தொடரும் தோழர்கள்

திருப்பாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 12, 2016

ஆண்டாளின் சமையலறை!




”வைதேகி,வைதேகி”

“ஏன்னா கூப்பாடு போடறேள்”

இன்னிக்கு என்னதேதி

இதைக் கேக்கறதுக்கா கூப்பிட்டேள்

இல்லடி ;ஒனக்கு நெனவிருக்கா பாத்தேன்

இது கூடத்தெரியாதா? 12

 மார்கழி மாசம் என்ன தேதி? 27 டி

அதுக்கென்ன?

இன்னிக்குக் கூடாரவல்லியாச்சே!

தெரியுமே இன்னிக்குச் சக்கரைப் பொங்கல் ஞாபகம் வந்துடுத்தாக்கும்.ஏதாவது ஒரு பண்டிகைன்னு  சொல்லி விதவிதமாத் தின்னுட்டு அஜீர்த்தில அவஸ்தைப் பட வேண்டியது! அன்னிக்கு அப்படித்தான்;அனுமத் ஜெயந்திக்கு உளுந்தவடை பண்ணி னேன்; எத்தனை வடை தின்னேள்னு ஒங்களுக்கும் தெரியாது அந்த அனுமாருக்கும் தெரியாது. அப்பறம் ரெண்டு நாள் பத்தியம்.இன்னிக்குச் சக்கரைப் பொங்கல். கொஞ்சமாத்தான் பண்ணப் போறேன்

அடியே!எவ்வளவு பண்ணாலும் அதை நன்னாப் பண்ணணும்.நெய்யைக் கஞ்சத்தனம் பண்ணாம ஊத்தணும்!அள்ளிச் சாப்பிட்டா நெய் அப்படியே முழங்கை வழியா வழிஞ்சு ஓடணும்!

ஆமா! இன்னிக்கு நெய் ஓடும்;நாளைக்கு டாக்டர் கிட்ட நீங்க ஓடணும்;இந்தக் கொழுப்பு குறைய பத்து நாள் ஓடணும்! அதெல்லாம் அந்தக்காலத்துக்குச் சரின்னா! இப்பல்லாம் மாறிடுத்து;சக்கரை வியாதி,கொலஸ்ட்ரால்னு ஆயிரம் வியாதி.

போங்கோ,போய் மொதல்ல ஸ்நானம் பண்ணிட்டுக் கோவிந்தனைச் சேவிச்சுட்டு வாங்கோ; அப்பறம்தான் காபியே!

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்---




படத்தில் இருப்பது அக்கார அடிசில்! சகோதரி ஜெயஸ்ரீ கோவிந்தராஜனுக்கு நன்றி
எப்படிச் செய்வது? செய்முறை அவர் பதிவில்!








செவ்வாய், ஜனவரி 11, 2011

கூடாரவல்லி!(நெய்ப்பொங்கல்)

இன்று மார்கழி 27 ஆம் நாள்.திருப்பாவை 27ஆம் பாடல்”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்று தொடங்குகிறது.எனவே இன்று வைணவர்களுக்கு ஒரு நல்ல நாள்.இன்று கூடார வல்லி என்று அழைக்கப் படுகிறது.இன்று அவர்கள் இல்லங்களில் கட்டாயம் சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள்.அதற்கும் காரணம் இருக்கிறது.மேலே குறிப்பிட்ட பாடலில் ஒரு வரி”பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார” என்பது.’பாற்சோறு மூட ஊற்றிய நெய் முழங்கை வழியாக வழியும்படி’ என்பது பொருள்.எனவேதான் இன்று சர்க்கரைப் பொங்கலின் அவசியம்.

ஆனால் பாட்டில் கூறியது போல் இன்று நெய் வழிய சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது என்பது நடக்காது.இன்றைய விலை வாசியில் கட்டுப்படியாகாது என்பது ஒரு புறம் இருக்க,நமது உடல் நிலையும் அதற்கு இடம் கொடுப்பதில்லை. பெரும்பானமையானவர்களுக்குச் சர்க்கரை வியாதி;சர்க்கரைப் பொங்கலை வளைத்துக்கொண்டு சாப்பிட முடியாது.அது தவிர ,உயர் ரத்த அழுத்தம்,கொலஸ்டரால் எல்லாம்.’நெய் பெய்து முழங்கை வழி வார’ எனபதை நினைத்துகூடப் பார்க்க முடியாது.சம்பிரதாயத்துக்கு ஏதோ இனிப்பு குறைந்த,நெய்யில்லாத பொஙல் சாப்பிட வேண்டியதுதான்.

ஆனால் இன்று எனக்குக் கிடைத்த பொங்கல் அப்படிச் சம்பிரதாயப் பொங்கல் அல்ல.நல்ல ,இனிப்பான,நெய் சொட்டும் சர்க்கரைப் பொங்கல்!(சாப்பாடு ராமா!வந்துட்டியா?இந்த மார்கழி மாதம் முழுவதும் பொங்கலை விடமாட்டியே!.).அண்டை வீட்டில் வசிக்கும் வைணவர்கள் கொடுத்தது.(இரக்கப் பட்டுக் கொடுத்தது!);.இப்படி யாராவது இந்தமாதிரி விசேட நாட்களில், பொங்கல். களி, போளி, நோன்புஅடை என்று கொடுத்தால்தான் உண்டு. இல்லாவிடில் நமக்கு என்றுமுள்ளதுதான்!-குக்கரில் சாதம் மட்டும் வைத்துவிட்டுக்,கேட்டரர் கொண்டு வரும் பொரியல்,கூட்டு,சாம்பார்,ரசம்தான்!
.!

ஒன்று நிச்சயம்.உணவு பற்றி இப்படியெல்லாம் எழுதுவது,just for fun!
உண்பதற்காக வாழ்வது என்ற நிலையை நான் கடந்து விட்டேன்.இப்போது வாழ்வதற்காக உண்கிறேன்!

வள்ளுவர் அழகாகச் சொல்வார்-
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு”
கூடாரவல்லித்திருநாள் வாழ்த்துகள்!