தொடரும் தோழர்கள்

புனைவுகள்.நெடுங்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவுகள்.நெடுங்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 31, 2015

விதியா?மதியா?=-அன்புள்ள மான்விழியே-இறுதிப் பகுதி



விஜயசிம்மன் ஈஸ்வரதயவில் யமனை வென்ற மார்க்கண்டேயனோ அல்லது நயனி யமனுடன் போராடி சத்யவானின் உயிரை மீட்ட சாவித்திரியோ அல்லர் என்பதை மிஹிரர் நன்கு அறிவார்.

வேத உபநிஷத்துக்களையும் பக்தி நூல்களையும் சித்தாந்தங்களையும் பகவத்கீதை மற்ற பக்தி நூல்களையும் சித்தாந்தங்களையும் கரைத்துக் குடித்த மிஹிரரையே பாசம் கிரங்கச் செய்து மாளவொண்ணா சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சோகத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் கண்ணீரில் மூழ்கவைக்க அவருக்கு துணிவில்லை.

தன்னை சுதாரித்துக் கொண்டு விஜயனின் ஜாதகத்தை வேறு கோணங்களில் அலசினார். அவனுக்கு புத்திர பாக்கியம் இருப்பது தெள்ளத் தெளிவாக உறுதியானது. மணநாள் அன்றே கருவுற்றால், நயனி ஒரு சான்றோணை ஈன்றெடுப்பாள் என்ற கணிப்பு அவருக்கு ஆறுதலாக இருந்தது.

நயனி விஜயசிம்மன் தம்பதிகளின் முதலிரவு ஏற்பாடுகளை செய்ய விரைந்தார் வராகமஹிரர்.

இதற்கிடையே, மணமேடையிலிருந்து இளைப்பாற வந்த நயனியை மூக்குத்தியின் கல் எப்படி கழன்றது என்று மாதங்கி வினவ, “முகூர்த்தம் முடிந்தவுடன் மாலை மாற்றிக் கொள்ளும் போது பூமாலையின் நார் மூக்குத்தியில் மாட்டிக் கொண்டு கல்லை இழுத்து விட்டது அந்தக் கல்லை பத்திரப்படுத்த விஜயசிம்மனிடம் கொடுத்ததாக கூறினாள்.

அருகிலிருந்த விஜயசிம்மன், தன் தோழனும், மிஹிரரின் சிஷ்யனுமான ஈஸ்வர பட்டனிடம் கல்லைக் கொடுக்க, அதை அவன் அருகிலிருந்த மணிக்காட்டியின் மணலில் சொருகியதாக விளக்கினான்.

கல்லை பத்திரப்படுத்த வேறு இடம் கிடைக்கவில்லையா என மாதங்கி சற்று கோபமாக வினவ, “விலை உயர்ந்தகல்”, அதனுள் போட்டால் யாரும் தொட சாத்யமில்லை. மேலும் அந்த நிமிடத்தில் குரு (மிஹிரர்) அவசரமாக கூப்பிட்டதால் அப்படி செய்தேன், என்றான் ஈஸ்வரன்.

 “கோபமே வராத மிஹிரருக்குக் கூட உன்னுடைய இந்த செயல் சீற்றத்தை வரவழைத்திருக்கும்”. “அந்த மணிக்காட்டியை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தார்.” என்ன அதிசயம். இந்த கல்யாண கலாட்டாவில் கூட அதை கண்டு பிடித்து என்னை சலிக்க வைத்து கல்லை மீண்டும் பதிக்க வைத்துவிட்டாரே! என்று மாதங்கி அதிசயித்தாள்.

இன்னும் சிறிது நேரத்தில் மாதங்கி மிஹிரரிடம் இந்த விஷயத்தை சொல்லப்போகிறாள்.
அந்த நிமிடம் வரை பாசவலையில் சிக்கி சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த மிஹிரரை அப்படித் தவிக்கவிட்டது தான் ஈஸ்வர சங்கல்பமோ




என் குறிப்பு:ஐந்தாம் இடம் குழந்தைப் பேற்றைக் குறிக்கும்.அந்த பாவமோ,அதன் அதிபதியோ தீய கோளுடன் சேரமலோ,அவற்றால் பார்க்கப்படாமலோ இருந்து அத்தோடு நல்ல கோள்களின் இணைவு பெற்றிருந்தால் நிச்சயம் மக்கட்பேறு உண்டு.குரு எனப்படும் வியாழன்தான் குழந்தைப் பேற்றுக்குக் காரகன்.

வராக மிகிரருக்கு ஏன் இந்த மன வருத்தம் ஏற்பட்டது?அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
.....அன்று அவருக்குச் சந்த்ராட்டமமாக இருக்கலாம்!

சாதகப்படி நயனி கணவணை இழக்க வேண்டும் என்பது விதி!

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் மணம் நடந்தால் விதியை வெல்லலாம் எனக் கண்டது மிகிரரின் மதி!

சனி, ஆகஸ்ட் 29, 2015

விதி வென்றதா?-அன்புள்ள மான்விழியே-3



எவ்வளவு ஆராய்ந்தும் இந்த அபாயத்தைப் போக்கும் உபாயம் அவருக்கு புலப்படச் சற்று நாட்கள் ஆயின.

நயனியின் வாழ்க்கைத் துணை விஜயசிம்மன் என்பதால் அவனுடைய ஜாதகத்தையும் கணித்து ஆராய்ந்த போது மிஹிரருக்கு ஒரு பொறி தட்டியது.

பங்குனி உத்திரம் ஸ்ரீமன் நாராயணன் திருமகளை ஸ்ரீரங்கச் க்ஷேத்திரத்தில் மணந்த நாள் வரவிருக்கும் அந்தத்திருநாளின் ஒரு குறிப்பிட்ட இரு நிமிடங்களில் மாங்கல்ய தாரணம் முடிந்தால் விஜயனின் ஆயுள் பலம் பெறும் என்பதை உணர்ந்தார்.

அப்போதே தை மாதம் நடந்து கொண்டிருந்தது. வஸந்தகால பங்குனி உத்திரத்தில் அந்த இருநிமிட சுபமுகூர்த்தத்தில் நயனி-விஜயன் திருமண முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டது

அரண்மனை பொற்கொல்லனை அழைத்து, தன்வந்திரி தைலத்தை தடவி நயனியின் மூக்கில் அணிவிக்கப்பட்ட ஐந்து கல் வைர மூக்குத்திக்கு அவளுடைய நாசி அழகு சேர்த்தது.

நயனியின் ராசிக்கு பொருத்தமான கல் வைரம் என்பதால் மிஹிரர் திருப்தி அடைந்தார்.

முகூர்த்த நாழிகையில், குறிப்பிட்ட இரண்டு நிமிடங்களில் மாங்கல்ய தாரணம் முடிந்தேர மிஹிரரே ஒரு துல்லியமான மணிக்காட்டியை வடிவமைக்க முற்பட்டார்.

குடும்பத்துடன் பிரயாகை யாத்திரை மேற்கொண்டு, பிரத்யேகமாக திரிவேணி சங்கமத்திலிருந்து மணல் எடுத்து வந்தார். மணிக்காட்டியில் நிரப்புவதற்காக, விஜயனின் தாயினது ஆத்மா சாந்தி அடைய விசேஷ சடங்குகளையும் செய்தார். தந்தையின் நலனுக்காக பிரார்த்தித்தார். ஷிப்ரா நதிக்கரையில் மாசி, பங்குனி மாதங்களில் மிஹிரர் நடத்திய யாகங்கள் உஜ்ஜயினியை புனிதமாக்கி இருக்கக்கூடும்.

மாதங்கி, பிரயாகையிலிருந்து எடுத்து வந்த புனித மண்ணை நன்கு உலர்த்தி, ஐந்து முறை சலித்து மிஹிரர் முன்னிலையில் மணிக்காட்டியில் நிரப்பினாள். மணிக்காட்டி துல்லியமாக இயங்கியது.

நடுநிசியிலிருந்து விடிவெள்ளி தோன்றும் வரை தான் நிசப்தம். மற்ற நேரங்களில் வேத கோஷங்களும், பக்தி கீதங்களும் இடைவிடாது ஒலித்துக் கொண்டு இருந்தன. திருமணத்திற்கு முன்தினம் மாதங்கியும் நயனியும் மீண்டும் மண்ணை சுத்தம் செய்து மணிக்காட்டியில் நிரப்பினார். மிஹிரர் சரிபார்த்து திருப்தி அடைந்தார்.

மணநாள் உஜ்ஜயினியை குதூகலிக்கச் செய்தது. முன்பு  மிதிலையில் ஜனகர் நடத்திய சீதாராம கல்யாணம் இப்படித்தான் இருந்திருக்கும் என பிரஜைகள் நம்பினர்.

குறிப்பிட்ட முகூர்த்த்த்தில் மிஹிரர், மாதங்கி தம்பதியினர் சௌ.நயனியை சி.விஜயசிம்மனுக்கு கன்யாதானம் செய்து வைத்தனர். மனத்தளவில் மகனாக ஏற்றுக் கொண்டிருந்த மிஹிரர் தம்பதிகளுக்கு விஜயன் இப்போது மருமகன் ஆனான்.

சப்தபதி போன்ற சடங்குகளுக்குப் பிறகு, மகளை மடியில் வைத்து விஜயனிடம் ஒப்படைக்கும் நிகழ்வின் போது நயனியின் கண்களில் ததும்பிய  கண்ணீரை மிஹிரர் துடைத்தார். அவள் மூக்குத்தியில் பதித்த ஒரு கல்லை காணவில்லை என்பதைக் கண்டு துணுக்குற்றார்.

வெளியே ஒடிப்போய் சூரியனைப் பார்த்தார். மணிக்காட்டியில் மணல் தூவலை உற்று கவனித்தார். தூவலின் வேகம் சற்று குறைந்தது போல உணர்ந்தார்.
மணவிருந்து முடிந்தவுடன் மீண்டும் சூரியனின் கோணத்தையும் மணிக்காட்டியின் வேகத்தையும் ஒப்பிட்டார். நேரத்தில் தவறு இருப்பதை உணர்ந்தார். மணிக்காட்டியை உள்ளே எடுத்துச் சென்று மாதங்கியை அழைத்து மணலை சலிக்கச் செய்தார்.

மூக்குத்தியின் ஒரு வைரம் சல்லடையில் ஒளிர்ந்தது. அந்தக்கல் மணிக்காட்டியின் மணல் வழி துவாரத்தில் மாட்டிக் கொண்டதால் ஓட்டம் குறைந்து வேகம் மாறியது. வைரக்கல்லை மீண்டும் மூக்குத்தியில் பதிக்க ஏற்பாடு செய்தார் மிஹிரர்.

நேற்று மாதங்கியும் நயனியும் மணிக்காட்டியின் மணலை சுத்தம் செய்து நிரப்பியபோது நடந்த அசம்பாவிதம் நயனி-விஜயன் மணவாழ்க்கையில் சூறாவளியை கிளப்பி விட்டிருக்கிறது என மிஹிரர் அனுமானித்தார்.

முகூர்த்தம் குறிப்பிட்ட இரண்டு நிமிடங்களில் நடந்திருக்குமா என்ற அச்சம் மிஹிரரை கவ்விக் கொண்டது.

பிற்பகலில் சகல கிரக பலன்களும் நீயே சர்வேஸ்வராஎன்ற பொருளில் அடானாராகத்தில் இசை வித்வான் பாடிய பாடல் சபையை மகிழ்ச்சியில் பொங்க வைத்தாலும் மிஹிரரின் மனத்தை சஞ்சலத்தில் ஆழ்த்தியது.

வராக மிஹிரரின் மூளை இடர்பாட்டிலும் வெகு வேகமாக செய்யப்பட்டது.
கால ஓட்டத்தை எத்தனை சிரத்தையாக அளவிடமுற்பட்டாலும் பிழை ஏற்பட சாத்யம் உண்டு.”

சுபவேளையை தவறவிட்டிருந்தால் இளம் தம்பதிகளின் மண வாழ்க்கை எத்தகைய வழியில் பாதிப்பு ஏற்படும் என்பதைக் காலம் தான் சொல்லும்.

(தொடரும்)

என் குறிப்பு: சாதகத்தில் எட்டாம் இல்லம் என்பது ஆயுள் இடம் என்று சொல்லப்படுகிறது.இந்த எட்டாம் இடமும் அதன் அதிபதியும் சாதகரின் வாழ்நாளின் அளவைச் சொல்லும்.சாதக கணிதம் என்பதே இடமாற்றமும் சேர்மானமும்தான்!(permutation and combination) நான்காம் இடம் தாயைக் குறிக்கும்.எனவே நான்குக்கு எட்டாம் இடம் தாயின் ஆயுளைக் குறிக்கும்!இது போலவே மற்ற வீடுகளுக்கும்.தேவகேரளம் எனும் நூலில் மிக அருமையான சூத்திரம் ஒன்று சொல்லப்பட்டிருக்கிறத,மரண காலத்தை அறிய.