தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 23, 2012

தட்ச யக்ஞம்!



அந்தச் செய்தி கேட்டதிலிருந்தே அபர்ணா பரபரப்பானாள்.

இத்தனை நாட்களாக அடக்கியிருந்த பாசம் தலை தூக்கியது.

கங்காதர் வருகைக்காகக் காத்திருந்தாள்.

வழக்கமாகச் சீக்கிரம் வருபவன் அன்று நீண்ட நேரம் தாமதமாக்குவது போல் தோன்றியது.

அவன் வந்தான்.

என்னங்க!அப்பாவுக்கு இன்னைக்கு அறுபதாம் கல்யாணமாம்.வாங்க ;போயிட்டு வரலாம்”

”நம்மை மதிச்சு நமக்கு அழைப்பு அனுப்பியிருக்காரா உங்க அப்பா?இல்லையே!அப்ப எப்படிப்போவது?”

”அதுக்காக என்னால எப்படிப் போகாம இருக்க முடியும்?நான் போனா அவங்க சந்தோஷம் தான் படுவாங்க.நான் போயிட்டு வந்துடறேங்க”

”அபர்ணா!போய் அவமானப்பட்டுத் திரும்பப் போறே”

” இல்லீங்க!அப்படியெல்லாம் ஆகாது.போகாம என்னால இருக்க முடியாது என்னை மன்னிச்சிடுங்க.”

நான் சொல்றதைக் கேக்காமப் போறே!போ!

அபர்ணா புறப்பட்டாள்.போகும் வழியில் அப்பாவுக்கு வேட்டி சட்டையும்,அம்மாவுக்குப் புடவை, ரவிக்கைத்துணியும் மற்றும் பழம்,பூவெல்லாம் வாங்கிக்கொண்டாள்.

மண்டபத்தில் ஒரே கூட்டம்.

உள்ளே நுழைந்தவளை வரவேற்க யாருமில்லை.

முக்கிய நிகழ்ச்சியான தாலி கட்டுதல் முடிந்து போயிருந்தது.

எல்லோரும் பரிசு கொடுப்பதற்காக மணமக்களைச் சுற்றிக் குழுமியிருந்தனர்.

அபர்ணா அவர்களை நோக்கி முன்னேறினாள்.அப்பா,அம்மா இருவரும் அவளைப் பார்த்து விட்டனர்.

அம்மா முகத்தில் மகிழ்ச்சி,பயம்,என்று கலவையான உணர்ச்சி.

அப்பா முகம் கோபத்தில் சிவந்தது;வெறுப்பில் சுளித்தது.

 வெடித்தார்”கண்டவளையெல்லாம் யார் வரச் சொன்னது?இந்த மாதிரி விழாவுக்கு வருவதற்கு ஒரு தகுதி வேண்டும்.அவளை வெளியே அனுப்புங்க.”

இந்த நேரத்தில் தன் கோபத்தைக் காட்ட மாட்டார் என்று நினைத்து வந்த  அபர்ணா அதிர்ந்தாள்.

மீண்டும் அப்பாவின் உரத்த குரல்.

“வாங்கோ,நம்ம சொந்தக்காராள்ளாம் வாங்கோ.யாரோ ரெட்டிப் பொம்பளைக்கு இங்க என்ன வேலை?”

எல்லோரும் இவளையே பார்த்தனர்.அப்படியே பூமி பிளந்து தன்னை விழுங்கி விடக் கூடாதோ   எனத்தோன்றியது.

அழுகை வந்தது.

கட்டுப்படுத்திக் கொண்டாள்.

இவர் முன் அழுது நாம் தாழ்ந்து விடக்கூடாது.

மண்டப வாசலுக்கு வந்தாள்.அடக்கி வைத்திருந்த அழுகை சரேலென வந்தது.

அப்போது ஒரு போலிஸ் ஜீப்பும்,பின்னால் ஒரு அரசு  காரும் வந்து நின்றன.

காரிலிருந்து அமைச்சர் குமார ரெட்டி இறங்கினார்.

கங்காதரின்  ஊர்க்காரர்.ஒரே ஊர் ஒரே சாதி என்பதால் கங்காதரிடம் நிறைய நெருக்கம் உண்டு.இவளையும் நன்கு அறிவார்.

அவர் இவளைப் பார்த்தவுடன்”அடடே,அபர்ணா!எப்படிம்மா இருக்கே?நடேச ஐயரை உங்களுக்குத்  தெரியுமா ?கங்காதர் வரல்லையா?” பேசிக்கொண்டே நெருங்கியவர் ,அவள் கண்ணீரைப் பார்த்துத் திடுக்கிட்டு”ஏம்மா அழுவறே”என்று விசாரித்தார்.

அந்த நொடியில் அவளது கோபம்,வன்மம் மேலோங்க அவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

“இல்ல அங்கிள்,உள்ளே போய்ப் பரிசு கொடுக்கப்போகும்போது அவங்க சாதிக்காரங்களா இருந்தாங்க.என்னைப் பார்த்து ரெட்டிப் பொம்பளைக்கு என்ன அவசரம்னு கேவலமா பேசிட்டார்.நம்ம சாதியையே கேவலப்படுத்திட்டாரேன்னுதான் வருத்தம்”

அமைச்சரின் முகம் சிவந்தது.

“அப்படியா சொன்னான் அந்த நடேசன்?.இந்த ரெட்டி கிட்டதானே வரணும். பார்த்துக் கறேன்” என்று சொல்லி விட்டு  ‘வண்டியிலே ஏறும்மா;போகலாம்.உன்னை வீட்டில் விட்டுவிட்டு கங்கா வையும் பார்த்துவிட்டுப் போகிறேன்” என்று அவளுடன் புறப்பட்டுப் போய் விட்டார்.

அமைச்சரின் வருகை அறிந்து அவரை வரவேற்க வாசலுக்கு வந்த நடேசன், அவர், அபர்ணாவுடன் காரில் ஏறிப்போவதைப் பார்த்து,அதிர்ந்து போனார்,

காரில் சென்று கொண்டிருந்த அபர்ணாவுக்கு ஒரு குரூர திருப்தி,அரசாங்க ஒப்பந்தப் பணிகளில் லட்சக்கணக்காக சம்பாதித்து வரும் அப்பாவின் தொழில் அடையப்போகும் வீழ்ச்சியை எண்ணி.

12 கருத்துகள்:

  1. "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல்.”
    என்ற பொய்யாமொழிப்புலவரின் குறள் அபர்ணாவுக்கு ஞாபகம் வரவில்லையா?

    பதிலளிநீக்கு
  2. புராணத்தில் தக்கனின் வேள்வித் தீ! உங்கள் கதையில் அபர்ணாவின் கோபத் தீ!

    பதிலளிநீக்கு
  3. மனித மனம்
    இங்கே பேசி நிற்கிறது....

    பதிலளிநீக்கு
  4. அபர்ணாவின் அப்பாவைப் போல எத்தனையோ அப்பாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனாலும் அபர்ணாவின் எண்ணம் தவறுதான்.

    பதிலளிநீக்கு
  5. யக்ஞம்! வேள்வி மட்டும் புரிந்தது. தந்தை 6 அடி என்றால் பிள்ளை 16 அடி ?!

    பதிலளிநீக்கு
  6. அப்பவுக்கு மகள் தப்பாம பிறந்திருக்கு என்று இதைத்தான் சொல்வார்களோ

    பதிலளிநீக்கு