தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 23, 2011

உணவு உலகம்!

மனிதனது அடிப்படைத் தேவைகள் மூன்று-உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இடம்.எத்தனையோ இடங்களில்,எத்தனையோ விதமான உணவுகளைச் சுவைத்திருப்போம். ஆனால் சில உணவுகளின் சுவை நம் நாக்கை விட்டு மட்டுமல்ல,நம் நெஞ்சை விட்டும் நீங்குவதில்லை.அத்தகைய உணவுகளைப் பற்றியும்,சம்பந்தப்பட்ட,நிகழ்ச்சிகள்,மனிதர்கள் பற்றியும் நினைத்துப் பார்க்கிறேன்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது,கோவில்பட்டியில் பால முருகன் கஃபே என்றொரு ஓட்டல் இருந்தது.இது அங்கு செய்யப்படும் உப்புமா பற்றியது.

கோவில்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஹாக்கிப் போட்டிகள் நடை பெறும்.ஓர் ஆண்டில்,பெரம்பூர் தெற்கு ரயில்வே அணியினர் பிரமாதமாக ஆடி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.போட்டியன்று,அந்த அணியினருக்கு பாலமுருகன் ஓட்டலில் என் அண்ணாவும் நண்பர்களும் டிஃபன் வாங்கிக் கொடுத்தனர்.ஓர் உப்புமா சாப்பிட்டவர்கள் அதன் சுவையில் மயங்கி இன்னோர் உப்புமாவும் சாப்பிட்டனர்.உப்புமா வயிற்றில் போய் அமர்ந்து விட்டது போலும்!வழக்கமான வேகம் ஆட்டத்தில் இல்லை.விளைவு அவர்கள் தோற்றனர்! யார் மறந்தாலும் அவர்கள் மறக்க மாட்டார்கள் அந்த உப்புமாவை!

என்னைப் பொறுத்தவரை விவேகானந்தா கல்லூரி விடுதியில் சாப்பிட்ட மோர்க் குழம்பும்,மைசூர் ரசமும்,வெஜிடபிள் புலாவும்,சப்பாத்தி குருமாவும்,ரவா பொங்கலும் மறக்க முடியாதவை.

பட்ட மேற்படிப்பு முடிந்து சில காலம் திருச்சி தனிப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன்.அது எனது நல்லூழ் என நினைக்கிறேன். ஏனென்றால் அங்குதான் எனக்குப் புலவர் கீரனின் அறிமுகம் கிடைத்தது. அவரும் அங்கு பணி புரிந்து வந்தார். நான் கல்லூரி விடுதியில் வார்டனாகவும் இருந்ததால்,எனக்கு ஒரு பெரிய அறை கொடுத்தி ருந்தார்கள். பல நேரங்களில் அங்கு அமர்ந்து நானும் கீரனும் பேசிக் கொண்டிருப்போம்.

மன்னிக்கவும்;பதிவு உணவு பற்றியது! ’கீரனும் நானும்’ என்ற தலைப்பில் பின்னர் எழுதலாம்.இப்போது எழுத வேண்டியது ’கீரையும் நானும்’ என்பது போல்தான்.

திருச்சியில் இரவுச் சாப்பாட்டுக்கு மாயவரம் லாட்ஜ்,அல்லது RTC லாட்ஜ் இரண்டில் ஒன்று.நானும் என் நண்பன் வைத்தியநாதனும் போவோம்.மேசையில் அமர்ந்து சாப்பிடுவதில்லை உள்ளே போய்ப் பலகையில் அமர்ந்து வாழை இலையில் எக்ஸ்ட்ரா நெய்யுடன் சாப்பிடும் சுகம்!ஆகா!மாயவரம் லாட்ஜில் செவ்வாயன்று இரவு,முருங்கைக்காய் போட்டு ஒரு பொரித்த குழம்பு செய்வார்கள் பாருங்கள்,அதன் சுவை மறக்க முடியுமா!

ஒரு நாள் RTC லாட்ஜில் சாப்பிடும்போது,கொஞ்ச சாதம் மிச்சம் வைத்தேன். மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் என்னருகில் வந்து” அன்னத்தை எறியக்கூடாது, சாப்பிடுங்கோ” என்று சொல்லவும் பதில் ஏதும் பேசாமல் சாப்பிட்டு விட்டேன்.(வீட்டில் பெரியவர்கள் சொன்னால் கேட்போமா?!)

அவர் சொன்ன அக்கருத்தையே தைத்திரீய உபநிடதம் சொல்கிறது—

“அன்னம் ந பரிசக்ஷீத”

அன்னத்தை எறியாதே!

(திருச்சியில் கீரனுடன் உணவு அனுபவங்கள் தொடரும்)

30 கருத்துகள்:

  1. வார்டனா இருந்திருக்கீங்களா ....அப்படின்னா கண்டிப்பா உங்களுக்கு இன்னொரு பேரு இருந்திருக்குமே ...

    பதிலளிநீக்கு
  2. சாப்பாட்டு நேரத்தில் வகைவகையான உணவுகளை பற்றி சொல்லி நாக்கில் எச்சில் ஊறவைத்துவிட்டீர்கள்.நானும்‘மாயா’லாட்ஜில் ஒரு வாரம் தங்கி அந்த நள பாகங்களை அனுபவித்துசாப்பிட்டிருக்கிறேன்.
    நினைவூட்டியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. போன தடவை மாறன், இப்ப உணவு உலகம். தலைப்பு வக்கிறதுல ஒரு முடிவோடதான் இருக்கீங்க. அன்னத்தை எறியக்கூடாது என்று தெரிந்தும் நீங்கள் ஏன் அந்த அன்னப்பறவையை எறிய முற்பட்டீர்கள். ப்ளூஸ் கிராசில் மாட்டிக்கொண்டால் என்ன ஆவது?

    பதிலளிநீக்கு
  4. //நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது,கோவில்பட்டியில் பால முருகன் கஃபே என்றொரு ஓட்டல் இருந்தது// இப்போ அது இல்லேன்னு நினைக்கிறேன்..ஒவ்வொரு வருசமும் ஹாக்கிப் போட்டி விழா மாதிரி நடக்கும்..இப்போ ஹாக்கி மைதானத்தையும் ப்ளாட் போட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்போ நிலைமை என்ன்ன்னு தெரியலை.

    பதிலளிநீக்கு
  5. ம்ம்ம் தொடருங்க ... எங்க நாட்டில உப்புமாவை வேறு பெயர் சொல்லி அழைப்பார்கள் ...

    பதிலளிநீக்கு
  6. மாயவரம் லாட்ஜ்... திருச்சி என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது இந்த இடம் என என் பெரியப்பா சொல்லிக் கேட்டு இருக்கிறேன்...

    வகைவகையாய்க் கீரை சாப்பிட தமிழகம் தான் வரவேண்டும்... இங்கே தில்லியில் பாலக், மேத்தி என ஒரு சில வகைகள் தான் கிடைக்கும்....

    பதிலளிநீக்கு
  7. ஐயா வலைசர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. koodal bala கூறியது...

    //ஸ்ஸ்ஸ் ......வடை//
    மசால் வடை!
    நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  9. koodal bala கூறியது...

    //வார்டனா இருந்திருக்கீங்களா ....அப்படின்னா கண்டிப்பா உங்களுக்கு இன்னொரு பேரு இருந்திருக்குமே ...//
    அது தனிப் பயிற்சிக் கல்லூரி விடுதிதானே!அங்கென்ன கண்டிப்பு?!

    பதிலளிநீக்கு
  10. வே.நடனசபாபதி கூறியது...

    //சாப்பாட்டு நேரத்தில் வகைவகையான உணவுகளை பற்றி சொல்லி நாக்கில் எச்சில் ஊறவைத்துவிட்டீர்கள்.நானும்‘மாயா’லாட்ஜில் ஒரு வாரம் தங்கி அந்த நள பாகங்களை அனுபவித்து சாப்பிட்டிருக்கிறேன்.
    நினைவூட்டியமைக்கு நன்றி.//
    ருசி தெரிந்தவர்தான்!
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  11. ! சிவகுமார் ! கூறியது...

    //போன தடவை மாறன், இப்ப உணவு உலகம். தலைப்பு வக்கிறதுல ஒரு முடிவோடதான் இருக்கீங்க. அன்னத்தை எறியக்கூடாது என்று தெரிந்தும் நீங்கள் ஏன் அந்த அன்னப்பறவையை எறிய முற்பட்டீர்கள். ப்ளூஸ் கிராசில் மாட்டிக்கொண்டால் என்ன ஆவது?//

    அன்னத்தில் விளயாடுறீங்க!
    நன்றி சிவகுமார்!

    பதிலளிநீக்கு
  12. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //நல்ல பதிவு நண்பா..//
    நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  13. உப்புமா எனக்கு பிடிக்காத ஒன்று ஒருவேளை நல்ல உப்புமா நான் சாப்பிடாமல் இருந்திருக்கலாம். எது எப்படியோ உங்க சாப்பாடு பற்றிய நீங்கா நினைவுகள் அருமை. நீங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசிக்கும் திறன் அபாரம்.

    பதிலளிநீக்கு
  14. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.//
    நன்றி இராஜராஜேஸ்வரி!

    பதிலளிநீக்கு
  15. செங்கோவி கூறியது...

    //நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது,கோவில்பட்டியில் பால முருகன் கஃபே என்றொரு ஓட்டல் இருந்தது// //இப்போ அது இல்லேன்னு நினைக்கிறேன்..ஒவ்வொரு வருசமும் ஹாக்கிப் போட்டி விழா மாதிரி நடக்கும்..இப்போ ஹாக்கி மைதானத்தையும் ப்ளாட் போட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்போ நிலைமை என்ன்ன்னு தெரியலை.//
    இதுதான் சோகமே!ஹாக்கி இல்லாத கோவில்பட்டியா?
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  16. கந்தசாமி. கூறியது...

    // ம்ம்ம் தொடருங்க ... எங்க நாட்டில உப்புமாவை வேறு பெயர் சொல்லி அழைப்பார்கள் ...//
    என்ன பெயர் என்று சொல்லவில்லையே!
    நன்றி கந்தசாமி!

    பதிலளிநீக்கு
  17. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //மாயவரம் லாட்ஜ்... திருச்சி என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது இந்த இடம் என என் பெரியப்பா சொல்லிக் கேட்டு இருக்கிறேன்...

    வகைவகையாய்க் கீரை சாப்பிட தமிழகம் தான் வரவேண்டும்... இங்கே தில்லியில் பாலக், மேத்தி என ஒரு சில வகைகள் தான் கிடைக்கும்....//
    தில்லி போன பின்தான் நான் முதலில் பாலக் சாப்பிட்டேன்-பாலக் பன்னீர்!
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  18. ரியாஸ் அஹமது கூறியது...

    //ஐயா வலைசர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்//
    நன்றி ரியாஸ்!

    பதிலளிநீக்கு
  19. கே. ஆர்.விஜயன் கூறியது...

    //உப்புமா எனக்கு பிடிக்காத ஒன்று ஒருவேளை நல்ல உப்புமா நான் சாப்பிடாமல் இருந்திருக்கலாம். எது எப்படியோ உங்க சாப்பாடு பற்றிய நீங்கா நினைவுகள் அருமை. நீங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசிக்கும் திறன் அபாரம்.//
    வாங்க இனிய விஜயன். இப்பவெல்லாம் திடீரென்று வருகிறீர்கள்!ரொம்ப பிஸியோ!
    எனக்கும் உப்புமா பிடிக்காதுதான்!
    நன்றி விஜயன்!

    பதிலளிநீக்கு
  20. இன்னைக்கு காற்று நம்ம பக்கமா அடிக்கிறமாதிரி இருக்கே!

    பதிலளிநீக்கு
  21. FOOD கூறியது...

    //இன்னைக்கு காற்று நம்ம பக்கமா அடிக்கிறமாதிரி இருக்கே!//
    இது தென்றல்தான்,புயல் அல்ல!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  22. நானும் அந்த மாயவரம் உணவின் சுவை அறிந்தவன் தான் ஐயா , ஆண்டார் வீதியில் மதுரா என்றும் ஒரு ஹோட்டல் உண்டு அதன் சுவையும் வத்தல் குழம்பும் அருமையாக இருக்கும்

    உங்களின் இளமைகால பதிவிற்கு நன்றி
    நாவின் சுவை கூடியது

    பதிலளிநீக்கு
  23. நல்ல அனுபவ பகிர்வு பாஸ்

    பதிலளிநீக்கு
  24. அது எனது நல்லூழ் என நினைக்கிறேன்.//

    வணக்கம் ஐயா,
    தாங்கள் நலம் தானே?

    பழந் தமிழை அச்சரம் பிசகாமல் இளையோரும் அறிந்து வைத்திருக்க வேண்டும் எனும் நோக்கில்,
    ஒவ்வோர் பதிவிலும்
    ஒவோர் பண்டைத் தமிழ்ச் சொற்களைச் சேர்க்கும் உங்களின் முயற்சிக்குத் தலை வணங்குகிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  25. உங்களின் வாழ் நாளில் நீங்கள் உண்டு மகிழ்ந்த விதம் விதமான, சுவையான உணவுகளைப் பற்றிய குறிப்புக்களைப் பதிவாக்கியிருக்கிறீங்க.
    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  26. மைந்தன் சிவா கூறியது...

    // நல்ல அனுபவ பகிர்வு பாஸ்//
    நன்றி சிவா!

    பதிலளிநீக்கு
  27. நிரூபன் கூறியது...

    அது எனது நல்லூழ் என நினைக்கிறேன்.//

    //வணக்கம் ஐயா,
    தாங்கள் நலம் தானே?

    பழந் தமிழை அச்சரம் பிசகாமல் இளையோரும் அறிந்து வைத்திருக்க வேண்டும் எனும் நோக்கில்,
    ஒவ்வோர் பதிவிலும்
    ஒவோர் பண்டைத் தமிழ்ச் சொற்களைச் சேர்க்கும் உங்களின் முயற்சிக்குத் தலை வணங்குகிறேன் ஐயா.//
    தங்களைப் போன்ற நண்பர்களின் நல் வாழ்த்துகளால் நலமே!
    தங்கள் கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  28. நிரூபன் கூறியது...

    // உங்களின் வாழ் நாளில் நீங்கள் உண்டு மகிழ்ந்த விதம் விதமான, சுவையான உணவுகளைப் பற்றிய குறிப்புக்களைப் பதிவாக்கியிருக்கிறீங்க.
    ரசித்தேன்.//
    நான் ருசித்ததைச் சொன்னேன். நீங்கள் ரசித்தீர்கள்!

    பதிலளிநீக்கு