தொடரும் தோழர்கள்

வியாழன், அக்டோபர் 31, 2013

உணவும் உணவு சார்ந்த இடமும்--உக்காரை!



அந்நாளில் தீபாவளி என்றால் அம்மா கட்டாயம் செய்யும் பட்சணங்கள் இவைதான்......

லட்டு,மிக்சர்(மொறு மொறு மிக்சர்!),சில நேரங்களில் மைசூர்பாகும் சேர்ந்து கொள்ளும்.

இவையெல்லாம் ஜீரணமாக வேண்டாமா(கடலை மாவு ஆச்சே!)?அதற்காகத் தவறாமல் தீபாவளி மருந்து என்றழைக்கப்படும் லேகியம்.

எங்கள் வீட்டில் தீபாவளியன்று காலையில் பஜ்ஜி செய்யும் வழக்கம் உண்டு.

அன்று அமாவாசையாக இருந்தால் வெங்காய பஜ்ஜி கிடையாது!

அம்மா செய்து வந்த முக்கியமான ஒன்றை விட்டு விட்டு எதையெதையோ பேசிக் கொண் டிருக்கிறேன்!

ஆம் .ஒக்காரை அல்லது உக்காரை!

இன்று எத்தனை பேருக்கு அது பற்றித் தெரியும்?

எந்த இனிப்புக் கடையிலும் அது விற்கப்படுவதில்லை—கிராண்ட் ஸ்வீட்ஸ், அடையார் ஆனந்தபவன்,.......இத்யாதி.

ஆனால் இன்று தேடிப்பிடித்து வாங்கிவிட்டேன் ஒக்காரையை....’சுஸ்வாத்’ தில்.

இன்னும் சாப்பிட்டுப்பார்க்கவில்லை.

அதற்குள் இந்த அவசரப் பதிவு!

இந்த ஆண்டு ஒக்காரையுடன்,மாலாடும் ,மிக்சரும்,தீபாவளி மருந்தும் வாங்கிவிட்டேன்.
மற்ற வீடுகளிலிருந்து ஏதாவது வரும்போது அவர்களுக்கு நாம் ஏதாவது கொடுக்க வேண்டாமா?

இனி உக்காரையின் செய்முறை!



//தேவையான பொருள்கள்:
பயத்தம்பருப்பு – 1 கப்
கடலைப்பருப்பு – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
வெல்லம் – 2 கப்
நெய் – 4 தேக்கரண்டி
மு.பருப்பு – 50கிராம்
தேங்காய்
ஏலப்பொடி.
ukkaarai 1
செய்முறை:
  • பருப்புகளை நன்கு களைந்து 4 மணிநேரம் ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து  முடிந்தால் கிரைண்டரில் நன்றாக- மிக நன்றாக இட்லி மாவுப் பதத்தில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவை இட்லித் தட்டுகளில் இட்டு, வெயிட் போடாமல் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து நன்கு ஆறவிடவும்.
  • இட்லிகள் நன்கு ஆறியபின், மிக்ஸியில் இரண்டு இரண்டு இட்லிகளாக உடைத்துப் போட்டு ஒரு சுற்று சுற்றினாலே பொடியாக உதிர்ந்துவிடும். இட்லிகள் நன்கு ஆறியி ருக்க வேண்டியது முக்கியம். (சின்ன வயதில், மிக்ஸியில்லாத காலத்தில் நெய்யைத் தொட்டுக் கொண்டு கை விரல்களால் திரித்துத் திரித்து சிறு கட்டி கூட இல்லாமல் பாட்டி மெனக்கெட்டு உதிர்த்தது நினைவிருக்கிறது.)
  • வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து *முற்றிய பாகாகக்* காய்ச்சி ஏலப்பொடி சேர்க்கவும்.
  • பின், அடுப்பை சிம்மில் வைத்து, உதிர்த்த பொடியைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஒன்றாகக் கலக்கும் வரை அடுப்பு எரிந்தால் போதும்.
  • தேங்காயை மிக மிகச் சன்னமாக நறுக்கி கால் கப் எடுத்துக் கொள்ளவும்.
  • நெய்யைச் சூடாக்கி, உடைத்த முந்திரி, தேங்காய்த் துணுக்குகளைப் பொரித்துச் சேர்க்கவும்.
  • ஆறியதும் ஒரு பாத்திரத்தில் அடைத்து வைத்து ஒரு நான்கு மணி நேரம் கழித்துப் பார்த்தால் உதிர் உதிராக இருக்கும்; எடுத்து உபயோகிக்கலாம்.
ukkaarai 2
* இட்லி உதிர்ப்பதற்கு முன் நன்கு ஆறியிருக்க வேண்டும், பாகு மிக முற்றியதாக இருக்க வேண்டும் என்பதும் உதிர் உதிரான நல்ல உக்காரைக்கு மிக முக்கியம்.
ukkaarai 3
சில சாதாரணக் குறிப்புகள்:
* இந்த ‘எங்கள் பக்கத்தி’லேயே ஒரு பக்கத்தில் உக்காரைக்கு 2 பங்கு பயத்தம் பருப்பும், 1 பங்கு கடலைப் பருப்பும் போட்டு அரைக்க வேண்டும் என்று சொல்வார்கள். முழுவதுமே பயத்தம் பருப்பிலேயே கூட சிலர் செய்வார்கள். அதெல்லாம் நம் இஷ்டம்தான். பொதுவாக, கடலைப் பருப்பு அதிகம் இருந்தால், நிறைய உக்காரை காணும்; நல்ல உதிராக வரும். பயத்தம் பருப்பு அதிகம் இருந்தால் நல்ல மணமாக இருக்கும். நடுநிலைவாதிகள் பாதிப்பாதி எடுத்துக் கொள்ளலாம்.


( எனது இடைச்செருகல்:மீனாக்ஷி அம்மாளின் “சமைத்துப் பார்” புத்தகத்தில் துவரம் பருப்பும் சேர்க்கச் சொல்லியிருக்கிறார்கள்)

சந்தோஷமான குறிப்புகள்:
* இந்த உக்காரை மூன்று நான்கு நாள்கள் வரை கெடாது. முக்கியமாக, செய்தவுடனே (பக்கி மாதிரி ) சாப்பிடுவதைவிட ஒருநாள் கழித்துச் சாப்பிட்டால் சுவை மிகுதியாக இருக்கும். (புளியோதரை மாதிரி.)
* எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.//



இந்தச் செய்முறை,படங்களுடன், திருமதி ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களின் ”தாளிக்கும் ஓசை “ வலைப்பூவிலிருந்து எடுத்தது.மிகச் சிறப்பான சமையல் குறிப்புகள் நிறைந்த வலைப்பூ!
இவரது வெங்காய சாம்பார் செய்முறையை முன்பு ஒரு முறை நான் வெளியிட்ட போது, யு. எஸ் ஸில் சிலர் செய்து பார்த்து,அதன் பெருமை யு.எஸ். முழுவதும் பரவி விட்டதாம்!

நன்றி JG!

டிஸ்கி:வாங்கிய உக்காரை டேஸ்ட் ரொம்ப சுமார்!




 

செவ்வாய், அக்டோபர் 29, 2013

உறக்கம் வராத இரவுகளில்!



உறக்கம் வரவில்லை நேற்றிரவு!

மல்லாந்து,குப்புற,

இரு புறமும் மாறி மாறி,

ஒருக்களித்துப் புரண்டு,

தலையணை இன்றி,

தலையணை அணைத்து,

தலையணை இரண்டாக,

கால் நீட்டி,கால் மடக்கி,

மரவட்டையாய்ச் சுருண்டு,

எப்படிப் படுத்தும்

உறக்கம் வரவில்லையே சகி!

யோசித்தேன் ஏனென்று ..

விளங்கியது அதற்கான காரணம்.

உன் கனவில் நான் விழித்திருந்து

உன்னோடு மகிழ்ந்திருக்கையில்

எப்படி வரும் உறக்கம் எனக்கு?!!

திங்கள், அக்டோபர் 28, 2013

தீபாவளி இனிப்புகள்!



முருகேசனுக்கு ஒரு மாதமாகவே சரியான வருமானமில்லை.

அன்றாடச் சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலை.

இந்த நேரத்தில் தீபாவளி வேறு வருகிறது.

திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆகின்றன.

தீபாவளிக்கு மனைவிக்கு ஒரு விலை குறைந்த சேலையும்,தனக்கு ஒரு வேட்டியும் துண்டு மாவது வாங்குவது என்பதே இயலாத செயல் எனத் தோன்றியது.

தீபாவளிக்குப் பத்து நாட்களே பாக்கி.

அவன் மனம் சோர்ந்து போயிருந்த நேரத்தில்,அவனை நன்கு அறிந்திருந்த,பரமசிவம் அவனுக்கு அந்த வேலையை வாங்கிக் கொடுத்தார்.

 அவருக்குத் தெரிந்த வீட்டில் கொஞ்சம் தச்சு வேலை. முருகேசன் வேலையில் கெட்டிக்காரன்.
வேலை சுத்தமாக இருக்கும்.

கிடைத்த வேலை இரண்டு,மூன்று நாளையில் முடியும் வேலைதான்.

ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

முருகேசன் கடவுளுக்கு நன்றி சொன்னான்.

வெள்ளியன்று வேலையைத் துவங்கினான்.

இரண்டு நாட்களில் முடித்து,சனியன்று மாலை கூலியை வாங்கிவிட்டால்,மறுநாள் வேட்டி துண்டு சேலை ,ஏதாவது இனிப்பும் வாங்கி விடலாம்.

முதல் நாள் மாலையில் லேட்டாகவே அமர்ந்து வேலையைச் செய்தான்.

மறுநாளும் சீக்கிரமே வந்து மாலைக்குள் வேலையை முடித்து விட்டான்.

வீட்டுக்காரர் முருகேசனின் வேலையைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

அவனுக்கான கூலி ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு, வீட்டில்செய்த இனிப்புகள் என்று சொல்லி ஒரு பொட்டலம் கொடுத்தார்,

அதை வாங்கி தனது ஜிப் போட்ட ரெக்ஸின் கைப்பையில் வைத்துக்கொண்டான்.

எதிர்ப்புறமாகத் திரும்பி நின்று வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.

மேல் சட்டையை அணிந்து கொண்டு நன்றி சொல்லிப் புறப்பட்டான்.

தி.நகர் பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அவனது ஜிப் பையை.கையிடுக்கில் வைத்துக்கொண்டான்.

தெருவில் திருவிழாக்கூட்டம்.

அக் கூட்டத்தில் இடிபட்டு,நீந்தி,ஒருவாறாய் பேருந்து நிலையத்தை அடைந்தான்..

அவன் போக வேண்டிய பேருந்து இல்லை.

ஆசுவாசப் படுத்தி கொண்டு,கையிடுக்கில் இருந்த பையை எடுத்தான்.

அதிர்ச்சி அடைந்தான்.

பையின் பின்புறம் கிழிக்கப்பட்டு இருந்த்து.

அவன் உள்ளே வைத்தது இல்லை!

அடப்பாவி எவனோ அடிச்சுட்டானே என வருந்தினான்.

என்ன செய்வது?

பேருந்து வந்தது.

ஏறி அமர்ந்தான்.

சட்டைப் பையில் இருந்த சில்லறையை எடுத்துக் கொடுத்து சீட்டு வாங்கினான்.

வீடு போய்ச் சேர்ந்தான்.

மனைவியிடம் பையைக் காட்டி நடந்த எல்லாவற்றையும் சொன்னான்.

அவளும் வருத்தப்பட்டாள்.

இருவரும் இத்தோடு போச்சே என ஆறுதல் அடைந்தனர்.

முருகேசன் இடுப்பு வேட்டியில் சுருட்டி இறுக்கி வைத்திருந்த பணத்தை எடுத்து மனைவி யிடம்  கொடுத்துச் சொன்னான்”நாளைக்கு சேலை, வேட்டி, கொஞ்சம் இனிப்பு வாங்கிடலாம் .அவங்க வீட்டில குடுத்த இனிப்பைச் சாப்பிட நமக்குக் கொடுத்து வைக்கல!”