தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூன் 29, 2010

பக்கத்து இருக்கையில் பருவப் பெண்!

சில மாதங்களுக்கு முன்,வெளியூர் சென்று திரும்புபோது,பேருந்தில் எனக்குப்
பக்கத்து இருக்கையில் இளைஞன் ஒருவன் வந்து அமர்ந்தான்.பேருந்து புறப்பட்ட அடுத்த நிமிடமே,அவன் தூங்க ஆரம்பித்தான்.ஆழ்ந்த உறக்கத்தில் அவன் சாய்ந்து என் மீது விழ ஆரம்பித்தான்.ஓரிரு முறை அவனைத் தள்ளிவிட்டேன்.ஆனால் மீண்டும் மீண்டும் அவன் மீது சாய ஆரம்பித்தான்.ஒரு முறை அவன் என் மீது சாயும் தருணத்தில் நான் சிறிது முன்னே நகர்ந்து கொள்ள,அவன் எனக்கும் இருக்கையின் சாய்மானப் பலகைக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுந்து ,பின் சமாளித்து எழுந்தான்.பின் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் என்னிடம் சொன்னான்”நேத்து ராத்திரி பூரா ரயிலில் தூக்கமே இல்லை.நிக்க இடம் கிடைத்ததே பெரிய விஷயம்.ரயிலிலிருந்து இறங்கி இப்ப என் ஊருக்குப் போயிட்டிருக்கேன்.அதனாலதான் தூங்கி உங்க மேல சாஞ்சுட்டேன் ஸார்.”அவனைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.ஆனால் சம்பந்தமே இல்லாத ஒருவன் தூங்குவதற்கு என் தோளைக் கொடுக்க முடியுமா?

யோசித்தேன்.இவனுக்கு என் பையன் வயதுதான் இருக்கும்.அவனைப்போன்றுதான் இவனும் உடை அணிந்திருக்கிறான்.இதே இடத்தில் என் பையன் இருந்தால் நான் என்ன செய்திருப்பேன்.அவன் சாய்ந்து தூங்குவதற்கு வாகாக என் தோளைக் கொடுத்திருப்பேன்.அவன் தூக்கம் கெட்டுவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இப்பொதோ?அவனது தூக்கத்தைக் கலைப்பதற்கான வழிகளை நான் முயன்று கொண்டிருக்கிறேன்.ஏன் இப்படி.?—இவன் எனக்கு சம்பந்தமில்லாதவன்,எவனோ ஒருவன் என்கிற என் மனோபாவம்.இவனிலும் நான் என் பையனைக்காண முடிந்தால் என் நடத்தை வேறு விதமாக இருக்கும்..

இது போன்ற நேரங்களில்,சொந்தமில்லாதவர்,சொந்தமானவர் என்பது மட்டுமே அளவு கோல் அல்ல.பக்கத்து இருக்கையில் ஒரு அழகிய இளம்பெண் அமர்ந்தால் துள்ளும் மனது,ஒரு உடல் தளர்ந்த/அழுக்கான முதியவள் அமர்ந்தால் சுருங்கிக் கொள்கிறது.அந்நபரது வயது மற்றும் தோற்றம் இவையும் நமது மன நிலையைத் தீர்மானிக்கின்றன..

எனவே அடிப்படையில் மனோபாவம் மாற வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்கும் மனோபாவம் எளிதில் வராது.ஆனால் ஓரளவுக்கு சக மனிதர்களைப் புரிந்துகொள்ள,நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

“ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக