தொடரும் தோழர்கள்

வியாழன், ஜனவரி 29, 2009

அன்புள்ள அப்பா-கடிதம்-3

3-6-1974.

அன்புள்ள அப்பா,

நாங்கள் சௌக்கியமாக வந்து சேர்ந்தோம்.இரண்டு மாதங்கள் இந்தியாவில் கழித்துவிட்டு இங்கு வந்தவுடன்,இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது சிரமமாகத்தான் இருக்கிறது.கௌதமும் ரஞ்சனாவும் வடை பாயசத்தோடு வாழை இலையில் சாப்பாடு கேட்கிறார்கள்,இந்த ஊரில்!அமெரிக்காவுக்குத் திரும்பி வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர் விசுதான்.


நான் இந்தியாவில் சில புத்தகங்களை விட்டுவிட்டேன்.அவை என் மாமியாராத்தில்தான் இருக்கவேண்டும்.அவை கிடைத்தால் பத்திரமாக வைத்திருங்கள்,நான் அடுத்த முறை வரும் வரை.அவை எனக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை;ஏனென்றால்,அவை சக்தி எனக்களித்த பரிசு.அப்பா,சக்தியின் விலாசத்தை நான் சாரதா மாமியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.அப்பா,உங்களுக்குத் தெரியுமா,சக்தி இப்போது மெட்ராஸில் ஒரு பிரசித்தமான இதய நோய் நிபுணர்;எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது.நான் அவனுக்குக் கடிதம் எழுதினேன்.அதில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.அவன் பெண்களுக்கு என்ன பெயர் தெரியுமா அப்பா?-கல்யாணி,ராகமாலிகா.அவன் என்னுடன் ஃபோனில் பேசினான்.அவன் இன்னும் மாமிசம் சாப்பிடுவதில்லை;நான் கிடைக்கவில்லை என்பதனால் அவன் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.அவன் இன்னும் பாடுகிறாயா என்று கேட்டபோதுதான் எனக்கே நினைவு வந்தது,நான் ஒரு காலத்தில் பாடிக்கொண்டிருந்தேன் என்பது.ஆனால் நான் திருச்சியையும்,என் சிறந்த ரசிகனான சக்தியையும் பிரிந்து வந்தபின் அதை மறந்தே போனேன்.

அவன் ஃபோன் வந்தபின் நான் பாட முயன்றேன் ‘குறையொன்றும் இல்லை’ என்று.ஆனால் குறை இருந்தது.நீண்டநாள் பாடாததனால் மட்டுமல்ல;என் கண்களில் நீர் நிறைந்து தொண்டை அடைத்துக் கொண்டதாலும்தான்.ஒருநாள் விசு,குழந்தைகளின் முன் பாடினேன்.கௌதம் ரசித்துக் கேட்டான்;ஆனால் அப்பாவும் பெண்ணும் பாட்டு முடியும் வரை பொறுமையின்றித் தவித்தார்கள்.

அப்பா,அடுத்தமுறை யாராவது இந்தியா வந்து திரும்பும்போது மறக்காமல் ஒரு சுருதிப் பெட்டி அனுப்பவும்.நான் மீண்டும் பாட ஆரம்பிக்கப் போகிறேன்.

இப்படிக்கு

உங்கள் அன்புள்ள
கல்யாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக