி,சாவேரி.ஹம்சா
நந்தி,ரேவதி.சேஷாச்சாரியின் கம்பீரமான குரலும்,ராகவாச்சாரியின் மென்மையான குரலும் ஒவ்வொரு ராகத்திலும் ஸ்வரம் பாடும் போது அந்த காம்பினேஷன்!—சூப்பர்.ஹம்சாநந்தியில் ஸ்வரம் பாடும்போது,ராகவச்சாரி’ம,நி’ என்ற ஸ்வரம் பாடும்போது,ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் அவர்கள் கைக் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்து money முத்திரை காட்ட மேடையில் ஒரு ஜாலி கூட்டணி உருவானது! RTP முடிவில் தனி ஆவர்தனம்.

ஆனால் எந்தக் கச்சேரியிலும் நான் 6.30க்கு மேல் இருக்க முடியாத நிலையில் இருப்பதால்,ஒரு நல்ல கச்சேரி கேட்ட மனநிறைவோடு புறப்பட்டு விட்டேன்.

நினைவில் நிற்கும் நிகழ்ச்சி.

(இந்த விமரிசனத்தில் ஆழம் இல்லை என்று எனக்குத் தெரியும்.ஆனால் நான் ஒரு இசை ரசிகன் மட்டுமே.நிபுணன் அல்ல.)
.கச்சேரி: ஹைதராபாத் சகோதரர்கள்-வாய்ப்பாட்டு
v.v.ரவி-வயலின்
ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ்-மிருதங்கம்
கோவை மோகன்-கடம்.

சனி, டிசம்பர் 25, 2010

மார்கழிப்பொங்கல்-6-(வைகுண்ட ஏகாதசி)

எனது முந்தைய மார்கழிப் பொங்கல் பதிவில்,திருப்பாவை, திருவெம்பாவை,திருவாதிரை என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.அதைப் படித்த என் வைணவ நண்பர்கள் சிலர்,திருப்பாவை,திருவெம்பாவை இரண்டு பற்றியும் எழுதியது சரி,ஆனால் திருவாதிரை பற்றி எழுதிய நீ எப்படி மிக முக்கியமான வைகுண்ட ஏகாதசி பற்றி எழுதாமல் விடலாம் என்று என்னுடன் சண்டைக்கு வந்தனர்.எனவே இப்பதிவில் வைகுண்ட ஏகாதசி பற்றி எழுதுகிறேன்.ஏகாதசி என்பது அமாவாசை/பௌர்ணமிக்குப் பின் வரும் 11வது நாள்.(எல்லோருக்கும் தெரிந்த செய்தியைப் பெரிசா எழுத வந்துட்டியா?)மார்கழி மாதத்தில்,வளர் பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

எல்லா ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவது,வைகுண்ட பலன் தரும் என்பார்கள்(விரதம் என்றால் என்ன?-பட்டினிதான்.! மற்ற சில நியமங்களும் உண்டு.)ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும்.அக்காலத்தில் பெரியவர்கள் சொல்வார்கள்”தினம் இரண்டு;வாரம் இரண்டு;மாதம் இரண்டு;வருஷம் இரண்டு என்று.மாதம் இரண்டு என்றால்,இரண்டு ஏகாதசிகளிலும் உண்ணா நோன்பை மேற்கொள்வது. (மற்றவை என்ன என்பது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாதது;எனவே தெரியாவிடில் நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்)ஏகாதசிக்கு மறுநாள்,துவாதசியன்று காலை சீக்கிரமே உணவு அருந்த வேண்டும்.(பின்னே ஒரு நாள் பட்டினி என்றால் சும்மாவா?)இதைப் பாரணை என்பார்கள்.பட்டினியை விட்டாலும் பாரணையை விடக் கூடாது என்பர்.இதை நான் தவறாமல் கடைப் பிடிக்கிறேன்.பட்டினியை விட்டு விடுகிறேன்;பாரணையை விடுவதில்லை!பாதிப் புண்ணியம் உண்டோ|? துவாதசி அன்று உணவில் அகத்திக் கீரையும்,நெல்லிக்காயும்,,சுண்டைக்காயும் இருக்க வேண்டும்.!இதற்கு விஞான ரீதியான காரணம் இருக்க வேண்டும்.


இப்போது வைகுண்ட ஏகாதசிக்கு வருவோம்.ஆண்டு முழுவதும் விரதம் இருக்க முடியா விட்டாலும்,வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் அது மூன்று கோடி ஏகாதசி விரதத்துக்கு சமம் என்று சொல்கிறார்கள்.அதனால் இது முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப் படுகிறது.

இத்தினம் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் மிக விசேஷமாக் கொண்டாடப் படுகிறது.இந்நாளில் மிக முக்கியமான நிகழ்ச்சி சொர்க்க வாசல் திறப்புதான்.அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப் பட்டவுடன்,அவ்வழியாகச் செல்வதற்கு மக்கள் வரிசையில் காத்திருப்பர்.மது கைடவர்களின் வேண்டு கோளுக்கிணங்கி,அன்று அவ்வாசல் வழியாக வருபவர்களுக்கு, அவர்கள் எப்படிப்பட்ட பாவம் செய்தவர்களாயினும் முக்தி அளிப்பதாக பகவான் வாக்களித்தார்.எனவேதான் இச்சொர்க்கவாசல் திறப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நான் திருவாதிரை அன்றும் கோவிலுக்குப் போகவில்லை;வைகுண்ட ஏகாதசி அன்றும் கோவிலுக்குப் போகவில்லை.கூட்டமில்லாத சாதாரண நாட்களில்தான் நான் பெரும்பாலும் கோவிலுக்குச் சென்று அமைதியாக வழி பட்டு விட்டு வருவேன்.இப்போது சில ஆண்டுகளாக மகா சிவராத்திரியன்று மருந்தீச்வரர் கோவில் போகிறேன்.அங்கு எங்கள் வேதக்குழு ருத்ரம்,சமகம் ஜபித்தபின்,சிறப்பு வழிபாட்டுக்கு அனுமதிக்கப் படுவோம்..எனவேதான் செல்கிறேன்.


கைலாயநாதன்,வைகுண்டநாதன் இருவர் அருளாலும் எல்லாரும் எல்லா நலமும் பெற்று வாழப் பிரார்த்திக்கிறேன்

வெள்ளி, டிசம்பர் 24, 2010

அறம்

அவர்கள் காத்திருந்தனர்,ஞானியார் தியானத்தினின்று விழிப்பதற்கு.இப்போதெல்லாம் இதே வாடிக்கையாகப்போய் விட்டது.-அவர் தியானம் கலைந்து விழித்தவுடன் தங்கள் குறைகளை,கேள்விகளை அவர்முன் வைத்து, அவரது பதிலைப்பெற்று அமைதி அடைவது.ஏனென்றால் கண் விழித்த சிறிது நேரத்திலேயே ஞானி மீண்டும் ஞானத்தில் ஆழ்ந்து விடுவார்.அந்த சில மணித்துளிகளுக்காக மக்கள் காத்திருக்கத் தொடங்கினர்.

ஞானி கண் விழித்தார்.அனைவரையும் ஒரு முறை கனிவோடு நோக்கினார்.அவர் பார்வை ஒருவன் மீது நின்றது.அவன் அவரை வணங்கிக் கேட்டான்"சாமி,கடவுளை எப்படி வழிபடுவதுன்னே எனக்குத் தெரியலை.பெரிசா பூசை செய்யவோ படையல் வைக்கவோ என்னால முடியாது.நான் என்ன செய்யணும் சாமி?"

"இறைவனை வழிபடுவதற்கு எந்த நியதியும் இல்லையப்பா.இதில் ஆடம்பரம் தேவையில்லை.நான் என்ற சிந்தையற்று ஆழ்ந்த பக்தியுடன்,உள்ளம் நிறை அன்புடன் ஒரு இலையைப்போட்டு வணங்கு.வில்வமோ,துளசியோ ஏதாவது ஒன்று.அவன் திருப்தி அடைவான்.உன் பூசையை ஏற்றுக்கொள்வான்"-ஞானி பதிலளித்தார்.

அவர் அடுத்தவனைப் பார்த்தார்.அவன் கேட்டான்"சாமி, நான் அதிக வசதியில்லாதவன்.தருமம் செய்யணுன்னு ஆசை இருக்கு.ஆனால் கொஞ்சமா ஏதாவது செஞ்சா எல்லாம் கேலி செய்வாங்களோன்னு பயமா இருக்கு. நான் என்ன செய்ய சாமி?"

அவர் பதில் அளித்தார்"உனக்கு நல்ல மனது இருக்கிறது.ஈதல் என்பது பெரிதாக இருக்க வேண்டியதில்லை.நேற்று நீ இங்கு வரும்போது எதிர்ப்பட்ட ஒரு பசுவுக்கு ஒரு வாய் புல் அளித்தாயே அதுவும் ஒரு தருமம்தான்.நீ உண்ணும் உணவில் சிறிது பசித்தவருக்குவழங்கினால் அது அறம்.உண்ணும் முன் காக்கைக்குச் சிறிது அன்னமிட்டால் அதுவும் தருமம்தான்."

அவர் பார்வை பட்ட அடுத்தவன் கேட்டான்"இதெல்லாம் கூட முடியலென்ன என்ன செய்ய"கொஞ்சம் இடக்குப் பிடித்த அவனது கேள்வியைச் செவியுற்று அவர் புன்னகைத்தார்."ஊரில எல்லோரும் உன்னை மிகவும் கோபக்காரன் என்று சொல்கிறார்கள்.பல நேரங்களில் நானே கவனித்திருக்கிறேன்,இனிமையாகப் பேசாமல் சுடு சொற்களையே பேசுவதை.அதை விடுத்து அனைவரிடமும் இன்சொற்கள் பேசுவாயாகில் அதுவே சிறந்த அறம்தான்-முகத்தானமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம் இன் சொலினதே அறம்."

இதைச் சொல்லிவிட்டு ஞானி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.
"யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே"-----(திருமூலர்)

பொருள்: இறைவனை ஒரு பச்சிலையிட்டு வணங்குதல் அனைவர்க்கும் இயலும் அறமாகும்.அது போலவே,பசுவுக்கு ஒரு வாயளவு புல் அளித்தலும்,தாம் உண்ணும்போது பசித்தவர்க்கு ஒரு பிடி உணவளித்தலும்,பிறரிடம் இனிய சொற்களைப் பேசுதலும் யாவரும் எளிதில் இயற்றக் கூடிய அறங்களாகும்.
(என் மற்ற பதிவிலிருந்து,சிறு சேர்க்கையுடன் இறக்குமதி)

செவ்வாய், டிசம்பர் 21, 2010

மார்கழிப்பொங்கல்-5(திருப்பாவை,திருவெம்பாவை மற்றும் திருவாதிரை)

மார்கழி மாதத்தின் காலைப் பொழுதுகளை இனிமையாக்குவது சர்க்கரைப் பொங்கல் மட்டுமல்ல,இதமான திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களும்தான்.

நான் 7வது வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கோவில்பட்டியில் படித்தேன்.மார்கழி மாதம் முழுவதும்,அந்த ஊர் செண்பகவல்லி அம்மன் கோவிலில், காலை எம்.எல்.வசந்தகுமாரி அவர்கள் பாடிய திருப்பாவைப் பாடல்கள்,ஒலிபரப்பப்படும்.அந்த சமயத்தில் தான் அந்த இசைத்தட்டுகள் புதிதாக வெளி வந்திருந்தன.ஆரம்ப நாட்களில் அதைக் கேட்பதே ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.ஆனால் அந்த மாதம் முடியும்முன் அந்த இசைத்தட்டும் கீறல் விழுந்துவிட எனக்கும் அதன் மீது இருந்த மோகம் விலகிவிட்டது.ஆனால் அது காலத்தை வென்ற ஓர் இசைத்தட்டு என்பது இப்போதும் எம்.எல்.வி.யின் அதே பாவைப் பாடலகள் ஒலிபரப்பப்படுவதைப் பார்க்கும்(கேட்கும்!)போது உணர்கிறேன்.

என் அத்திம்பேர் ஒருவர் இருந்தார்.அவர் மார்கழி மாதத்தின் 27 ஆம் நாளை மறக்கவே மாட்டார்.திருப்பாவையின் 27ஆம் பாடலும் அவருக்கு நன்குதெரியும்.குறிப்பாகக் கீழ்க்கண்ட பகுதி
” பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார” (!)

முதல் நாளே என அக்காவிடம் கூறிவிடுவார்”நாளைக்குக் கூடார வல்லி.சர்க்கரைப் பொங்கல் பண்ணிவிடு” என்று.
எனக்கு வேதம் கற்பித்த குருஜி ஒருவர்.சாப்பாட்டில் ரசிகர்.அடிக்கடி சொல்வார்.”சர்க்கரைப் பொங்கல் என்றால் அந்தப் பாத்திரத்தை லேசாச் சாய்த்து வைத்தால் நெய் அதிலிருந்து வடிய வேண்டும்” என்று!


திருப்பாவை,திருவெம்பாவை பற்றி விரிவாக,விளக்கமாக எழுத ஆசைதான்;ஆனால் அது என் சிற்றறிவுக்கு அப்பாற்பட்ட விஷயம்.அதற்கென்றே சில வல்லுநர்கள் இருக்கிறார்கள்.அவர்களைத் துணைக்கழைப்போம்—
http://sivamgss.blogspot.com
http://mozhi.blogspot.com/2007/12/1_19.html
http://margazhipaavai.blogspot.com/
இரண்டாவது சுட்டிக்கு நன்றி, திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு.









மார்கழியின் மற்றொரு இனிய அங்கம்,திருவாதிரைப் பண்டிகை.ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும்,சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள். “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை.
அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

அன்று,சிதம்பரத்தில் மிக விசேஷமான அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும் (கேட்டதுதான்.பார்த்ததில்லை)எங்கள் வீடுகளில் செய்யப்படும் களியும் ஏழு கறிக்கூட்டும் மிகவும் சுவையானவை. ஏழை பக்தரான சேந்தனார் அளித்த களியை சிவன் ஆவலோடு ஏற்றுக் கொண்டதிலிருந்து திருவாதிரை தினத்தில் களி முக்கிய நைவேத்தியம் ஆனது. இனிப்பான களியையும்,உப்பு,காரம் நிறைந்த கூட்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது –சுகம்!
செய்முறை தெரிய வேண்டுமா?ஜெயஸ்ரீயைத் தவிர வேறு யாரைக் கேட்க முடியும்? பாருங்கள்—
http://mykitchenpitch.wordpress.com/2007/01/04/thiruvaadhirai-kali/

நாளை திருவாதிரை.தில்லை நடராஜரை வணங்கி எல்லா நலமும் பெறுவோம்.

(நாளை எங்கள் காலனி பிள்ளையார் கோவிலில் காலை வெண் பொங்கல் பிரசாதத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.
வாங்க சாப்பிடலாம்!)

திங்கள், டிசம்பர் 20, 2010

பரல்கள்

நிதி நிறைந்த மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு. காக்கும் தெய்வத்தின் அருளால்,’அறிவும்’,’கலை’’ யும் நிறைந்த தமிழ்நாட்டில், ’கருணை’யும்,’தயை’யும்,’உதய’மாகிச் செழிக்கின்றன.
வாழ்க தமிழ்நாடு.
--*-*-*-*-*-*-*-*-*-*-*
’அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்’.இது சிலப்பதிகார நீதி.
இதில் சொன்ன பிழைப்பு,பிழை செய்தல் என்பது-பாண்டியனின் நீதி போல.
ஆனால் இன்றோ அரசியலையே தங்கள் பிழைப்பாக்கிக் கொண்டு பிழைக்கு மேல் பிழை செய்து வருவோர்க்கு எந்த அறம் கூற்றாகப் போகிறது?
-*-*-*-*-*-*-*-*-*-*-*
நெல்லைப் பக்கத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னைக்கு வந்தார்.பேருந்தில் பயணம் செய்யும்போது சீட்டு வாங்கிக் கொண்டு ரூபாய் நோட்டைக் கொடுத்தார்.நடத்துனர்,சில்லறை இல்லை,அப்புறம் தருகிறேன் என்று சொல்ல,நெல்லைக்காரர்,”பையக் கொடுங்க”.என்று சொல்லியிருக்கிறார்.,”ஏய்யா,நாந்தான் தரேன் என்று சொன்னேனே,உன்னோட சில்லறைக் காசுக்கு என் பையையே கேக்குரியே” என்று சத்தம் போட,பயணி மிக சிரமப்பட்டு ’பைய’ என்பதை விளக்கினார்.
பைய என்பது ஒரு தூய தமிழ்ச் சொல்.
”பஞ்சு கொண்டு ஒற்றினும் பைய,பைய என
அஞ்சிப் பின் வாங்கும் மெல்லடி”
என்று கண்ணகியின் மென்மையான பாதங்கள் பற்றி சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது.
ஆனால் இப்போது இத்தகைய சொற்களை நமது பேச்சிலே உபயோகித்தால்,--நாம் பைத்தியக்காரர்கள்தான்.
-*-*-*-*-*-*-*-*-*-*
கவுஜ
-------

சின்னக் கல்லெடுத்து குளத்தின் நடுவெறிந்தேன்
கல் பட்ட இடம் சுற்றி வட்டங்கள்,வட்டங்கள்
சின்னச் சொல்லெடுத்து அவள் மீது நான் எறிந்தேன்
சொல் பட்ட நெஞ்சத்தில் வாட்டங்கள், வாட்டங்கள்
வட்டங்கள் போய் விடலாம்;வாட்டங்கள் போய் விடுமோ?

-*-*-*-*-*-*-*-*-*-*-*-
எதையாவது எழுதி ஒரு பதிவு போடுவது என்பது இதுதான்!

சனி, டிசம்பர் 18, 2010

மார்கழிப் பொங்கல்-4-(கோலம்)

பொங்கலைத் தவிர மார்கழியின் மற்றோர் விசேஷம்-கோலம்.வீட்டு வாசலைத் தெளித்துப் பெருக்கி அழகான பெரிய பெரிய கோலங்களாக வரைந்து,நடுவில் ஒரு பூசணிப்பூவைச் சாணியில் செருகி வைத்த பின் அந்த வாசலே மிக அழகாகி விடும்.இன்று சென்னையில் குடியிருப்புகள் பெருகிப்போனபின்,பெரிய கோலங்கள் போட ஏது இடம்.?ஆயினும் மைலாப்பூர் மாதிரி சில இடங்களில்,சில வீடுகளில் இந்தப் பழக்கம் அழியாமல் காப்பாற்றுப்பட்டு வருகிறது.மைலாப்பூர் விழா நடக்கும்நேரத்தில்,மயிலையில் மாட வீதியில் கோலப் போட்டியே நடை பெறும்.அன்று அங்கு சென்று பார்க்க வேண்டும் அந்த அழகை!மாதிரிக்குச் சில கோலங்கள் கீழே--






மாக்கோலம்.விசேஷ நாள்களில் போடுவது.


புள்ளிக் கோலம்.வாசலில் போடும் கோலங்களில் ஒன்று








பூக்கோலம். ஓணத்தின்போது போடப்படுவது.




அந்த அதிகாலை நேரத்தில் குனிந்து நிமிர்ந்து அமர்ந்து,பெரிய கோலம் போடுவது பெண்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியும் கூட!

இந்தக் கோலம் போடும் கலை மறைந்து வருகிறதோ என எண்ணுகிறேன்.

நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில்,காலையில் படிக்கும் சாக்கில்,சீக்கிரம் எழுந்து,கையில் புத்தகத்துடன் வீட்டு வாசலில் நின்று. அந்தத் தெருவில் எல்லா வீட்டு வாசல்களிலும் போடப்படும் கோலத்தை(கோலத்தை மட்டுமா!) ரசித்ததுண்டு.

இந்நேரம் ஒரு புதுக்கவிதை நினைவுக்கு வருகிறது.கவிதை வரிகளும் நினைவில்லை;எழுதியவர் பெயரும் நினைவில்லை.என் வார்த்தைகளிலேயே அதன் கருத்தைத் தருகிறேன் –

குனிந்து நிமிர்ந்து,பெருக்கிக்
கோலம் போட்டுப் போனாள்!
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு!

வெள்ளி, டிசம்பர் 17, 2010

மார்கழிப் பொங்கல்-3(இசை விழா)

மார்கழி மாதம் என்றால் அதிகாலையில் கோவில் பூசைகளும்,பாசுர ஒலிகளும்,தவிர்க்கவே முடியாத பொங்கலும்(!),குளிரும் மட்டுமில்லை. சென்னையைப் பொறுத்த வரை டிசம்பர் இசைவிழாவும்தான்.நிறைய சபாக்கள் டிசம்பர் தொடக்கத்திலேயே இப்போதெல்லாம் நிகழ்ச்சிகளை ஆரம்பித்தாலும்,பழமையான பெரிய சபாக்களான மியூசிக் அகாடமி, நாரதகான சபா போன்றவை,டிசம்பர் 15 க்குத்தான் ஆரம்பிக்கின்றன தங்கள் விழாவை.

ஒரு காலத்தில் சில சபாக்களே இருந்த நிலை மாறி,இன்று நூற்றுக் கணக்கில் சபாக்கள் வந்துவிட்டன.இந்தப் பெருக்கம் சில வருந்தத்தக்க விளைவுகளையும் தோற்றுவித்திருக்கிறது.சில புதிய சபாக்கள்,வளரும் இளம் கலைஞர்களுக்கு,வாய்ப்பளிக்கப் பணம் கேட்டிருப்பதாக வரும் செய்திகள்.இது தொடரக்கூடாது.தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இந்த ஆண்டு சில பெரிய பாடகர்கள் தங்கள் கச்சேரிகளைக் குறைத்துக் கொள்வதென முடிவு செய்திருக்கின்றனர் .இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை.இதன் மூலம் பல வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

ஒரு காலத்தில் சபாக்களில் தமிழ்ப்பாடல்கள் அதிகம் பாடப் படவில்லை.ஆனால் இப்போது நிறையத் தமிழ்ப்பாடல்களையும் கேட்க முடிகிறது.பாபனாசம் சிவன்,கோபாலகிருஷ்ண பாரதி ,பாரதியார், அருணசலக் கவிராயர்,பெரியசாமித்தூரன் ஆகியோரது பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுகின்றன.

இந்த இசை விழாவுக்காகவே,அநேக வெளிநாடு வாழ் தமிழர்கள் சென்னை வந்து பதினைந்து,இருபதுநாட்கள் தங்கி,எல்லா சபாக்களையும் ஒரு சுற்றுச் சுற்றி விட்டுச் செல்கின்றனர்.இரண்டு மாதங்களுக்கு முன்பே நியூ வுட்லாண்ட்ஸ்,மற்றும் மயிலை, ஆழ்வார்ப்பேட்டைப் பகுதிகளில் இருக்கும் சேவைக் குடியிருப்புகள் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.

சில சபாக்களில் இருக்கும் உணவகங்களில் சபாக்களின் உள்ளே இருப்பதை விட அதிகமான கூட்டம் இருக்கிறது!விலையெல்லாம் அதிகமாக இருந்தாலும் யாரும் சாப்பிட யோசிப்பதில்லை.புது உணவு வகைகள் எல்லாம் கிடைப்பது ஒரு காரணமோ?

இன்று இப்பதிவு எழுதக் காரணம் நானும் ஜோதியில் கலந்து விட்டதுதான்!ஆம்;இரண்டு நாட்களாக நாரத கான சபா கச்சேரிக்குப் போக ஆரம்பித்து விட்டேன்.சீசன் டிக்கட்.அடுத்த ஆண்டு 2 ஆம் தேதி வரை தொடரும். காண்டீன்?!--ஒரு காப்பியோடு சரி (ரூபாய்.15/=)

பயப்படாதீர்கள்!கேட்ட கச்சேரிகளைப் பற்றியெல்லாம் எழுதி உங்களைப் போரடிக்க மாட்டேன்!

வியாழன், டிசம்பர் 16, 2010

மார்கழிப் பொங்கல்-2-(பிள்ளையார்.)



இன்று மார்கழி முதல் நாள்.எங்கள் பிள்ளையாருக்கு வழக்கம் போல் காலை சிறப்புப் பூசை.இன்று பிரசாதம்-நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல்!

இப்போது நேற்று விட்ட இடத்தில் ஆரம்பிக்கலாம்.

”ஐந்து கரத்தனை”-ஐந்துகரங்களும் ஐந்தொழில்களைச் செய்கின்றன.அவையாவன-படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல்.
கும்பம் ஏந்திய கரம்-நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கை- படைத்தலையும் மோதகம் ஏந்திய கரம் காத்தலையும்,அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும்,பாசம்
ஏந்திய கரம் மறைத்தலையும்,அபயகரம் அருளலையும் குறிக்கும். சிலர் பாசம் ஏந்திய கரம் படைத்தலையும்,மோதக கரம் மறைத்தலையும் உணர்த்தும் என்றும் கூறுவர்.

’யானை முகத்தனை’-விநாயகருக்கு,மனித உடல்,யானைத்தலை. பரமசிவன் கணபதியின் தலையைக் கொய்த பின்,பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்கி,பூத கணங்களை அனுப்பி,வடக்கே தலை வைத்து உறங்கும் உயிரின் தலையைக் கொய்து வரச் சொல்ல,அது ஒரு யானையின் தலையாக முடிந்தது என்பது ஒரு கதை.”யானை நாதத்திற்தோன்றியதாதல் போலப் பிள்ளையாரும் பர நாதத்திற்தோன்றிப் பிரணவ வடிவினராதலின் கூறினார்” என்பது ஓர் உரை.

காளமேகப் புலவரின் பாட்டொன்றில் இத்தலை பற்றி அவர் எழுதுவதாவது-

“சங்கரர்க்கு மாறு தலை சண்முகற்கு மாறு தலை
ஐங்கரர்க்கு மாறு தலை யானதே-சங்கைப்
பிடித்தோர்க்கு மாறு தலை பித்தா நின் பாதம்
படித்தோர்க்கு மாறு தலைப் பார்.”

சிவனுக்குத் தலயில் கங்கை ஆறு; முருகனுக்குத் தலைகள் ஆறு.;பிள்ளையார்க்கு மாறிய தலை;.ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதருக்கு,தலைப் பக்கம் ஆறு.;பித்தன் ஆகிய சிவனின் பாதத்தை நினைத்துப் போற்றுபவர்களுக்கு,நிச்சயம் ஆறுதல் கிடைக்கும். இதுவே பாடலின் பொருள்.

’இந்து இளம் பிறை போலும் எயிற்றனை’-பரஞானம்,அபர ஞானம் இரண்டுமே கணபதிக்குத் தந்தங்கள்;ஒரு தந்தம் ஒடித்து எழுதியதால் மற்ற முழு தந்தம் பார்ப்பதற்கு,இளம் பிறை நிலாவைப் போல்,வளைந்து,வெண்மையாய்,ஒளி விடுகிறது.

’நந்தி மகன்றனை’-இங்கு நந்தி என்றது சிவ பெருமானை.பிள்ளையார் சிவனின் முதற் பிள்ளை.

‘ஞானக் கொழுந்தினை’-ஞானத்தின் உச்சம்.தீ எரியும்போது,கொழுந்து விட்டெரியும் தீ என்று சொல்வோம்.அதே போல் விநாயகர் ஞானக் கொழுந்து.சிவன் ஞானமே வடிவானவன் ;அவ்ன் பிள்ளை ஞானக் கொழுந்து என்றுரைப்போரும் உளர்.

‘புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே’- புந்தி என்றது புத்தி.பிள்ளையாரை சிந்தையில் இருத்திப் போற்றுகின்றேன் என்பதாகும்.

வாருங்கள்,நாமும்,விநாயகப்பெருமானைப், ’புந்தியில் வைத்தடி போற்றுவோம்’

புதன், டிசம்பர் 15, 2010

மார்கழிப் பொங்கல்!

நாளை மார்கழி மாதம் பிறக்கிறது.தட்சிணாயத்தின் கடைசி மாதம்.மாதங்களில் நான் மார்கழி(மாஸானாம் மார்கசீர்ஷ:) என்று கீதையில் கண்ணன் சொல்கிறான்.நாளை முதல் கோவில்கள் அதிகாலையில் களை கட்டி விடும்.தனுர்மாத பூசைகள் ஆராதனைகள் நடைபெறும். திருப்பாவை,திருவெம்பாவை ஒலி எங்கும் நிறைந்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாலை குளிருக்கு இதமாகச் சுடசுடப் பொங்கல் கிடைக்கும்!

எங்கள் குடியிருப்பின் நுழை வாயிலிலேயே ஒரு பிள்ளையார் கோவில் அமைத்திருக்கிறோம்.




ஒவ்வொரு கோவிலிலும் பிள்ளயாருக்கு ஒரு பெயர் உண்டல்லவா?எங்கள் குடியிருப்புப் பிள்ளையார் “லட்சுமி கணபதி” என்றழைக்கப் படுகிறார்.உண்மையிலேயே குடியிருப்பு வாசிகளுக்கு,லட்சுமி கடாட்சத்தை நல்கி வருபவர்.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தினம் அதிகாலை எங்கள் பிள்ளையாருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

மார்கழி பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே காலனி அறிவிப்புப் பலகையில் அறிவிப்பு செய்யப்படும்.தினமும் நைவேத்தியப் ப்ரசாதம் செய்பவர்கள்,பெயர்களைப் பதிவு செய்து கொள்வர்.மாதம் முழுவதும், காலையில் சர்க்கரைப் பொங்கல்,வெண்பொங்கல்,கேசரி,சுண்டல் என்று
தினம் ஒரு பிரசாதம் கிடைக்கும்.(சர்க்கரைப் பொங்கலில் இனிப்புக் கூடும்,குறையும்;வெண்பொங்கலில் உப்புக் கூடும் குறையும் –அதெல்லாம் அவரவர் திறமையைப் பொறுத்தது!,பக்தியைப் பொறுத்ததல்ல!)

இந்த ஆண்டும் பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டு ,நான்கு நாட்களுக்குப் பதிவாகிவிட்டது.பொங்கலுக்காகக் காத்திருக்கும்
இவ்வேளையில்,(!),திருமந்திரத்தின் பாயிரப்பாடலில் பிள்ளையார் பற்றிச் சொல்லப் பட்டிருப்பதை பார்ப்போமா?
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே”

பொருள்:ஐந்து கரங்களையுடையவரும்,யானை முகத்தை யுடையவரும், இளம்பிறைச்சந்திரனையொத்த ஒற்றைத் தந்தத்தைஉடையவரும்,சிவனுடைய குமாரரும்,ஞானச்சிகரமாக விளங்குபவரும் ஆகிய விநாயக் கடவுளது திருவடிகளைச் சித்தத்துள் வைத்து வணங்குகிறேன்.
இப்பாடலின் விளக்கத்தை நாளை,மார்கழி முதல் நாள், பொங்கல் சாப்பிட்டு விட்டுப் பிறகு பார்ப்போம்!!

திங்கள், டிசம்பர் 13, 2010

ராதாகிருஷ்ணனின் கடிதம்!

இன்று ராதாகிருஷ்ணனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.அதில் இப்பதிவுக்குக் காரணமான பகுதி கீழே--
“இன்றோடு 44 ஆண்டுகள் ஓடிவிட்டன.ஆனால் நினைவுகள் இன்னும் மறையவில்லை.அதற்கு ஒரு அஞ்சலியாக அந்நிகழ்வு சம்பந்தமான உங்கள் பதிவை ஒரு மீள் பதிவாக மீண்டும் வெளியிட வேண்டுகிறேன்.
எங்கிருந்தாலும் வாழ்க;அவள் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க;அவள் மங்கலக் குங்குமம் வாழ்க”

அவன் வேண்டுகோளுக்கு இணங்கி இதோ ஒரு மீள் பதிவு:-

எங்கிருந்தாலும் வாழ்க
---------------------

பெண்ணே!(கண்ணே என்றழைக்க மனம் விழைந்தாலும்,நாகரிகம் தடுக்கிறது);நீ எங்கே இருக்கிறாய்?இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் என் நெஞ்சில் நிற்கும் நீயும்,உன் நினைவுகளும் அவை தரும் சுகமும்,அதோடு கூடிய வலியும் மறையவேயில்லை.

அந்த நாள்,உனக்கு நினைவிருக்கிறதா ?நாம் சந்தித்த நாள்.என்னைப் போல் நீயும் அந்த நாளை நினைத்துப் பார்ப்பதுண்டா.(மறந்தாலன்றோ நினைப்பதற்கு)

திருச்சி இரயில் நிலைய்த்தில் திருவனந்தபுரம்-சென்னை பகல் நேர விரைவு வண்டியில், சென்னை செல்வதற்காக நான் ஏறிய போது நினைக்கவேயில்லை,என் உள்ளத்தைத் தொலைக்கப்போகிறேன் என்று.

இரயிலில் ஒரே கூட்டம்.நான் ஏறிய பெட்டியிலும் கூட்டம்.உட்கார இடம் இல்லை.என் பார்வையை மெதுவாக பெட்டி முழுவதும் செலுத்தினேன்.சுழன்று வந்த என் பார்வை உன்னிடத்தில் வந்ததும் நிலை குத்தி நின்றது.அந்தக் கூட்டத்தில் நீ “பளிச்” என்று தனித்துத் தெரிந்தாய்-எனக்கு.

சராசரி உயரம்,ஆண்களைச்சுண்டி இழுக்கும் கவர்ச்சி ஏதுமில்லாத தோற்றம் பகட்டில்லாத புடவை,குறைவான அணிகலன்கள் ,மாநிறம்.ஆனால் என்னை ஈர்த்தது எது தெரியுமா?உன் முகம்.சாந்தம் தவழும் அந்தத் தெய்வீக அழகு.மற்ற நாகரிக மங்கையர் போலன்றி மூக்கின் இரு புறமும் நீ அணிந்திருந்த மூக்குத்திகள் .லட்சுமி கரமான தோற்றம்.எனக்கு ரவி வர்மாவின் லட்சுமியைப் பார்ப்பது போலிருந்தது.அந்த வினாடியிலேயே நான் வீழ்ந்து விட்டேன்.

நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் நீயும் என்னைப் பார்த்தாய்.நம் கண்கள் கலந்த அந்த நொடியில் என் நாடி நரம்புகளில் எல்லாம் ஒரு மின் அதிர்ச்சி ஏற்பட்டது.விவரிக்க இயலாத ஒரு உணர்வு.நெஞ்சு ‘பட,பட’ என வேகமாக அடிக்கத்துவங்கிய்து.உன் கண்கள் என்னும் கடலில் முழ்கி மூச்சுத் திணற ஆரம்பித்தேன்.பலவந்தமாக என் கண்களை உன் மீதிருந்து பிடுங்கி வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்தேன்.யோசித்தேன்” என்ன ஆயிற்று எனக்கு?இது வரை எந்தப்பெண்ணும் பாதிக்காத அளவு இந்தப்பெண் ஏன் என்னைப் பாதிக்கிறாள்”.

மீண்டும் என் பார்வை பெட்டியைச் சுற்றி வந்தது.எங்கும் இருக்கை இல்லாத நிலையில் சாமான்கள் வைக்கும் மேல் பலகை மேல் உட்கார முடிவு செய்தேன்.ஒரு துள்ளலில் மேலே ஏறி அமர்ந்தேன்.இளமையின் வேகம்.நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்ற எண்ணம் தந்த எழுச்சி.மேலேறி அமர்ந்த பின் உன்னைப் பார்த்தேன்.நீ அவசரமாக உன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாய்.நான் தெரிந்துகொண்டேன்-நீயும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய் என்று.புரிந்துகொண்டேன்-உனக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் உணர்வுகளை.

மேலேறி அமர்ந்த பின் கையில் வைத்திருந்த’இந்து’ பத்திரிகையைப் பிரித்தேன்.படிப்பது போன்ற பாவனையில் அடிக்கடி உன்னைப் பார்க்க ஆரம்பித்தேன். உன் பார்வையும் அவ்வப்போது என் மீது விழுந்தது.நான் உன்னைப்பார்க்கும் போதெல்லாம். அவசரமாக உன் பார்வையைத் திருப்பிக் கொண்டாய் .(”யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்”). சிறிது நேரம் சென்று உன்னுடன் வந்த சிறுமியிடம் நீ சொன்னாய் ” இன்னைக்கு பேப்பரே பார்க்கவில்லை”.

நான் என் கையில் இருந்த பத்திரிக்கையை மடித்து அதன் மேல் பகுதியில் என் பெயரை எழுதி அந்தச்சிறுமியிடம் கொடுத்தேன்”படிச்சிட்டுக் கொடுக்கலாம்” என்றவாறே .நீ அதை வாங்கிப் பிரிக்காமலே மேலே எழுதியிருந்த என் பெயரைப் படித்தாய் .உன் செவ்வாய் அசைவையே நான் கவனித்தேன் “ராதாகிருஷ்ணன்,M.A.”கொஞ்ச நேரம் பேப்பரைப் புரட்டி விட்டு அந்த சிறுமியிடம் நீ என்னைப் பார்த்துக்கொண்டே சொன்னாய் “மெட்ராசில் பெரியம்மா இப்ப சொல்லிட்டிருப்பா-’ராதா ரயில்ல வந்திட்டிருப்பா’ என்று”.உன் பெயரை மிக நாகரிகமாக எனக்குத் தெரிவித்து விட்டாய். என்னில் பாதி நீ என்பதைத் தெரிந்து கொண்டேன்.இது நம் இருவர் வாழ்வின் முக்கியமான நாள் என உணர்ந்தேன்.நம் பார்வைகள் மீண்டும் கலந்தன, பிரிந்தன,மீண்டும் கலந்தன.இன்பமான ஒரு விளையாட்டு.

ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்ற போது பசியால் அழுத ஒரு குழந்தைக்குப் பால் வாங்கித் தர நான் சென்று திரும்புவதற்குள் வண்டி புறப்பட்டு விட ,நான் ஓடி வந்து ஏறும்போது சன்னல் வழியே தெரிந்த உன் முகத்தில் எத்தனை கவலை;உள்ளே வந்த என்னைப் பார்த்தபின் எத்தனை நிம்மதி;என்ன கனிவு; என்ன பாராட்டு .இது போதுமே ஒருவாலிபனுக்கு, சாதனைகள் படைக்க.

சென்னை நெருங்கிக்கொண்டிருந்தது.நாம் பிரிய வேண்டிய நேரமும்தான்.இருவருமே அமைதி இழந்திருந்தோம்.பார்வைகள் பிரியாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம் .

சென்னை வந்து விட்டது.எல்லோரும் பரபரப்பாக இறங்க ஆரம்பித்தனர்.அந்த நெரிசலில் இற்ங்கும் வழியில் அருகருகே நின்ற நம் கைகள் கலந்தன.மெல்லக்கேட்டேன்”மெட்ராஸில் எங்க?” நீ மெல்லிய குரலில் உன் பெரியப்பா பற்றிய விவரங்களைக் கூறும்போது பிளாட்பாரத்திலிருந்து எப்படியோ உன்னைப் பார்த்து விட்ட உன் உறவினர் உன்னைப் பெயர் சொல்லி அழைக்க நம் பேச்சு நின்றது.இறங்கிய பின் என்னை ஒரு முறை பார்த்துவிட்டு நீ சென்று விட்டாய்,என் மனதையும் எடுத்துக்கொண்டு.

நீ சொன்ன தகவலில் சைதாப்பேட்டை என்பது தவிர ஏதும் காதில் விழாத நான் மறு நாள் சைதாப்பேட்டை முழுவதும் தேடி அலைந்து சோர்ந்து போனேன்.உன்னைப் பார்க்க முடியாமலே ஊர் திரும்பினேன்.பல நாட்கள் பைத்தியம் பிடித்தது போல் இருந்தேன்.காலம் என்னும் மருத்துவன் என்னைச் சரியாக்கினான்.ஆனால் உள்ளே அந்த சோகம் புதைந்துதான் கிடக்கிறது,இன்று வரை.

நீ எங்காவது கணவன்,பிள்ளைகள்,பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பாய்.நீ இருக்கும் இடத்தைச் சிறப்படையச் செய்து கொண்டிருப்பாய் என்பதில் ஐயம் இல்லை.

ஒரு கவிஞன் பாடினான்”சந்தனக் காடுகள் பற்றி எரிகையில் சந்தனமே மணக்கும்;என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில் ‘சக்கு’ என்றே ஒலிக்கும்”என்று.அது போல என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்தான் என் நெஞ்சோடு சேர்ந்து உன் நினைவும் வேகும்.

பின்னூட்டங்கள்

1) ராதா said;

அன்புள்ள ராதாகிருஷ்ணன்,தற்செயலாக உங்கள் பதிவைப்படித்தேன்.என்னைப் போலவே நீங்களும் அந்த நாளை இன்னும் மறக்காதிருக்கிறீர்கள் என்றறியும் போது உள்ளம் நிறைந்து போனது.நமது சந்திப்பு பற்றி என் கல்லூரித்தோழிகளிடம் சொன்னபோது அவர்கள் இதெல்லாம் உங்களுக்கு பொழுது போக்குக்காக செய்திருப்பீர்கள் என்றுசொல்ல நான் அவர்களிடம் சண்டையிட்டேன்.எனக்குத் தெரியும் ஏதோ வலுவான காரணங்களால்தான் நீங்கள் என்னைத் தேடி வரவில்லையென்று.இப்போது ஆண்டுகள் பல கடந்து விட்டன.நானும் ஒரு பொறுப்பான குடும்பத்தலைவியாய்,அன்பான கணவன்,ஆதரவான குழந்தைகள்,என்று மகிழ்ச்சியாய் வாழ்கிறேன்.நீங்களும் அதே போல் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பது நிச்சயம்.அடுத்த இடுகையில் உங்கள் மகிழ்ச்சியான குடும்பம் பற்றி எழுதுங்களேன்.

உங்கள் அன்புள்ள

ராதா விச்வனாதன்

2) கடவுள் said:

இந்தப் பின்னூட்டம் ராதாகிருஷ்ணன்,ராதா இவர்களுக்குத் தெரியாது.மற்றவர்களுக்கு மட்டுமே தெரியும் .

ராதா பொய் சொல்கிறாள்.அவள் மகிழ்ச்சியாக இல்லை.அன்பில்லாத முரட்டுக் கணவன்,அடங்காத பிள்ளைகள்.அவள் வாழ்க்கையே நரகம்தான். ராதாகிருஷ்ணன் எழுதுவான்,தன் சந்தோஷமான வாழ்க்கை பற்றி. அதுவும் பொய்தான்.அவன் வாழ்க்கையும் சோகமயமானதுதான்.இருவரும் அடுத்தவர் மகிழ்வுக்காகப் பொய் சொல்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்திருந்தால் வாழ்க்கை சொர்க்கமாக இருந்திருக்கும்.ஆனால் நான் அப்படி(விதி) எழுதவில்லையே.

[(பி.கு) மேலே கண்ட பின்னூட்டங்கள் இடுகையின் பகுதியே தவிர உண்மையான பின்னூட்டங்கள் அல்ல.கடவுள் என்பது உண்மையான கடவுளையே குறிக்கும். let there not be any confusion.

வெள்ளி, டிசம்பர் 10, 2010

சிறு பதிவர் சந்திப்பு!

( தலைப்பைப் பார்த்தவுடன் தோன்றும் ஒரு சந்தேகம்—சிறு பதிவர்களின் சந்திப்பா அல்லது பதிவர்களின் சிறு சந்திப்பா என்பதே!சுத்தமான பசுவின் பால் என்றால் பசு சுத்தமானதா அல்லது பால் சுத்தமானதா என்பது போல.இங்கு சிறு என்ற அடை மொழி எங்கு பொருந்தும் என்றால் இரண்டுக்கும்தான்.வந்த பதிவர்களும் சிறு பதிவர்களே(வயதில் அல்ல;பதிவுலக அனுபவத்தில்.சந்திப்பும் சின்னஞ்சிறிய சந்திப்பே!)

எனது பேருந்து வள்ளுவர் கோட்டத்தை அடைந்தபோது மணி சரியாக 9.13.40.போகும்போது யார் வந்திருப்பார்கள் என்று லிஸ்ட் போட வேண்டிய அவ்சியமே எனக்கில்லை.ஏனெனில் யார் வருவார்கள் என்று எனக்குத் தெரியும்!(இந்த ஆரம்பம் ஒரு பிரபல,மூத்த பதிவரின் பாணி!அவரளவுக்கு எழுத முடியா விட்டாலும் அவரின் ஆரம்பத்தையாவது காப்பி அடிப்போமே!)

வள்ளுவர்கோட்டம் நிறுத்தத்தில் யாராவது பதிவர்கள் நிற்கிறார்களா என்று பார்த்தேன்.ஒருவரும் இல்லை.அங்கிருந்து பொடி நடையாக நடந்து எம்.எல்.எம்.திருமண மண்டபத்தை அடைந்தேன்.மணி 9:30.வாசலில் என்னை வரவேற்க சக பதிவர் யாரும் நிற்கவில்ல.உள்ளே சென்றேன்.நல்ல கூட்டம்.சரசக்கும் பட்டுப் புடவைகள்.பள பளபளக்கும் தங்க நகைகள்.மணமணக்கும் மல்லிகைப் பூச்சரங்கள்.(யோவ்! அங்க ஆண்களே இல்லையா? –இருந்தார்கள்.ஆனால் இந்த மாதிரி இடங்களில் பெண்கள்தானே தனித்துத் தெரிகிறார்கள்!)-சரி புது வேட்டிகள்,சட்டைகள்!

என் பார்வை சுழன்று வந்தது.பின்னாலிருந்து என் தோளில் ஒரு கை விழுந்தது.திரும்பிப் பார்த்தேன்.சக பதிவர் வே.நடனசபாபதி (நினைத்துப்பார்க்கிறேன்).அவர் மனைவியுடன் வந்திருந்தார்.அறிமுகம் செய்து வைத்தார்.சிற்து நேரம் நானும் சபாபதியும் பேசிக் கொண்டிருந்தோம்.”நேற்று முன் தினம் உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டு விட்டு ரயில் ஏறினேன்.மதுரையில் ஒரு திருமணம்.இன்று காலைதான் திரும்பினேன்.” என்றார்.

அப்போது கையில் ஒரு கோப்பை காப்பியுடன் எங்களைக் கடந்து சென்றார் பதிவர் வாசு.
”வாசு”-கூப்பிட்டேன்.காதில் விழவில்லை
”nighthawk”-(அவர் பதிவின் பெயர்)
திரும்பிப் பார்த்தார்..
அமர்ந்தார்.பேச ஆரம்பித்தோம்.
சமீபத்திய அவரவர் பதிவு பற்றிப் பேசினோம்.முதுகு சொறிந்து கொண்டோம்!
இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சிந்தித்தோம்
வேறு சில நண்பர்கள் வந்தார்கள்.அவர்களுக்குப் பதிவு ஆரம்பிப்பது பற்றி விளக்கினோம்.(ஆமாம்—நம்ம சந்தேகத்தையே தீர்த்துக்க முடியவில்லை.இதில் அடுத்தவர் சந்தேகத்தை தீர்க்கிறோமாம்!)

”அங்க பாருங்க’—வாசு
டி.வி.யில் தாலியைக் க்ளோசப்பில் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
தாலி கட்டியாயிற்று..

”அப்புறம் என்ன?கவரைக் கொடுத்துவிட்டுச் சாப்பிடப் போக வேண்டியதுதானே?”(பசிக்க ஆரம்பித்து விட்டதே!)

எழுந்தோம்.மேடை சென்றோம்.நண்பரிடம் கவர் கொடுத்தோம்.

”சாப்பிட்டு விட்டுப் போங்க.”
(எவனாவது சாப்பிடாமப் போவானா என்ன?)

சாப்பாட்டுக் கூடம் நோக்கி விரைந்தோம்.
”யார் கேடரிங்க்?” வழக்கம் போல் என் கேள்வி.
“செல்லப்பா,சார்”
“குட் .நன்னாருக்கும்”
சாப்பிட்டோம்.பீடாவை வாயில் திணித்தோம்.தாம்பூலப் பை வாங்கிக் கொண்டோம்.
”சரி அடுத்த பதிவர் சந்திப்பு எப்போ?”
”பார்க்கலாம்!”
கல்யாணமோ,காதுகுத்தோ வராதா என்ன?!

செவ்வாய், டிசம்பர் 07, 2010

யாக்கை நிலையாமை!

அந்த வீட்டுப் பெரியவர் வாழ்வின் கடைசிக்கட்டத்தில் இருந்தார்.மருத்துவர்கள் கூறி விட்டனர்,இன்றிரவோ, நாளையோ,என்று.பெரியவரின் மகன்கள்,மகள்கள்,மற்றும் நெருங்கிய உறவினர்கள் வந்து விட்டனர்.வீடு முழுவதும் சோகம் நிறைந்திருந்தது.தவிர்க்க முடியாத ஒரு முடிவை எதிர் நோக்கிஅனைவரும் காத்திருந்தனர்.

மறு நாள் விடிந்தது.பெரியவர் வாழ்வும் முடிந்தது.வீட்டிலிருந்து உரத்த அழு குரல்கள் எழுந்தன.ஓலமும் ஒப்பாரியும் வெளிப்பட்டது.இறுதி யாத்திரைக்கான எற்பாடுகள் செய்யப்பட்டன.சில காரணங்களால்எற்பாடுகள் தாமதமாகின.அந்த வீதியில் வசிக்கும் ஒரு முக்கிய நபர் பொறுமை இழந்தவராக விசாரித்துக் கொண்டிருந்தார்."நேரமாகுதில்லே. பொணத்த எப்ப எடுக்கப்போறாங்க?"இதே நபர் முன் தினம் விசாரித்துக் கொண்டிருந்தார்"முருகேசன்(பெரியவரின் பெயர்) எப்படிப்பா இருக்கான்.ரொம்ப நல்லவன்."

சிறிது நேரம் சென்று இறுதி யாத்திரை தொடங்கியது.ஆண்கள் சுடுகாட்டுக்குச் சென்றனர்.உடல் தகனம் செய்யப்பட்டது.அனைவரும் குளித்து வீடு திரும்பினர்.வீட்டில் இருந்த பெண்கள் குளித்து முடித்தனர்.வீடு கழுவி விடப்பட்டது.

மாலை வந்தது.மெள்ள மெள்ள அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.சூழ்நிலையை இயல்பாக்க யாரோ தொலைக்காட்சிப்பெட்டியை உயிர்ப்பித்தனர்.ஆரம்பமாயிற்று அவரவர் இயல்பு வாழ்க்கை.

"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்மூழ்கி நினைப்பொழிந்தார்களே."--(திருமூலர்)

(உடல் விழுந்தபின் ஊரார் எல்லோரும் ஒன்று கூடி,ஓலமிட்டு அழுது,அதுவரையிருந்த பேரை மாற்றி,பிணம் என்று பேர் சூட்டி,சூரைமுள் நிறைந்த சுடுகாட்டிலே கொண்டு
போய்க் கொளுத்தி விட்டு,நீராடி,இவ்வண்ணம் ஒருவரிருந்தார் என்ற நினைப்பும் நீங்கினார்கள்.)

( என் மற்ற பதிவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது-சிறு சேர்க்கையுடன்)

சனி, டிசம்பர் 04, 2010

குறள் சொல்லாக் கதை!

"குறை ஒன்றும் இல்லை-----”--கைபேசி-
"சொல்லு காயத்ரி,என்ன விஷயம்?"
"இன்னிக்கு சாயந்திரம் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவே அஷ்வின்?"
"எங்க எம்.டி.என்னைக் கூப்பிட்டு ரொம்ப முக்கியமான வேலை ஒண்ணைக் குடுத்திருக்காரு.இன்னைக்கு லேட்டா உக்காந்தாவது முடிச்சாகணும்.ஏன் கேட்ட?"
"இல்லே,இன்னைக்கு நான் கொஞ்சம் சீக்கிரமே வந்துடுவேன்.எங்கேயாவது வெளியே போயிட்டு டின்னரையும் முடிச்சுட்டு வந்துடலாம்னு நெனச்சேன்."
"ரொம்ப வருந்துகிறேன்,என் இனிய இதயமே!மற்றொரு நாள்?"
"அதை அப்போப் பார்த்துக்கலாம்.இன்று நான் வேறு ஏதாவது செய்து கொள்கிறேன்."


இரவு.வெளியே எங்கும் செல்ல மனமின்றி பீட்சா வரவழைத்துச் சாப்பிட்டு விட்டு,சிறிது நேரம் டி.வி.பார்த்துவிட்டு ,படுக்கையில் படுத்தபடியே புத்தகத்தைப் புரட்டிவிட்டுத் தூங்கிப் போனாள் காயத்ரி. தன்னிடம் இருக்கும் சாவியை உபயோகப்படுத்தி அஷ்வின் கதவைத் திறக்கும்போது விழிப்பு வந்தது.கடிகாரத்தைப் பார்த்தாள்.மணி இரண்டு.அஷ்வின் உள்ளே வந்து உடை மாற்றிக் கொண்டு படுக்கையில் அவளருகில் படுத்தான்.அவள் அவனை அணைத்து அவன் உதடுகளைத் தன் உதடுகளால் ஒற்றினாள்.
"காயத்ரி,நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்"சொல்லிய படியே அவன் தூங்கிப் போனான்.

மறு நாள்.
"யே தில் யே பாகல் தில் மேரா--------"அலைபேசி
"ஹலோஅஷ்வின்,சொல்லு."
"ஹை,காயத்ரி,ஒரு மகிழ்வான செய்தி.இந்த மாதத்திலிருந்து எனக்கு ரூ.10000/= சம்பள உயர்வு.இதை இன்று மாலை கொண்டாடலாம்,சரியா"



"வருந்திகிறேன், அஷ்வின்.இன்று எங்கள் அலுவலகக்கணினி செயல்பாட்டில் கொஞ்சம் பெரிய சிக்கல்.சரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்ல முடியாது.எப்படியாயினும்,வாழ்த்துகள், அஷ்வின்"

"எனக்கு ஏமாற்றம்தான்;உடன் பணி புரியும் யாரையாவது அழைத்துச் சென்று கொண்டாடி விடுகிறேன்"

"யே தில் யே பாகல் தில் மேரா--------"அலைபேசி-
"ஹல்ல்லோ,என்ன காயத்ரி?'
"எங்க இருக்கே அஷ்வின்?"
"பார்க் ஷெரடன்.மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்"
"உடன் யார்?வழக்கமான நண்பர்களா?எதுவும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்."
"இல்லை,இல்லை,நீ நினைப்பது போல் இல்லை.ஒரு நண்பியுடன் இருக்கிறேன்."
"யார்?"
"உனக்குத் தெரியாது.புதிதாகச் சேர்ந்தவள்.என் கீழ் பணி புரிகிறாள்.சுமிதா என்று பெயர்."
"ஒகே.நான் வீட்டுக்குக் கிளம்புகிறேன்.நீ சும்மா இருந்தால் வந்து அழைத்துப் போக இயலுமா என்று கேட்பதற்காகத்தான் பேசினேன்.நான் ராஜேஷை வீட்டில் கொண்டு போய் விடச் சொல்லி விடுகிறேன்."

இப்படித்தான் பலஇரவுகள் இவர்களுக்குக் கழிகின்றன.வேலைப் பளு,மாறுகின்ற இரவு நேர வேலை,வேலையில் இருக்கும் இறுக்கம்,அதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் இவற்றின் காரணமாகப் பாதி இயந்திரங்கள் ஆகிப் போனார்கள்.ஒருவருக்கு மற்றவர் துணை தேவைப் படும் போது அது கிடைப்பதில்லை.

இவர்கள் காதலித்து மணந்தவர்கள். அப்போதாவது விடுமுறை நாட்களில் சந்தித்து மனம் விட்டுப் பேசி ஒருவர் அண்மையில் மற்றவர் மகிழ்ந்ததுண்டு.பார்க்காத இடைவெளியில் மனம் ஏங்கியதுண்டு.அப்போது இருவர் ரசனையும் ஒன்று போலத் தோன்றியது. ஒருவருக்காகவே மற்றவர் படைக்கப் பட்டவர் எனத்தோன்றியது. இப்போதோ--?அவள் ஒவியக் கண்காட்சிக்கு என்று சொன்னால் அவன் முகம் சுளிக்கிறான்.சினிமா போகலாம் எனச் சொல்கிறான்.அவள் கர்னாடக சங்கீதம் என்றால் அவன் மெல்லிசை என்கிறான். அப்போது காதலும் இருந்தது;காமமும் இருந்தது.
இப்போது,காதலிக்க நேரமில்லை;காமத்துக்கும் நேரமில்லை.என்றோ ஒரு நாள் முயக்கமும் வெறும் உடல்களின் கூடலாகத்தான் இருக்கிறது.

ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது-அதிகமான மண முறிவுகள்(மன முறிவுகளால் வந்தவை) மென் பொருள் துறையில் இருக்கும் தம்பதியரிடையேதான் எற்படுகின்றன என்று.

பணம் மட்டுமே வாழ்க்கையாகுமா?

இவர்களை ”இதுதான் காதல்,இதுவே காதல்” என்ற என் இடுகையின் (24-11-2010) நாயகனான இரவுக் காவல்காரருடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இவர்கள் காதலித்து மணர்ந்தவர்கள்.

அந்த வயதான மனிதரும் ,இறந்து போன அவர் மனைவியும் மணந்தபின் காதலிக்கத் துவங்கியவர்கள்.

எது நின்றது? வென்றது?

வியாழன், டிசம்பர் 02, 2010

ஞானம்.

அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன் நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டான்.உணவுக்காக ஊருக்குள் செல்வது கூட குறைந்து போனது.அவனைத்தேடி அவன் இருப்பிடத்துக்கே உணவு வர ஆரம்பித்தது.மக்கள் அவன் தியானம் முடியும் வரை காத்திருந்து தங்கள் குறைகளை அவ்னிடம் சொல்ல ஆரம்பித்தனர்.அவனிடம் சொல்வதனாலேயே தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதாக நம்பினர்.அவனைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் அவன் அருட்பார்வைக்காகக் காத்திருந்தது.அனைவரும் அவனுக்காகத் தின் பண்டங்களும்,பழங்களும் மற்ற உணவுப்பொருட்களும் கொண்டு வந்தனர்.அவன் அனைத்தையும் அங்கு வரும் அவர்களுக்கே பிரசாதமாகக் கொடுத்தான்.

ஒரு நாய் உணவுக்காக அங்கு வந்து அவன் தரும் உணவைச்சாப்பிட்டு விட்டு அங்கேயே கிடக்க ஆரம்பித்தது.என்றாவது அந்த நாய் எங்காவது சென்று விட்டு திரும்புவதற்கு நேரமானால் அவன் கவலைப்பட ஆரம்பித்தான்.அவனையும் அறியாமலே அந்த நாயின் மீது அன்பு அதிகமாயிற்று.ஒரு நாள் காலை அவன் கண் விழித்தபோது அந்த நாய் இறந்து கிடக்கக் கண்டான்.துக்கம் மேலிடக்கண்ணீர் பெருக்கினான்.சிறிது நேரம் கழித்து துக்கம் குறைய அவன் யோசித்தான்"ஏனிந்தத் துக்கம் ?எதற்காக அழுதேன்? யாருக்காக அழுதேன்?இதற்குக்காரணம் தேவையற்று நான் வைத்த ஆசை;பற்று.இதுவன்றோ மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணம்?இனி இறைவனை வேண்டும்போது கூட ஆசைகளை அவன் முன் வைத்து வேண்டக்கூடாது.”

அவன் ஞானியானான்.

"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனொடாயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தமாமே."---(திருமூலர்)

(பொருள்:எவ்வகைப்பட்ட ஆசைகளையும் அறவே விட்டு விடுங்கள்.ஒருவன் எவ்வளவு ஆசையுடையவனோ அவ்வளவு துன்பங்கள் உறுவன்.அவன் ஆசையை எவ்வளவு விடுகின்றானோ அவ்வளவு இன்புறுவன்.ஆதலால்,ஈசனோடு வேண்டுவது எனினும் ஆசையின்றி,அவனை வழிபடுவதே அறிவுடமை ஆகும்.)

(எனது மற்ற பதிவிலிருந்து சில மாற்றங்களுடன் இறக்குமதி செய்யப் பட்டது)

புதன், டிசம்பர் 01, 2010

காதல்-திருக்குறள் கதை-நிறைவுப் பகுதி

அவர்கள் இருவரும் கைகோத்தபடி,ஹாலுக்குள் நுழைந்தனர். அவனுக்கும் ஓவியத்தில் விருப்பமும் சிறிது புரிதலும் இருந்தாலும்,அவள் ஒவ்வொரு ஒவியத்தின் முன் நின்று அதை விமரிசித்த பாங்கைக் கண்டு வியந்தான்.ஒரு ஓவியத்தின் முன் நின்று”வாவ்,இளங்கோவின் ஒவியம்;வண்ணங்களை அவர் கையாளும் விதத்தை பாருங்கள் அச்வின்!” என்று வியந்து பாராட்டும்போதே அருகில் வந்து நின்ற மனிதர் அவளைப் பார்த்து”ஹலோ காயத்ரி” என்றழைக்க,”மிஸ்டர் இளங்கோ!எப்படியிருக்கீங்க.! இவர் என் நண்பர் அச்வின் குமார்—அச்வின்,மிஸ்டர் இளங்கோ” என்று அறிமுகம் செய்து வைத்து விட்டு,”இப்போதுதான் உங்கள் ஒவியத்தின் சிறப்புப் பற்றி அச்வினிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்”என்றாள்.

”ஹலோ” என்றவாறு கைகுலுக்கிய அவர் காயத்ரியிடம் சொன்னார்”இன்றுதான் உங்களை ஒரு கண்காட்சியில், தனியாகவின்றி, ஒரு துணையுடன் பார்க்கிறேன்..மிக விசேஷமான நண்பர் என நினைக்கிறேன்”காயத்ரியின் கன்னம் வெட்கத்தால் சிவந்தது போல் குமாருக்குத் தோன்றியது.ஒவியங்களை ரசியுங்கள் என்று சொல்லி அவர் சென்று விட்டார்.

அவர்கள் கண்காட்சியை முழுதும் இரு முறை சுற்றி வந்தனர்.வெளியே வந்து மதிய உணவு அருந்தினர்.அப்போது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
”நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக்
குறுமுறுவல் பதித முகம்
தரளம் மிடைந்து ஒளி தவழக் குடைந்து இரு
பவளம் பதித இதழ் ”
என்ற நா.பா.வின் வரிகள் மனதில் ஓடின.
அவளது அழகு அவனைப் பேச்சற்றவனாக ஆக்கியது.அதே நேரம் ஒரு பெண் அவர்களைகடந்து செல்லும்போது அவனைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.காயத்ரி சிறிது பொய்க்கோபத்துடன் கேட்டாள்”என்ன, அவளைப் பார்த்ததும் பேச்சே வரவில்லையோ?’

” நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று ”

(அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்துநோகினாலும்,யாரை நினத்து ஒப்புமையாக என்னைப் பார்க்கிறீர் என்று சினம் கொள்வாள்). அவளிடம் கெஞ்சி,கொஞ்சி, தணிந்து, பணிந்து அவளது ஊடலை நீக்க வேண்டியதாயிற்று.


இப்படியாக அவர்கள் காதல் வளர்ந்தது.ஒரு கட்டத்தில் இனி திருமணத்தை தள்ளிப் போடக் கூடாது என்று முடிவு செய்தவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினர்.எந்த வித எதிர்ப்பும் இடையூறுமின்றி திருமணம் நடந்தேறியது.

முதல் இரவு—
அத்தனை நாட்கள் வெறும் கைகளின் தொடுகையில் மட்டுமே இருந்த அவர்களுக்கு உரிமம் வழங்கப் பட்டு விட்டது.
அவ்ர்கள் தழுவிக் கொண்டனர்.ஒருவருக்குள் ஒருவர் புதைந்து போக வேண்டும் என நினைப்பது போன்ற ஒரு தழுவல்.இதய உணர்வுகளுக்கு வடிகாலே போன்ற தழுவல்.அதில் வெறும் காமம் இல்லை.அளவற்ற காதல் இருந்தது.

“வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.”
(காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல்,ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவர்க்கும் இனிமை உடையதாகும்)

அவள் முகத்தை அவன் முகம் நெருங்கியது.இதழ்களை இதழ்கள் நெருங்கின.

“ஆரஞ்சுத் தேன்சுளையா !
அங்கென்ன தத்தையொன்று
கூரலகால் கொத்திவந்த
கோவையா- யார்தான்
பவளத்தைக் கீறிவைத்தார்
பார்ப்போம் ! அடடா
அவளின் இதழா
அவை.
(நன்றி,சிவகுமாரன்)

கவிதையான
உன்னுதட்டில்
பொருள் தேடிக்குனிந்தேன் !
அர்த்தங்களை மறந்துவிட்டு
இப்போது
தேடுதலிலேயே
லயித்து விட்டேன் !(நன்றி,இனியவன்)

இணைந்தன...

“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.”
(மென்மையான மொழிளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்,பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.)

இனி அங்கு இருப்பது நாகரிகமில்லை.
அவர்கள் இனிதே வாழ வாழ்த்தி விடை பெறுவோம்.