தொடரும் தோழர்கள்

சனி, ஆகஸ்ட் 31, 2013

பதிவர் திருவிழா 2013--நேரடி ஒளிபரப்பு

சென்னை பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாத நண்பர்களே!
சில தட்டுக்களில் விதவிதமான நொறுக்குத் தீனி.
 ஒரு ஃபிளாஸ்க்கில் காபி/டீ
ஒரு ஜக்கில் குடி நீர்.
ஓரிரண்டு டம்ளர்கள் .
இவை அனைத்துடன் நாளை காலை ஒன்பது மணிக்கு முன் கணினி முன் அமர்ந்து இந்தத் தளத்தைத் திறந்து வைத்துக்கொள்ளுங்கள் .
ஒன்பதுக்கெல்லாம் நேரடி ஒளிபரப்புத் தொடங்கும்.
நிகழ்ச்சி தொடங்கிய பின் எழுந்து செல்வது கடினம் ;
எனவேதான் முன் சொன்ன ஏற்பாடுகள்
காணுங்கள்;கருத்துச் சொல்லுங்கள்
அன்புடன்
சென்னைபித்தன்.


வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

சந்திப்போமா?!



 பதிவர் திருவிழா 2013
ஒரு வாரமாகக் கழுத்து வலி.

எனவே பதிவேதும் எழுதவில்லை.

திருவிழாவுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இடையில் இருக்கும் நிலையில் எல்லோரையும் போல் என் எதிர்பார்ப்பும் கூடிக் கொண்டே போகிறது.

அனைத்துப் பதிவர்களின் ஈடுபாடும்,பங்களிப்பும் பிரமிக்க வைக்கிறது.

பதிவர்கள் அனைவரும் ஒரு குடும்பம் என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது

நிகழ்ச்சி நிரலை காணும்போது ’ஒரு நாள் போதுமா’ என்று பாடத் தோன்றுகிறது.

சென்ற ஆண்டு ஒரு புத்தக வெளியீடு.

இந்த ஆண்டு நான்கு புத்தகங்கள்!

அடுத்த ஆண்டு?

இப்போதே பல பதிவர்கள் தங்கள் படைப்புகளை அடுத்த திருவிழாவில் வெளியிடும் திட்டங்களில் இறங்கியிருப்பார்கள்.

புத்தக வெளியீட்டுக்கே ஒரு நாள் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு,திருவிழா இரண்டு நாள் நிகழ்ச்சியாகக் கூட மாறலாம்!

நினைக்கும்போதே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது

இப்போது வரவிருக்கும் விழாவில் கடைப்பிடிக்க வேண்டிய சில நாகரிகங்கள்......

1.அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும்.

2.
மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்.

3.
பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும்.

4.
ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.

ஞாயிறன்று சந்திப்போம்!

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

நிறவெறி காரணமாக ஒரு கொலை!



என் அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

எதிர் அறைக்குப் புதிதாக ஒருவன் குடி வந்தான் போலிருக்கிறது.

கம்பிகளின் வழியே அவனைப் பார்த்தேன்.

முதல் பார்வையிலேயே அவனை எனக்குப் பிடிக்காது போயிற்று.

காரணம் அவன் நிறம்!

அப்படி ஒரு வெள்ளை!

என் காதுபட பலர் அந்த நிறத்தைப் பாராட்டிப் பேசக் கேட்டேன்.

ஆனால் எனக்கு அந்த நிறத்தைப் பார்த்தால் இனம் புரியாத வெறுப்பும் எரிச்சலும்தான் வந்தது.

என்ன சோகை பிடித்த மாதிரி நிறம்.

வடக்கிலிருந்து வந்தவனாக இருப்பானோ?

அவன் பெரும்பாலும் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தது எரிச்சலை மேலும் அதிகப் படுத்தியது.

அவனைப் பார்க்கப் பார்க்க வெறுப்பும் அதிகமாகியது!

சில மாதங்கள் கழிந்தன!

ஒரு நாள் .............

உறங்கிக் கொண்டிருந்த நான் ஏதோ கெட்ட கனவு கண்டு கண் விழித்தேன்.

திடுக்கிட்டேன்.

எனக்கு மிக அருகில் அவன்;என் முகத்தையே உற்றுப் பார்த்தபடி.

அவசரமாக எழுந்து நகர்ந்தேன்.

அவன் என்னை பின் தொடர்ந்தான்.

நின்றேன்.

அவனை நேருக்கு நேர் பார்த்து முறைத்தேன்.

அவன் அதை லட்சியம் செய்யாமல் என் மீது பாய்ந்தான்.

இத்தனை நாள் வெறுப்பும் ஒன்று சேர்ந்து என் கைகளில் பலமாக வந்த்து.

என் நீண்ட நகங்களால்  அவன் முகத்தில் பிராண்டினேன்

வேகமாகத் தள்ளினேன்.

அவன் தள்ளிப் போய் தரையில் தலை பலமாக அடிபட விழுந்தான்.

எழுந்திருக்கவேயில்லை.

வெளியிலிருந்து கூச்சல்”அய்யய்யோ!கொன்னுட்டா!

அருகில் சென்று முகர்ந்து பார்த்தேன்.

ஆம் !இறந்து விட்டான்!

இனித் தொந்தரவு இல்லை!

.......சத்யா

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.........
ஏழு வயது சத்யாவைக் கூடுவதற்காகப் போன மூன்றரை வயது செம்பியன்,அவளால் தாக்கப் பட்டுப் படு காயமடைந்து மரணமடைந்தான்!செம்பியன் என்பது வெள்ளைப் புலி.சத்யா என்பது வங்கப் புலி.நடந்த இடம் சென்னை மிருக்காட்சி சாலை.


திங்கள், ஆகஸ்ட் 19, 2013

ஒரு பொன் மாலைப் பொழுதும்...கதையின் புதிய முடிவும்!


என் சென்ற பதிவில் நான் குறிப்பிட்டிருந்தவர்களில் ரூபக் ராம் தன் முடிவை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார்.ஒரு புதிய கோணத்தில் சிந்தித்து எழுதப்பட்ட சுவாரஸ்யமான முடிவு............

இதோ உங்களுக்காக..............
*************************************
புகைப் படம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய அன்று, இரவு முழுவதும் அந்தப் பெண்ணின் ஞாபகமே. அவள் அழகை எண்ணி அல்ல, ஒரு வயதை கடந்த பின் உடல் அழகு பெரிதாக தெரிவதில்லை. அவள் இதழால் சிரித்தாலும் அவள் மனதில் ஒரு சலனம் இருந்ததை என்னால் உணர முடிந்தது. இலவச தேநீர் குடிக்க அங்கு செல்லும் பொழுது, அவளிடம் அவளைப் பற்றி முழுதும் கேட்டறிந்து, இயன்ற வரை உதவ வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த நான் எப்படி தூங்கினேன் என்றே தெரியவில்லை.
கனவில், என் தலைமையில், இந்திய-பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சமீபத்திய எல்லைச் சண்டைகளை பற்றி சமாதானம் பேசுகையில், என் மனைவி என் தலையில் தட்டி எழுப்பி, பால் வாங்க பையைக் கொடுத்தாள். அதிகாலை ஆறு மணி, சென்னையில் சூரியன் தோன்றும் அந்த விடியலின் இதமான வானிலையை ரசித்துக் கொண்டு, பேப்பர் போடும் சிறுவர்களின் வேகத்துக் ஈடு கொடுக்க முடியாமல், மெதுவாகவே எங்கள் தெரு முனையில் இருக்கும் பால் கடைக்குச் சென்றேன்.

பாக்கெட் பால் வாங்கிக் கொண்டு, அருகில் இருக்கும் டீக் கடையில் ஒரு தந்தி வாங்குகையில், இலவ மூலிகை தேநீர் பற்றி எண்ணம் எழ, இதழோரம் சிக்கனமாக சிரித்துக் கொண்டேன். அப்பொழுது அந்த டீக் கடை சிறுவன், செய்தி போஸ்டர்களை மாற்றிக் கொண்டிருந்தான். 

'எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறல் - நான்கு இந்திய ராணுவ வீரர்கள் மரணம்' .....
'தலைவா படம் தமிழ் நாட்டில் வெளி வருமா? - விஜய் ரசிகர்கள் ஏக்கம்' ... 

'ஆரணி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏழு பேர் பலி'....
'இந்திய அரசின் இலங்கைத் தமிழர் கொள்கைகளை எதிர்த்து மர்மக் கும்பல்  பகிரங்க மிரட்டல்- புலனாய்வுத் துறை வலைவீச்சு'...

வேகமாக எல்லாச் செய்திகளையும் ஒரு நோட்டம் விட்டு, வீடு திரும்பினேன்.     
வீட்டு வாசலில் ஒரு வெள்ளை நிற ஸ்கோடா-பேபியா நின்று கொண்டிருந்தது. வாசலில் ஒரு ஜோடி கருப்பு சூ மற்றும் ஒரு ஜோடி செருப்பு இருந்தன. உள்ளே நுழைந்தால் முகம் முழுதும் முடி, மண்டைக்கு மேல் கருப்பு கொண்டையுடன் ஒரு சிங் மற்றும் வீரப்பன் மீசை, ஐந்து லிட்டர் தொந்தியுடன் ஒருவரும் சோபாவில் அமர்ந்திருந்தனர். நேராக என் மனைவி என்னிடம் வந்து 'உங்க ப்ளாக் பிரண்ட்ஸ்னு சொல்றாங்க, காலைலேயே வந்து உசிர வாங்கணுமா?' என்று என் காதைக் கடித்து விட்டு, பால் பையை வாங்கிக் கொண்டு சமையல் அறையினுள் சென்றாள்.
அந்த சிங் 'உம்' என்றிருக்க, உடன் வந்தவர் 'மிஸ்டர் பித்தன் நாங்க உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. எங்க கூட வெளிய வரிங்களா?' என்று ஒரு அதிகாரத்துடன் கேட்டார். அவரிடம் என்னால் ஏனோ மறுப்பு சொல்ல முடியவில்லை. பித்தன் என்று என் புனைப் பெயரால் அழைத்த பெருமிதமாகக் கூட இருக்கலாம். என் மனைவியிடம் 'வெளியே போகிறேன்' என்று சொல்லியவுடன் 'மூணு காபி மிச்சம்' என்ற சந்தோஷத்துடன் பச்சைக் கொடி காட்டி வழியனுப்பினாள். வெளியே வந்து அந்த காரில் ஏறும் பொழுதுதான், அந்த நம்பர் பிளேட்டை கவனித்தேன். அதில் 'G' என்று சிவப்பில் இருந்தது.           
முன் சீட்டில் அமர்ந்த  சிங் என்னிடம் (ஆங்கிலத்தில் பேசியது வாசகர்களுக்காக தமிழில்), 'நாங்க உங்க ப்ளாக்ல 'ஒரு பொன் மாலைப் பொழுதும் ஒரு பெண்ணின் அழைப்பும்!' அப்படின்னு எழுதின கதைய படிச்சோம். அதுல நீங்க குறிப்பிட்ட பெண் எப்படி இருப்பா என்று சொல்ல முடியுமா?' . 'இவங்க என் ப்ளாக் எல்லாம் படிக்கறாங்களா, பரவாயில்லையே' என்று என்னுள் மகிழ்ந்து, அந்தப் பெண்ணின் அடையாளங்களை சொல்லி முடித்து, பின்னர் 'ஏன் கேக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?' என்று நான் கேட்கும் பொழுது,காரில் சற்று குளுமை அதிகம் இருப்பதை உணர்ந்தேன்.     
'ஒரு கும்பல் நம்ம அரசுக்கு சவால் விடுது. இந்தக் கும்பல் நக்ஸலைட்ட விட ஆபத்தானது என்று எங்களுக்கு தகவல் வந்திருக்கு. அவங்க தங்களுக்கு தேவையான ஆட்கள பல வழியில அடையாளம் கண்டு அவங்க கூட்டத்துல இணைச்சிக்கறாங்க. இலவ தேநீர் வழியில சிக்கனவர் தான் நீங்க' என்று வண்டி ஒட்டிக் கொண்டிருந்த தொந்தி கணபதி கூறியவுடன் என்னுள் ஒரு ஆவேசம் எழுந்தது.
'சார் நான் எல்லாம் அவங்க கூட சேர மாட்டேன். நான் ஒரு சாமானியன்.' என்று கூறி சன்னல் வழியே ஓரக் கண்ணால் பார்க்கையில் வண்டி அடையார் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தது. 
'நீங்க ஒத்துக் கலைன்னா அவங்க உங்கள கட்டாயப் படுத்தி கடத்தி, சித்தரவதை செய்து உங்கள வேல வாங்கிடுவாங்க' என்று அந்த சிங் கூறினார்.
'அட இருந்தாலும் இந்த முதுமையில என்ன வச்சி அவங்க என்ன செய்வாங்க?' என்று நான் கேட்டு முடிக்கும் பொழுது வண்டி ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு முட்டுச் சந்தில் நின்றது.         
அந்த தொந்தி கனபதி ஒரு ஏளனச் சிரிப்புடன் என்னை பார்த்து 'உங்க தமிழ் தான் அவங்களுக்கு வேணும்' என்றார்.
ஆச்சரியத்துடன் 'என் தமிழா? ஒன்னும் புரியலையே ' என்று நான் விழிக்க, 'இப்ப எல்லாம் தீவிரவாதம் என்பது, குண்டு ரத்தம் அப்படி எல்லாம் இல்லை. எல்லாச் சண்டைகளும் இணையத்தில் தான். எந்த நிமிடமும் நம் அரசு ரகசியங்களை ஊடுருவ நூறு சீன ஹாக்கர்கள் அயராது உழைப்பதாக செய்தி உள்ளது. இவங்க புது இயக்கம், தமிழ் சார்ந்த இயக்கம், அவங்க கொள்கைகளை தமிழ் மக்கள் கிட்ட கொண்டு சேர்க்க அவங்களுக்கு உங்களப் போல தமிழில் நல்ல புலமை உள்ள ஒரு பிளாக்கர் தேவைப் படுது' என்று கூறி சிங் என் சந்தேகத்தை தீர்த்தார்.
'உங்களுக்கு தான் எல்லாம் தெரியுதே, அவங்கள புடிச்சு விசாரிக்கறத விட்டு என்ன ஏன் அழைச்சுக் கொண்டு வந்தீங்க?' என்று கேட்டேன்.
'அவங்களுக்கு பின்னால ஒரு பிரபலம், நிறைய பண பலம் கொடுக்குது, அது யார் என்று கண்டு பிடிச்சுட்டு அப்பறம் தான் அவங்கள பிடிக்கனும். அவரைக் கண்டு பிடிக்கற வரைக்கும் மிஸ்டர் பித்தன் நீங்க அரசு ஒற்றனா செயல்படனும்' என்றார் சிங்.             
இருவரும் என் வாயில் இருந்து வரப்போகும் வார்த்தையை எதிர் பார்த்து என்னை நோக்க, என் நெற்றியில் இருந்து கிளம்பிய வியர்வைத் துளி, என் புருவத்தில் மோத, அதை துடைக்க வேண்டுமா என்று என் கை யோசித்தது.   

*******************************************************?!

சனி, ஆகஸ்ட் 17, 2013

ஒரு பொன் மாலைப் பொழுதும்............... கதையின் இன்னொரு முடிவும்!

 ”ஒரு பொன் மாலைப்பொழுதும்,கதையின் ஒரு முடிவும்” என்ற  சென்ற பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் வாசு அவர்கள் ஒரு முடிவு எழுதியிருக்கிறார்கள்.பின்னூட்டத்தில் எழுதப் பட்டதால் பலரைச் சென்றடைய வாய்ப்பு இல்லாமல் போய் விடும்.எனவே அவரது முடிவை இஙே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
----------------------------------------

வீடு திரும்பிய பின் வெகு நேரம் மனம் மாலை நடந்தவற்றை அசை போட்டு கொண்டே இருந்தது. மனம் ஒரு குரங்கு அல்லவா ! வயது ஆனாலும் ( உடலுக்கு) மனம் அந்த பெண்ணின் அழகை பேசி சிரித்த பாங்கினை எண்ணி எண்ணி அசை போட்டு கொண்டே இருந்தது .அடுத்த நாள் நிச்சயமாக கடற்கரை சென்று மூலிகை டீ சுவைத்து விட வேண்டும் ( இலவசமாக இல்லா விட்டாலும் !) என்று முடிவு செய்து கொண்டேன் . அந்த எண்ணமே சுவையாக இருந்தது !


அந்த நேரம் கைபேசி மணி ஒலித்தது ..அந்த பெண் தான் ... " இது நினைவூட்டு தொடர்பு .. நாளை நிச்சயமாக வருவீர்கள் அல்லவா,.."என மயக்கும் குரலில் கேட்க மது உண்ட மந்தி போல் மயங்கி : உறுதியாக என்று ஆங்கிலத்தில் மந்தகசமாக கூறினேன் , அவளே மீண்டும் எவ்வளவு அதிகமாக மக்கள் வருகிறார்களோ அவ்வளவு எனக்கு ஊக்க தொகை கிடைக்கும் என்று கூறினால் . கவலை வேண்டாம் உறுதியாக வருகிறேன் என்று மீண்டும் கூறினேன் . அடுத்த நாளுக்காக காத்திருந்தேன் .. இரவும் வந்தது ..இரக்கமில்லா இரவு இருதயத்தை இறுக்கியது ...இரவு சுருங்காதா ...


மீண்டும் ஒரு மணியோசை ..இம்முறை ஒரு பத்திரிகை நண்பனிடம் இருந்து ...ஒரு செய்தி ... ஒரு பெண்ணும் ஆணும் போலீசிடம் சிக்கிய தகவல் ..அவர்கள் கையில் மூலிகை தேனீர் குறித்து விளம்பர ஏடுகள் முதலியவை பறிமுதல் செய்ய பட்டனவாம் திடுக்கிட்டு மேற் கொண்டு தகவல் கேட்டேன்


தகாத தொழில் செய்யும் கும்பலாம் ..அவர்கள் கையில் ஒரு புகைப்பட கருவியும் இருந்ததாம் . மீதி தகவலை காலை கூறுவதாக கூறி தொடர்பினை துண்டித்தான் .கேட்டவுடன் மனதை கிலி பற்றியது ..என்னையும் அல்லவா படம் எடுத்தார்கள் ..ஐயோ படம் பிடி பட்டால் ....எண்ணவே மனம் பதறியது ..மயக்கம் கலைந்தது . வாசலுக்கு ஓடினேன் வினை தீர்க்கும் என் அப்பன் முன் நின்று கண நேர சபலத்திற்கு மனம் அடிமை ஆனதை நினைத்து
வருந்தி நின்றேன் ...வரும் பிரச்சினை எண்ணி உள்ளம் அழுதது ..இம்முறை என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்றி விடப்பா என்று உள்ளம் உருகி வேண்டிக்கொண்டேன் ..
மறு நாள் விடிய கூடாது என்று இம்முறை மனம் எண்ணியது ..யாருக்காகவும் காத்திருப்பது இல்லையே உதய சூரியன்.


கனத்த உள்ளதுடன் வேண்ட வெறுப்புடன் எழுந்து தொலை பேசி ஒலிக்காக காத்திருந்தேன் .ஒவ்வொரு கணமும் சித்திரவதை தான் . தொலை பேசி சரியாக உள்ளதா என்று மீண்டும் மீண்டும் சரி பார்த்துக்கொண்டே இருந்தேன்


இப்போது மூலிகை தேநீர் மறந்து விட்டது எப்பிடி இவ்வாறு நடந்து கொண்டோம் என்று எண்ணி நாணினேன் ..ஐயோ நேற்று நடந்தது எல்லாம் கனவாக இருக்க கூடாதா என்று நினைக்க துவங்கினேன் ....ஒரு ஓரத்தில் மனம் ஒலிக்காத தொலை பேசியை எண்ணி எண்ணி பயந்தேன் ....நானே கூட நண்பனை அழைக்கலாமா என்று ஒரு கணம் எண்ணினேன் ,,துணிவு வர வில்லை ....


அப்போது திடீரென்று ஒழி எழும்பியது ....ஓடினேன் தொலைபேசி அருகே ..நடுக்கத்துடன் " எஸ் " என்றேன் ..." இது .... வங்கி உங்களுக்கு கடன் அட்டை வேண்டுமா " என்று மீண்டும் ஒரு இனிய குரல் ..சீசீ என்ன சபலம் மீண்டும் ..


தேவை இல்லை என்று துண்டித்து விட்டேன் ///


சிறுது நேரம் சென்று மீண்டும் ஒலி.. மீண்டும் துடுப்புடன் எடுத்தேன் .. இது அடையார்
ஆனந்த பவனா என்று மறு புறம் குரல் . எரிச்சலுடன் பதில் கூறாமல் தொடர்பை துண்டித்தேன் ..


கடைசியில்  எதிர்பார்த்த நண்பன் .. அவனுக்கு காவல் துறையில் சிறுது செல்வாக்கு உண்டு . என்னை அழைத்தான் காவல் நிலையத்திற்கு ..கதி கலங்கி போனேன் ..என் புகை படமும் அங்கு இருக்குமோ... தயங்கி தயங்கி சென்றேன் ..காவல் அதிகாரியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான் ..வங்கியில் உயர்ந்த பதவி வகித்த காரணத்தினால் நல்ல உபசாரம் ..புயலுக்கு முன்பு அமைதியா .. மனமோ நிலை கொள்ளாமல் தவித்தது ..


 பிறகு மெதுவாக என் நண்பன் பேச தொடங்கினான் . அது சரியான ஏமாற்று கும்பல் ..படம் எடுப்பது போல் நடித்து ஒரு குழப்பத்தை உண்டாக்கி மறு நாள் கடற்கரை ஓரம் வரவழைத்து தங்கள் சாகசத்தை காட்டி ஏமாற்றி பணம் பறிப்பதே தொழிலாக கொண்டவர்கள் ...என்ன என்னை என்னால் நம்ப முடியவில்ல .." அiப்போது அக்கருவியில் ஒரு படமும் இல்லையா என்று ஒரு வித நடுக்கத்துடன் கேட்டேன் ..இல்லவே இல்லை என்று நண்பன் கூறியதும் " மலை போல் வரும் சோதனை எல்லாம் பனி போல் நீங்கி விடும் " என்ற பாட்டு நினைவிற்கு வந்தது .. வினை தீர்க்கும் விநாயகன் முகம் என் கண் முன் வந்தது . .. கன்னத்தில் போட்டு கொண்டேன் அங்கேயே . வியப்புடன் என்னை பார்த்தார்கள் நண்பனும் காவல் அதிகாரியும் ..ஓடினேன் வீட்டிற்கு ..மீண்டும் விநாயகன் முன் நின்று நன்றி செலுத்தினேன் ..வீட்டிற்குள் நுழைந்தேன் .திடீரென்று அப்பெண் அன்பளிப்பாக தந்த அப்பெட்டிth நினைவிற்கு வந்தது ..திறந்து பார்த்த நான் திகைத்தேன் .......( என்ன இருந்தது என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள் )

------------------------------------------------

முதல் பதிவின் பின்னூட்டத்தில் கற்பனைக்குதிரையைத் தட்டி விடுவதாக கூறியவர்கள்


ஸ்கூல் பையன்,வே நடனசபாபதி,s.suresh,சங்கவி,ரூபக் ராம்  ஆகியோர்  வே நடனசபாபதி அவர்கள் எழுதி விட்டார். மற்றவர்களின்முடிவுகளைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!



வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013

ஒரு பொன் மாலைப் பொழுதும்.......... கதையின் ஒரு முடிவும்!

இதைப் பார்த்து விட்டுத் தொடருங்கள்

இரண்டு முடிவுகள் யோசித்து வைத்தேன்.

முதலாவது ஒரு காமெடியான முடிவு!

இரண்டாவது ஒரு த்ரில்லான காமெடியான முடிவு

இதோ முதல் முடிவு......................
---------------------------------------------------------------------------



மறுநாள் திடீரென்று வெளியூர் செல்ல நேர்ந்தது.

காலையில் சதாப்தியில் புறப்பட்டேன்(ரயில்வே நண்பர் உதவி).

மணி பத்து இருக்கும்.

கைபேசி ஒலித்தது

பார்த்தேன்.

தெரியாத எண்.

“ஹலோ”

“ஹலோ,சென்னைபித்தன் சாரா!”

“ஆமாம்”

”நாங்க ..........காபி ஷாப்பிலிருந்து  பேசுகிறோம்.”

“சொல்லுங்கள்”

”உங்கள் விலாசம் வேண்டும்.உங்களுக்கு எங்கள் நன்றியாக ஒரு காசோலை அனுப்ப வேண்டும்”

எனக்கெதற்குக் காசோலை?

எனக்குள் ஒரு சிறு எச்சரிக்கை மணி ஒலித்தது.
”நான் வெளியூர் சென்று கொண்டிருக்கிறேன்.திரும்பி வந்ததும் இந்த நம்பர்ரைத் தொடர்பு 
கொள்கிறேன்”இணைப்பைத் துண்டித்தேன்.

அன்று முழுவதும் ஒரு சிறு உறுத்தல்;ஏதாவது பிரச்சினை இருக்குமோ?

மைசூரில் ஒரு வார வேலை.

ஒரு வாரத்துக்குப்பின் சென்னை திரும்பினேன்.

அன்று மாலை.அந்த காபி ஷாப் இருக்கிறதா என்று பார்க்கப் புறப்பட்டேன்.

கடற்கரைச்சாலையை நெருங்கிவிட்டேன்.

ஓரிட்த்தில் இளைஞர் கூட்டம் இருந்தது.

அதில் இருந்தவர்கள் என்னைப்[பார்த்த்தும் தமக்குள் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டனர்.

சிறிது தொலைவில் வலது பக்கம் ….காபி ஷாப் என்ற போர்டு  தெரிந்தது.

நெருங்கினேன்.

இப்போது  காபிஷாப் வாசலில் வைக்கப் பட்டிருந்த ஒரு பெரிய பலகை கண்ணில் பட்டது.

அதில் இருந்த படத்தில் நான்;அருகில் அந்தப்பெண்.இருவர் மட்டுமே.மூன்றாவது நபர் இல்லை.

இருவரும் உரசிக்கொண்டு நின்று கொண்டிருந்தோம்.ஆனால் அன்று அப்படி அல்ல!
கீழே வாசகம்……

“இந்த வயதிலும் என் இளமையான தோற்றத்துக்கும்,இளமை முறுக்குடன் செயல் படுவதற்கும்…  நான் தினந்தோறும் காபி ஷாப்பின் மூலிகை டீ  அருந்துவதே  காரணம்.”

ஹா ஹா ஹா!
……………………………….