தொடரும் தோழர்கள்

சனி, ஜூன் 21, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?...என் பதில்கள்!



கெளம்பிட்டாங்கய்யா,கெளம்பிட்டாங்க!

கொஞ்சநாளா  யாரும் கெளப்பலையேன்னு பாத்தேன்.

இப்பத் திரும்பவும்  நல்லாக் கெளப்பறாங்கய்யா பீதியை!

சிவனே என்று இருந்த என்னை,செல்லத்தாத்தா,லொள்ளுத்தாத்தா என்றெல்லாம் அழைக்கும் பிரியமான பேத்தி அம்பாளடியாள் இந்தச் சிக்கலில் மாட்டி விட்டு விட்டாள்.

பேத்தியின் அன்புக் கட்டளையை மீற முடியுமா?

 1.உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

ஒரு இளைஞனைப் பார்த்து இப்படிக்கேட்டால் என்ன பதில் சொல்வது? அதைப் பற்றி யெல்லாம் நினைக்கவே இல்லை.....
உண்மையில் நூறு பேருக்காவது அன்னதானம் செய்து கொண்டாட விரும்புவேன்

2.என்ன கற்றுக் கொள்ள விரும்புகுறீர்கள் ?..

கற்றது கைம்மண்ணளவு;கல்லாதது உலகளவு!
(மிருதங்கம் கற்றுக்கொள்ளலாமா என யோசிக்கிறேன்)

3.கடைசியாக  நீங்கள்  சிரித்தது எப்போது ,எதற்காக ?.

இதை எழுதும்போது கூடச் சிரித்துக் கொண்டேதான் எழுதுகிறேன்-என்னைப்போய் தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறாளே பேத்தி என!-
இதற்கெல்லாம் கணக்கு உண்டா என்ன?!



4.24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன ?....


தியானம்?!

5.உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன ?....

ஒன்றென்றிரு—(இருவரும் ஒன்றென்றிரு;நமக்கு ஒன்றென்றிரு!)

 6.உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள் ?...

என் பிரச்சினையையே என்னால தீர்க்க முடியல;இதில மன்னரின் பிரச்சினையை நான் எங்க தீர்க்கப் போறேன்?!
தனியொருவனுக்குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம். இந்தப் பிரச்சினையைத் தீர்த்தால் போதாதா?

7.உங்களுக்கு ஒரு பிரச்சனை அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள் ?...

அம்மா; அண்ணா,அறிவு,ஆண்டவன்!

 8.உங்களைப்பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார் அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?...

.அதனால் நல்லது நடந்தால் சும்மா இருப்பேன்.இல்லையெனில்அந்த ஆளைப் பற்றிய தவறான செய்தியை நான் பரப்பி விடுவேன்.:)))...
உண்மையில் ஒதுக்கித் தள்ளுவேன்!


9உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?


 துணையில்லா வாழ்வை எதிர்கொள்ளும் துணிவை வளர்த்துக் கொள்ளச் சொல்வேன்.

10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?..

படிப்பேன்,பாட்டுக்கேட்பேன்,டிவி பார்ப்பேன்,இணையத்தில் மேய்வேன், படுப்பேன், எழுவேன்,..... படிப்பேன் ,பாட்டுக்கேட்பேன்,டிவி பார்ப்பேன்…………………..!!

நான் யாரையும் அழைக்கப்போவதில்லை!

அனைவரும் வருக!

சனி, ஜூன் 14, 2014

பதிவர் நாள் வாழ்த்து!



நான் கடவுளிடம் ஒரு மலர் கேட்டேன்
    
   அவர் ஒரு தோட்டத்தையே கொடுத்தார்.

நான் கடவுளிடம் தண்ணீர் கேட்டேன்

    அவர் ஒரு நதியையே கொடுத்தார்

நான் கடவுளிடம் ஒரு நண்பனைக் கேட்டேன்

    அவர் எனக்கு வலைப்பூவைத் தந்தார்

ஒன்றல்ல,பல நட்புக்கு வகை செய்தார்


பதிவில் எழுதினாலும் இல்லையென்றாலும்

   நட்பு என்றும் நிலைத்து நிற்கும்!

பதிவு தொடர்ந்தாலும் தொடராவிடினும்

   நட்பு  என்றும் தொடரும்!


அன்பு நண்பர்களுக்கு உலக வலைப்பதிவர் நாள் வாழ்த்துகள்.