தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூலை 13, 2012

மீண்டும் ஒரு காதல் கதை!


தில்லி விமான நிலையம்.

பாதுகாப்புச் சோதனை முடிந்து,உள்ளே சென்று,விமானத்தில் ஏறக் காத்திருக்கும் கூட்டத்தில் ஒருவனாக நான்.

ஒரு இருக்கையில் அமர்ந்து,கையில் செய்தித்தாளை பிரித்து வைத்தபடி அமர்ந்திருக்கிறேன்.

பார்வை என்னவோ அங்கிருக்கும் மனிதர்களையும்,உள்ளே வந்து கொண்டிருப்பவர்களையும் மேய்ந்துகொண்டிருக்கிறது.

அப்போதுதான் அவர்கள் வந்தார்கள்.

ஆண் ,பெண்,ஒரு சிறுவன்,ஒரு சிறுமி.

அவனுக்கு 40 வயதும் அப்பெண்ணுக்கு 35க்குள்ளும் இருக்கலாம். சிறுவன் வயது  பத்துப் பன்னிரண்டும் சிறுமிக்கு அதை விடக் குறைவா கவும்  இருக்கும்.

அந்த ஆணை நானறிவேன்.செயலகத்தில்  நிதித்துறைத் துணைச் செயலாளராகப் பணி புரியும் ராகவன் ஐ..எஸ்.அந்தப்பெண் வேறு பக்கம் பார்த்துக்கொண்டே வந்தவள், கணவன் ஏதோ சொல்வதைக் கேட்டுத் திரும்பினாள்.அவள் முகத்தை,ஆண்டுகள் பலவான பின்னும் என் மனதை விட்டு  நீங்காத  அந்த முகத்தைப் பார்த்தேன். 

கடவுளே!பதினாறு ஆண்டுகளுக்குப் பின்….!

என் அருகில்  இருக்கைகள் காலியாக இருந்தபடியால் அவர்கள் என்னை நோக்கி வர ஆரம்பித்தனர்.நான் என் முகத்தைச் செய்தித்தாளில் புதைத்துக்  கொண்டேன்.என்ன செய்யப்போகிறேன்?

அருகில் அவர்கள் வருவதை உணர முடிந்தது.காற்றில் மிதந்து வந்த வாசனைத் திரவியத்தின் மணத்துடன்,எனக்குப் பழக்கமான அவள் மணம்.இன்னும் மாறாத ,குறையாத அதே மணம்.

நீங்க உக்காருங்க.என் தோழி கல்யாணி அங்கே இருக்கா.நான் பாத்துட்டு வரேன்என்று அவள் கணவன்,குழந்தைகளிடம் கூறும் குரல் கேட்டது.அவள் மணம் மெல்ல விலகியது.

நான் செய்தித்தாளிலிருந்து என் முகத்தை வெளிக்காட்டினேன்.என் அருகில் அவனும்,அப்பால் அவன் குழந்தைகளும் அமர்ந்திருந்தனர்.

ஹலோ!நான் ராதாகிருஷ்ணன் .ஏபிசி வங்கி மேலாளர்.”கையை நீட்டினேன்.

நீட்டிய கையைப் பிடித்துக் குலுக்கியவாறே அவன் சொன்னான்ராகவன்.துணைச் செயலாளர்.நிதித்துறை

தெரியும் .உங்களை இரு முறை வேலை நிமித்தம் சந்தித்திருக்கிறேன்.” நான் சொன்னேன்.

பொதுவாக ஏதோ பேசிக் கொண்டிருந்தோம்.

அவள் திரும்பி வந்துகொண்டிருந்தாள்.

வரும்போதே என்னைப் பார்த்து விட்டாள்.அந்த முகத்தில் தோன்றிய உணர்சிகளை என்ன வென்றே சொல்ல முடியாது.

வியப்பு,  பயம்,சோகம்,அன்பு,அதிர்ச்சி இவற்றின் கலவை. அவள் அருகில் வந்ததும் அவன் சொன்னான்.

மைதிலி!சார் ராதாகிருஷ்ணன்;வங்கி மேலாளர்.மெட்ராஸ்தான் போகிறார்.சார்!இவங்க என் மனைவி,மைதிலிஇருவரும் கை கூப்புகிறோம்

என் இதயம்மைதிலி,மைதிலிஎன்று இடும் ஓலம் அவன் காதுகளுக்குக் கேட்டு விடுமோ எனப் பயம் எனக்கு!

அவள் பார்வை!என் கண்களின் வழியாகப் புகுந்து இதயத்துக்குள்ளும் ஊடுருவும் பார்வை.அவள் அமர்கிறாள்

நான் கேட்கிறேன்எத்தனை நாள் மெட்ராசில்?”

அவன் சொல்கிறான்இரண்டு நாள்தான்.அதன் பின் ஸ்ரீரங்கம் போகிறோம்.அங்கு என் பெற்றோர் இருக்கிறார்கள்.நீங்கள்?”

நான் மெட்ராசில் ஒரு வாரம்.பின் மதுரை ஒரு வாரம்.மீண்டும் தில்லி.ஒரு வாரம் போதாதுதான் .நண்பர்களையெல்லாம் சந்திப்பதற்கு.’நான்

எனக்கு இரண்டுநாள் கொஞ்சம் பணி சார்ந்த வேலையிருக்கிறது மெட்ராசில்.மைதிலிக்குத்தான் நேரமே போதாது.!மெட்ராசில் இவள் பொழுது போக்கும் விதமே அலாதி.கபாலி கோவில், தண்ணித்துறை ஆஞ்சனேயர் கோவில், சாந்திவிஹார்,சாந்தோம், இப்படி.நாளை காலையே கபாலீச்வரர் கோவில் போய் விடுவாள் என் மாமனார் ஒரு வீர வைஷ்ணவர்.ஆனால் இவள் இப்படி!”சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

நான் அவளைப் பார்க்கிறேன்.கண்களில் கண்ணீர் கசிவது போலத் தோன்றியது . என்னவோ சொல்ல வருவது போல் தோன்றியது

வேண்டாம் மைதிலி.அழுது விடாதே.நாம் பிரியும்போது என் மார்பில் முகம் புதைத்து அழுதாயே,அப்போது உன் கண்ணீர்க் கரையும், மைக்கரையும் பட்ட சட்டையை ஒரு பொக்கிஷமாகப் போற்றி வைத்திருக்கிறேன்.இத்தனை நாட்களாக என்னை நீ நினைவில் வைத்திருப்பாயா என்ற சந்தேகத்தில் இருந்தேன்.இன்று தெரிந்து கொண்டேன்.நாம் சந்தித்த இடங்களைக் கூட நீ இன்னும் மறக்கவில்லை என்று.நாளை காலை கபாலி கோவில் போக எண்ணியிருந்தேன்.ஆனால் மாட்டேன்.இருவருக்கும் ஒரு தர்ம சங்கடமான நிலை உருவாக வேண்டாம்.நீ என்னை மறக்கவில்லை.இது போது எனக்குஎன் மனத்தின் பேச்சு.

விமானத்தில் ஏற அழைப்பு வருகிறது .புறப்படுகிறோம்.அவளைப் பார்க்கிறேன்.அவளும் என்னை.கண்களின் வழியே காலத்தை கடந்து கடந்த காலத்துக்குப் பயணிக்கிறேன்.

அதில்தானே இத்தனை நாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! 


(இவற்றையும் படித்து விடுங்களேன்!) ஒன்று
                                                         இரண்டு
                                                         மூன்று
                                                          

34 கருத்துகள்:

  1. விழிகளால் பேசிடும் காதல் காவியம் அருமை. பாராட்டுக்கள். சார்.

    இதுபோல அவரவர் வாழ்வினில் ஆயிரம் ஆயிரம் ஊமைக் கதைகள் இருக்கக்கூடுமோ?

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை
    முடிவு மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஐயா நீங்களா எழுதினீங்க...?..:) அழகாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. ஐயா... இதே கருவில் ஒரு கவிதை எழுத மனசுக்குள் எண்ணம் இருந்தது ...அதற்க்கு மிக சிறந்த inspiration கிடைத்து விட்டது நன்றி அருமை ..ஒருநாள் கிறுக்குவேன் அன்று நீங்கள் சொல்லுங்கள் எப்படி இருக்குன்னு ..

    பதிலளிநீக்கு
  5. மறக்காமலிருப்பது சரியா? மறந்திருந்தால் சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலர் பார்வையில் மறவாதிருத்தலும்
      அல்லாதவர் பார்வையில் மறத்தலும் சரி.
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  6. முந்தைய பதிவுகளை (கவிதைகளை) படித்துவிட்டு இதைப் படிக்கும்போது தான் சுவாரஸ்யம் கூடுகிறது. கதையில் கவிதையில் கலக்குகிறீர்கள். நடத்துங்கள் உங்கள் இராஜ்யத்தை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழையவற்றையும் சேர்த்துப் படித்தால்தான் புரிந்துகொள்ள முடியும் என்பதால்தான் சுட்டி தந்தேன்.
      நன்றி சபாபதி அவர்களே

      நீக்கு
  7. அன்பின் அண்ணா - கற்பனை கொடி கட்டிப் பறக்கிறதா ? பலே பலே ! சூப்பரா எழுதறீங்க - நெஜம்னே நம்ப வைக்கிறீங்க - நெஜம் தானா ? நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புனைவா?நிஜமா?எனக்கே புரியாத ஒரு மயக்க நிலை!
      நன்றி சீனா.

      நீக்கு
  8. அன்பின் அண்ணா - ஒன்று இரண்டு மூன்று ஏற்கனவே படித்து விட்டேன்

    பதிலளிநீக்கு
  9. நெகிழ்வு. சில பழைய ஞாபகங்களுக்கு என்னையும் அழைத்துச் சென்றது. அருமை.

    பதிலளிநீக்கு
  10. ஒன்று, இரண்டு, மூன்று நானகையும் படித்தேன்! உண்மையா கற்பனையா?

    அறியேன் என்றாலும், ஒரு சோகமும் அதனூடே ஒரு சுகமும்
    என்னுள்ளே ஓடுவதை உணர்கிறேன்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. இருவருக்கும் ஒரு தர்ம சங்கடமான நிலை உருவாக வேண்டாம்.நீ என்னை மறக்கவில்லை.இது போது எனக்கு”.
    உருக வைத்த வரிகள் அழ வைத்துவிடும் போல.

    பதிலளிநீக்கு
  12. இத்தனை நாட்களாக என்னை நீ நினைவில் வைத்திருப்பாயா என்ற சந்தேகத்தில் இருந்தேன்.இன்று தெரிந்து கொண்டேன்.நாம் சந்தித்த இடங்களைக் கூட நீ இன்னும் மறக்கவில்லை என்று.//
    அழகான மற்றும் அழவைக்கும் காதல் கதை மிக அருமை சார்.....

    பதிலளிநீக்கு